Thursday 28 June 2018

உங்க இன்ஷூரன்ஸுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கா?

GSPC, HPCL கம்பெனிகளை ONGC தலையில் கட்டி அதை மொட்டை அடித்ததை குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தேன். அடுத்த மொட்டை LIC-க்கு. பொதுத்துறை வங்கிகளிலேயே ரொம்ப மோசமான வங்கியான IDBI வங்கியை LIC தலையில் கட்ட பார்க்கிறார்கள்.

கிட்டத்தட்ட 28% Gross NPA... அதாவது, 55000 கோடிகளுக்கு மேல் வாராக்கடன். மார்ச் காலாண்டில் மட்டும் 5600 கோடி நஷ்டம். இதுதான் பெர்பாமன்ஸ் நிலவரம்.

அரசு 85% மேல் பