Tuesday 26 June 2018

The Forgotten Queen Mother


பகுதி 1 - பெர் லாஷ்யாஸ்

பெர் லாஷ்யாஸ்.... இது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கும் மிகப்பெரிய இடுகாடு.. 110 ஏக்கர்... 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நிரந்தரமாக உறங்குகிறார்கள். இந்த இடுகாட்டிற்கு வருடத்திற்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள்.

காரணம், இந்த இடுகாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஆட்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற கவிஞரும், நாடகாசிரியருமான ஆஸ்கார் வைல்ட், ஹோமியோபதி கண்டுபிடித்து ஹானேமான், தண்ணீர் என்பது இரண்டு வாயுக்களின் கலவை என்று கண்டுபிடித்த கே லூஸாக், பாடகர் ஜிம் மாரிஸன்... இன்னும் பலபல பிரபலங்கள் இங்கே உறங்குகிறார்கள். லிஸ்ட் ரொம்ப பெருசு..!

மெயின் கதைக்குள் போவதற்கு முன்னர் ஒரு குட்டி, சைடு கதையை பார்ப்போம். 1804-ல் நெப்போலியன் இந்த இடுகாட்டை நிறுவியிருக்கிறார். (இடுகாட்டை என்னடா நிறுவறது...!?). ஏழை, பணக்காரன், மதம், இனம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், யாராக இருந்தாலும் அவர்களது சடலங்கள் இங்கே புதைக்கப்பட வேண்டும் என்பது நெப்போலியனது ஆணை. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக இடுகாட்டில் ‘கூட்டம்’ சேரவில்லை.

காரணம் அப்போது இருந்த பாரீஸ் நகரிலிருந்து இடுகாடு ரொம்ப தூரம்... (இப்போது டைரக்ட் மெட்ரோ வசதிகள் கூட உண்டு). அடுத்து சர்ச் ஒப்புக்கொண்ட இடுகாட்டில்தான் உடலை புதைக்கவேண்டும் என்று கத்தோலிக்கர்கள் அடம்பிடித்தனர். ஒரு வருட காலத்தில் வெறும் 13 பேர்தான் புதைக்கப்பட்டனர்.

எப்படிடா இடுகாட்டில் கூட்டத்தை சேர்ப்பது என்று கொஞ்சம் யோசித்த அதிகாரிகள், ஒரு பெரிய விழாவொன்று எடுத்து, எங்கோ வேறிடத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கவிஞர்களின் சடலங்களை கொண்டுவந்து இங்கே புதைத்தார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து ஒரு தத்துவ பேரறிஞர் மற்றும் ஒரு எழுத்தாளரின் சமாதியையும் அதே போல இடம் மாற்றினார்கள்.

அப்புறமென்ன, பெர் லாஷ்யாஸ் இடுகாடு புகழ் பெற்றது.... லட்சக்கணக்கானோர் இங்கே வந்து இறுதி துயில் கொண்டனர். இப்போது இடுகாட்டில் கொஞ்ச இடம்தான் இருக்கிறது... இடம் கிடைக்க படுகிராக்கி..!

சரி, இனி மெயின் கதைக்கு வருவோம்.... பல தத்துவ மேதைகள், அறிவியல் அறிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், இசைஞர்களின் கல்லறைகள் இங்கே நினைவு சின்னங்களோடு, அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட இடுகாட்டில், பராமரிக்கப்படாமல், உடைந்து போன கற்களோடு, வானமே கூரையாக கொண்ட, பாழடைந்த கல்லறையில் உறங்குகிறார் அவ்த் ராஜ்யத்தின் ராஜமாதா மலிகா கிஷ்வார் என்றழைக்கப்படும் பேகம் ஜனாப்-இ-ஆலியா....!

பகுதி 2 - அவ்த் ராஜ்யம்

வரலாற்றின் இடைவிடாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் நமக்கு தேவையான சம்பவங்களை மட்டும் எடுத்து கோர்த்து வசதிக்குதான்.... ஆனால், அந்த நிகழ்வுகள் நமக்கு கோர்வையாக புரியவேண்டுமென்றால் நாம் காணப்போகும் வரலாற்று காலத்திற்கும் கொஞ்சம் முன்னே போகவேண்டும். அதிகம் இல்லை, இன்றிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் பின்னால் போவோம். அவ்த் ராஜ்யத்தின் வரலாற்றை படுவேகமாக புரட்டி பார்த்து விட்டு நம் கதைக்குள் போய்விடுவோம்.

அவத் (Awadh) அல்லது அவ்த் (Oudh) என்னும் ராஜ்யம், உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை மற்றும் பல நதிகள் பாயும், நேபாளை ஒட்டிய மிக வளமான பகுதியாகும். ஔத் என்னும் பெயரே, ராமாயணத்து அயோத்தியா நகரின் பேரை ஒட்டி இருப்பதை கவனியுங்கள். இங்கு பேசப்படும் அவதி என்னும் மொழி, கிழக்கத்திய ஹிந்தி எனப்படுகிறது.

முகலாய பேரரசர் அக்பர் அவருடைய சாம்ராஜ்யத்தை மாகாணங்களாக பிரித்த போது அவ்த் ராஜ்யமும் ஒரு மாகாணம்... முகலாயர்களுக்கு அடங்கியே அவ்த் ஆட்சியாளர்கள் (சுபாதார் என்று அழைப்பார்கள்) இருந்தனர். அதில் முக்கியமானவர் சாதத் அலி என்பவர்.
ஔரங்கசீப் 1707-ல் மறைந்த பிறகு முகலாய பேரரசு வலிமை இழந்த காலத்தில், இவர் அவ்த் ராஜ்ஜியத்தின் முதல் நவாப் ஆனார். இவர்தான் ஃபைஸாபாத் நகரை கட்டியவர்.
இரண்டாம் நவாப் காலத்தில் அவ்த் பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்தது. இதுதான் அவ்த் அரசின் பொற்காலம். இவரை ஏதோ சதியில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்.

மூன்றாவது நவாப் காலத்தில் பக்ஸார் போர் (1764) என்னும் முக்கியமான சண்டை நடந்தது. முகலாயர்கள் தலைமையில் அவ்த் நவாபும் போரில் கலந்து கொண்டார். 40000 பேர் கொண்ட இந்திய படையை 18000 பேர் கொண்ட கம்பெனி படை எளிதாக தோற்கடித்தது..! நம்ம நவாப் போர்க்களத்திலிருந்து ‘எஸ்‘ ஆகிவிட்டார். அவ்த் அரசில் கொஞ்சம் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி விழுங்கியது. இருந்தாலும் அவ்த் இன்னமும் ஒரு பணக்கார மாகாணம்தான்… முகலாயர்களுக்கு கட்டுப்பட்டே அவ்த் அரசு இருந்தது.

நாலாவது நவாபின் அம்மா கொஞ்சம் பிடுங்கல் கேஸ்…. அதனால் அவர், தலைநகரை ஃபைஸாபாத்திலிருந்து லக்னோவுக்கு மாற்றி கொண்டு தனிக்குடித்தனம் வந்துவிட்டார். (மூன்றாவது நவாப் மாற்றியதாகவும் சொல்கிறார்கள்). அதிலிருந்து லக்னோ நகருக்கு ஏறுமுகம்தான்…. ஃபைஸாபாத் நகரம் கொஞ்சம் பொலிவிழந்தது. லக்னோ என்னும் பெயரும் ராமாயண லக்ஷ்மணன் பேரிலிருந்து வந்ததுதானாம்.

இதுவரை ஆண்ட அவ்தின் நவாப்கள் ஓரளவு திறமைசாலிகள்… செல்வ வளம் மிக்க பூமியின் துணைகொண்டு முகலாயர்கள், ஆப்கானியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் அனைவரையும் இந்த நவாப்களால் சமாளிக்க முடிந்தது.

இதற்கப்புறம் வந்த நவாப்கள் வீக் டைப்தான்… 1801ல் அவ்த் அரசு, பாதி ராஜ்யத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு தந்துவிட்டது… படைகளையும் வெகுவாக குறைத்து கொண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை பாதுகாப்புக்கு வைத்து கொண்டது. முகலாயர்களின் கட்டுப்பாட்டை விட்டு விலகி அவ்த் அரசு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

நம் கதை நடந்த காலகட்டம் 1856.... கிழக்கிந்திய கம்பெனி அசுர பலத்துடன் இந்தியாவில் வேறூன்றியிருந்தது. 1818-ல் மராத்திய பேரரசு இறந்து போயிருந்தது.... 1849-ல் சீக்கிய பேரரசு மறைந்து போயிருந்தது. முகலாய பேரரசு சுருங்கி போய், ஒரே ஒரு அரண்மனையை மட்டும் ‘ஆட்சி’ செய்துக்கொண்டு, சாகும் தருவாயில் மெலிதாக நூலளவு மூச்சு விட்டு கொண்டிருந்தது. கம்பெனியின் தயவிருந்தால் மட்டுமே ஆட்சி நிலைக்கும் என்ற நிலையில்தான் இந்திய அரசுகள் இருந்தன.

சீரும் சிறப்புமாக இருந்த அவ்த் அரசு, இப்போது பலமிழந்து போய், சும்மா பழம்பெருமை பேசி கொண்டிருந்த ஒரு ராஜ்யம். ஆனால், இப்போதும் அது பொன் விளையும் பூமிதான்.... அதனால், ஆங்கிலேயர்களுக்கு அதன் மேல் ஒரு கண்....! அப்போதைய நவாப் வாஜீத் அலி ஷா... வெறும் பொம்மை நவாப்...!

பகுதி 3 - Doctrine of Lapse

துணைகண்டத்தில் பலமாக தன்னை நிலைநிறுத்தியிருந்த கிழக்கிந்திய கம்பெனி சின்ன சின்ன இந்திய ராஜ்யங்களை விழுங்குவதற்கு Doctrine of Lapse என்று ஒரு கொள்கை வகுத்தது. அது என்ன கொள்கை?

ஒரு அரசருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால் உறவினர்களின் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொள்வது வழக்கம்... Lapse doctrine இதை ஒப்புக்கொள்ளவில்லை... ஒரு அரசருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசரின் காலத்திற்கு பிறகு அந்த ராஜ்யம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்துவிடும். இதுதான் அந்த கொள்கை. (செம கொள்கை..!)

கொள்கையிலே இன்னொரு பாயிண்டும் உண்டு... எந்த அரசராவது ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால், அந்த ராஜ்ஜியத்தை கிழக்கிந்திய கம்பெனி எடுத்து கொண்டுவிடும்... இப்போ இருக்கும் ஆர்ட்டிகள் 356 போல.

சரி, ஆட்சி ஒழுங்காக நடத்தவில்லை என்று யார் தீர்மாணிப்பது? அதையும் கிழக்கிந்திய கம்பெனியே தீர்மாணிக்கும்.

356 செயல்படும் அதே modus operandi-தான். முதலில் ரெஸிடென்ட் என்பவரை கிழக்கிந்திய கம்பெனி நியமிக்கும். அவர் அந்த ராஜ்ஜியத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பார்.... கொஞ்ச காலம் கழித்து ராஜா சரியில்லை என்று ஒரு ரிப்போர்ட் தருவார்... அப்புறமென்ன..? ராஜ்யம் கிழக்கிந்திய கம்பெனியின் பாக்கெட்டுக்குள் போய்விடும்.
அவ்த் ராஜ்யத்திற்கு அப்படி நியமிக்கப்பட்ட ரெஸிடென்ட், கர்னல் வில்லியம் ஸ்லீமேன் என்பவர். A journey through the kingdom of oudh in 1849-1850 என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவ்த் நவாப் நாட்டை ஒழுங்காக அரசாளவில்லை என்பது ஸ்லீமேனின் ரிப்போர்ட்.

அவ்த் அரசின் நவாப் வாஜீத் அலி ஷா பாட்டு, நடனம் என்று காலம் கழித்து கொண்டிருந்தார். ஆங்கிலேய படைகள் திடீரென முன்னேறி லக்னோ எல்லையில் அபாயகரமாக நின்றன. ஆங்கிலேய தளபதி அவுட்ரேம் என்பவரும், ஸ்லீமேனும் 1856, பிப்ரவரியில் நவாபை சந்தித்தார்கள். ஆங்கிலேயரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அல்லது ஆங்கில படைகளை எதிர்கொள்ளவேண்டும்.

ஆங்கிலேயர்களால் ஏற்கனவே மனம் நொந்திருந்த நவாப் தன் விதியை ஏற்றுகொண்டார். “ஒப்பந்தம் என்பது சமமானவர்களுடன் செய்து கொள்வது... வல்லமை பொருந்திய கம்பெனி, சாதாரணமானவனான என்னுடன் எப்படி ஒப்பந்தம் செய்யமுடியும்?” என்று கேட்ட நவாப் தன் தலைப்பாகையை கழற்றி ஸ்லீமேன் கையிலே கொடுத்தார். “நான் இப்போது நவாப் இல்லை... என்னால் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட முடியாது” என்றார்.

வந்த வேலை சுலபமாக முடிந்தது... ராஜ்ஜியம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்துவிட்டது. வாஜீத் அலியையும், அவரது குடும்பத்தினர்களில் முக்கியமானவர்களையும் கொல்கத்தாவிற்கு ‘பத்திரமாக’ அழைத்து சென்ற ஆங்கிலேயர்கள் ஒரு ‘மாளிகையில்’ தங்க வைத்தனர்.

ஸ்லீமேன் குறித்த சுவையான விஷயங்கள்.. ஸ்லீமேனின் அஸிஸ்டென்ட் ராபர்ட் பேர்டு பின்னாளில் ஸ்லீமேனின் குற்றச்சாட்டை மறுத்தார். மோசமான ரிப்போர்ட் தரவேண்டுமென்பது ஸ்லீமேனுக்கு முன்கூட்டியே தரப்பட்ட உத்தரவு என்றார் அவர். அதாவது, ரிப்போர்ட் ஃபிக்ஸிங்..!

அவ்த் ராஜ்யத்தை கிழக்கிந்திய கம்பெனி தன்வசப்படுத்தி கொள்வதை ஸ்லீமேனும் எதிர்த்தார். ஆனால், அவரது எதிர்ப்பு உதாசீனப்படுத்தப்பட்டது. ஸ்லீமேனை மேலிடம் ஏமாற்றியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. சில மாதங்களிலேயே கடல்விபத்து ஒன்றில் ஸ்லீமேன் இறந்து போனார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்தியபிரதேசத்தில் ஸ்லீமேனாபாத் என்னும் ஒரு கிராமம் கூட உண்டு...!

பகுதி 4 - வாஜீத் அலி

வாஜீத் அலி ஏன் இப்படி வெள்ளைக்காரன் காலிலே விழுந்தார்...? காரணம் ரொம்ப சிம்பிள்... ஆங்கிலேயர்களின் படைபலம் அப்படிப்பட்டது....போர் செய்தெல்லாம் வெல்லமுடியாது. வாஜீத் அலி தன் பக்கம் நியாயம் மட்டுமே இருப்பதை அறிந்திருந்தார். இந்தியாவில் உள்ள வெள்ளையர்களுடன் பேசி பிரயோஜனம் இல்லை... உண்மையான அதிகாரம் இங்கிலாந்தில் இருக்கிறது. அங்கு போய் முறையிட்டால் தனக்கு ராஜ்யம் திரும்ப கிடைத்து விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆங்கிலேய நீதியை எதிர்பார்த்த ஒரு அப்பாவி, முட்டாள் ராஜா...!

ராஜா வேண்டுமானால் அப்படி யோசிக்கலாம்... ஆனால், குடிமக்கள் அப்படி நினைக்கவில்லை... அவ்த் ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய கலவரம் ஆரம்பித்தது. கலவரத்திற்கு தலைமை ஏற்றது ராஜாவின் ராணிகளில் ஒருத்தியான பேகம் ஹஸ்ரத் மஹால். முதல் சுதந்திர போரின் முக்கிய வீரரான நானா சாஹேப்புடன் இணைந்து அவர் பணியாற்ற தொடங்கினார்.

இங்கே கொல்கத்தாவில் நிலைமை வேறுவிதமாக போனது... இங்கிலாந்திற்கு கடற்பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு ராஜாவிற்கு உடல்நலம் ஒத்துழைக்கவில்லை... கடற்பயணம் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். பின் இங்கிலாந்திற்கு யார் போவது...? நீதிக்காக போராடுவது..?

நவாபின் தாயார், ராஜமாதா மலிகா பொறுப்பேற்க முன் வந்தார்... தன் வம்சத்தினரின் உரிமைக்காக விக்டோரியா மகாராணியை சந்தித்து வாதாட அவர் தயாராக இருந்தார். என்ன இருந்தாலும், விக்டோரியா மகாராணியும் ஒரு பெண்தானே... ஒரு பெண்ணின் உணர்வுகள் இன்னொரு பெண்ணுக்கு புரியும் என்பது அவரது சென்டிமெண்ட் கணக்கு..!
ஆக, தன் அந்தப்புரத்தை தாண்டி எதையும் அறியாத, அந்த பெண்மணி, தன் மகன், பேரன் ஆகியவர்களின் அரசுரிமைக்காக கடல்கடந்து போனார். புரியாத கலாச்சாரம், பருவநிலை, முன்பின் தெரியாத ஆண்கள் – எதுவாக இருந்தாலென்ன.... ராஜமாதா மலிகா மிகுந்த துணிச்சலுடன் இங்கிலாந்து சென்றார்.

மலிகா உண்மையில் திறமையான பெண்மணிதான்.... Doctorine of Lapse-ன் கீழே ஸ்லீமேன் ஒப்பந்தம் தயார் செய்தபோது முதலில் அதை மலிகாவிடம்தான் காட்டினார். இதிலிருந்து மலிகாவின் திறமையையும், செல்வாக்கையும் நாம் உணரலாம். (நடக்கப்போகும் கசப்பான நிகழ்வுகளை விரும்பாத மலிகா, தன் மகனிடமே டீல் செய்து கொள்ளுமாறு ஸ்லீமேனிடம் கூறிவிட்டார்)

நவாபின் தாயார் மலிகா இங்கிலாந்தில் நீதி கேட்டு போராட்டம் மேற்கொண்டார்... இங்கே இந்தியாவில், அவரது மருமகள் ஹஸ்ரத் மஹால் கத்தியெடுத்து வெள்ளையர்களுக்கு எதிராக போராடி கொண்டிருந்தார். நவாப் என்ன செய்து கொண்டிருந்தார்?

நவாப் சீரும், சிறப்புமாக ஆட்சி செய்த தன் முன்னோர்களையும், தன்னுடைய இயலாமையையும் எண்ணி மருகி கொண்டிருந்தார். ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் புறநகரில் சில ஏக்கர் நிலங்களை ஒதுக்கி தந்தனர்... ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் பென்ஷன்... லக்னோவை மறக்க முடியாத நவாப், அந்த பகுதியில் லக்னோ ஸ்டைலில் சில கட்டிடங்களை கட்டி விட்டு, தனக்கு பிடித்த இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆட்சி தன் கைக்கு திரும்பி வராது என்பதை அவர் மனமுவந்து ஏற்று கொண்டு விட்டார்.

ஹ்ம்... நவாப் ஒழுங்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்தால், அவருக்கு ஒப்பந்தப்படி 15 லட்சம் பென்ஷன் கிடைத்திருக்கும்.... தொப்பியை கழட்டி கொடுத்ததால், வெள்ளையர்கள் டென்ஷன் ஆனார்களோ, என்னவோ...? பென்ஷன் 12 லட்சமாக குறைக்கப்பட்டுவிட்டது.

பகுதி 5 - இங்கிலாந்தில் முயற்சிகளும், தோல்விகளும்

மலிகாவின் இங்கிலாந்து பயணம் வெற்றிகரமாக அமையவில்லை... முதலில் விக்டோரியா மகாராணியை சந்திப்பதற்கே நாக்கு தள்ளி விட்டது. மகாராணியின் அப்பாயின்ட்மெண்ட்டே கிடைக்கவில்லை... இடையில் பல பேர் மலிகாவை ஏமாற்றி காசு பிடுங்கி விட்டனர்.

ஒருவழியாக விக்டோரியா மகாராணியை மலிகா சந்தித்தார். ஆனால், பேட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் மலிகாவிற்கு ஒரு விஷயம் புரிந்தது... இங்கிலாந்தின் உண்மையான அதிகாரம் பாராளுமன்றத்தில் உள்ளது... ராணி என்பது ஒரு மரியாதைக்குரிய பதவி, அவ்வளவுதான்...! விக்டோரியா மகாராணியிடம் படகுகளை பற்றியும், இங்கிலாந்து கட்டிட கலையை பற்றியும் மட்டும்தான் பேச முடிந்தது. லக்னோ ஆட்சியுரிமை பற்றி..? மூச்..!

மலிகா மனமுடைந்து விடவில்லை.... அவரது அடுத்த முயற்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தை நோக்கி..! பெரும் பிரயத்தனங்களுக்கு பிறகு இங்கிலாந்து பாராளுமன்றம் அவ்த் அரசுரிமையை பற்றி பேச ஒப்புக்கொண்டது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை. காரணம், அவ்தின் ராஜமாதா ‘பணிவான வார்த்தைகளை’ உபயோகித்து தன் மகஜரை எழுதவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.

அதற்குள், இந்தியாவில் முதல் சுதந்திர போர் (1857) வெடித்து விட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடக்கும் போது, அதுவும் அவ்த் அரசுரிமையை ஒரு முக்கியமான பிரச்சனையாக முன்வைத்து போர் நடந்து கொண்டிருக்கும் போது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் என்ன உதவி கிடைக்கும்?

அவமானங்களையும், தோல்விகளையும் மட்டுமே சந்தித்த ராஜமாதா, அடுத்ததாக பிரான்ஸ் செல்ல நினைத்தார். (பிரான்ஸிடம் உதவி கோர நினைத்திருக்கலாம் அல்லது கடற்பயணத்தை தவிர்க்க பிரான்ஸ் வழியாக இந்தியா வர நினைத்திருக்கலாம்... தெரியவில்லை). மலிகாவிற்கு எதிராக விதி இன்னும் கொஞ்சம் விளையாடியது.

அப்போதுதான் பிரான்ஸ் அரசு தன் சட்டங்களை மாற்றியிருந்தது. அதற்கு முன் பிரிட்டனிலிருந்து செல்பவர்கள் பிரான்ஸிற்குள் தாராளமாக, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நுழையலாம். ஆனால், இப்போது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரான்ஸிற்குள் அனுமதி.

வேறுவழியில்லாத ராஜமாதாவும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்தார். அங்குதான் ஆங்கிலேயர்கள் அவருக்கு ஒரு முக்கியமான செக் வைத்தார்கள். ராஜமாதா மலிகா தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகளாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றனர்.

அதாவது, அவ்த் ராஜ்யம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை சேர்ந்தது என்பதை ராஜமாதா தன் வாயாலேயே ஒப்புக்கொள்ளவேண்டும். இது எப்படி இருக்கு...?

பகுதி 6 - ராஜமாதாவின் மரணமும், பிற்கால சம்பவங்களும்

இங்கிலாந்தின் சூழ்ச்சி நிபந்தனைகளுக்கு ராஜமாதா ஒப்புக்கொள்ளவில்லை... அவருக்கு பாஸ்போர்ட்டும் வழங்கப்படவில்லை. மலிகா எப்படியோ சமாளித்து பிரான்ஸிற்கு வந்துவிட்டார். (பிரான்ஸ் அரசு விலக்கு அளித்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது)

இதற்குள் ராஜமாதாவின் உடல்நிலை முற்றிலும் சீரழிந்துவிட்டது... தன் முயற்சிகளில் தோல்வியடைந்த அந்த ராஜகுலத்து பெண்மணி 1858 ஜன 24ம் நாள் பிரான்ஸிலேயே உயிர்நீத்தார். அவரது உடல் பெர் லாஷ்யாஸ் இடுகாட்டிலே புதைக்கப்பட்டது.

இங்கிலாந்து வேண்டுமானால் மலிகாவை மதிக்காமல் போகலாம்... ஆனால், பாரசீக, துருக்கிய சுல்தான்களின் தூதர்கள் மலிகாவிற்கு மரியாதை செலுத்தினர். கல்லறையிலே பளிங்கினால் ஒரு நினைவு ஸ்தம்பமும் (Cenatoph) கட்டப்பட்டது. பின்னாளில் மலிகாவின் இன்னொரு மகன், மற்றும் ஒரு கொள்ளுபேரனின் உடலும் அதே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சில பத்தாண்டுகளுக்கு பிறகு நினைவு ஸ்தம்பம் பழுதடைந்தது. இடுகாட்டின் நிர்வாகத்தார் அவ்த் நவாபை தொடர்பு கொண்டு கல்லறையை பழுதுபார்க்க பணம் கேட்டனர். தனக்கு வரும் பென்ஷனில் இந்த செலவை செய்ய கட்டுபடியாகாது என்று கூறி பணம் தருவதற்கு நவாப் வாஜீத் அலி மறுத்து விட்டார்...! யாருடைய ஆட்சி அதிகாரத்திற்காக மலிகா போராடினாரோ, அந்த மகனே அவரை ஒதுக்கி தள்ளியதுதான் கொடுமையிலும் கொடுமை...! கால ஓட்டத்தில் ராஜமாதாவின் கல்லறை சிதைந்தே போனது.

சில பிற்கால நிகழ்வுகள்

முதலாம் விடுதலை போரின்போது சில காலம் வாஜீத் அலியை சிறையில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், பின்னர் அவரை சுதந்திரமாக வாழ அனுமதித்தார்கள். வாஜீத் அலி மிகவும் சொகுசான, உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து 1887-ல் கொல்கத்தாவிலேயே இறந்தும் போனார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்புரிந்த ராணி ஹஸ்ரத் மஹால், லக்னோவை கைப்பற்றி, வாஜீத் அலியின் மகனான பிர்ஜிஸ் காதிரை (அப்போது 12 வயது) நவாபாக ஆக்கினார். ஆனால், சில மாத காலங்களிலேயே ஆங்கிலேயர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கிய ராணி ஹஸ்ரத் மஹால், நேபாளத்தில் அடைக்கலம் புகுந்து 1879ல் அங்கேயே இறந்துபோனார். ஹஸ்ரத்திற்கு தேவையான வசதிகளை ஆங்கில அரசு செய்ய தயாராக இருந்தது என்றும், அவர் அதை மறுத்து நேபாளத்திற்கு சென்றதாகவும் கூறுவார்கள்... அது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு.

1887-ல் விக்டோரியா மகாராணியின் ஐம்பதாண்டு ஆட்சி பொன்விழா கொண்டாட்டத்தில், பிர்ஜிஸ் காதிர் மன்னிக்கப்பட்டார் (1857-ல் புரட்சியில் 12 வயது பிர்ஜிஸ் ஈடுபட்டது குற்றம் அல்லவா? அதை இப்போது மன்னித்தார்கள்..! வாழ்க பிரிட்டிஷ் நீதி..!) சிறந்த கவிஞரான அவர், அதன்பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து ஐந்தாண்டுகள் வாழ்ந்தார். 1893-ல் இளவயதிலேயே கொல்கத்தாவில் இறந்து போனார்.

வாஜீத் அலி இறந்த அதே ஆண்டு, பிர்ஜிஸ் கொல்கத்தா வந்திருக்கிறார். பிர்ஜிஸ் கொல்கத்தாவில் தந்தையை சந்தித்தாரா என்பது தெரியவில்லை. தன் தாயின் போராட்டங்களை அருகிலிருந்து பார்த்த பிர்ஜிஸ், ஒரு முயற்சியும் செய்யாது, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த தந்தையை மன்னித்திருப்பாரா?

No comments:

Post a Comment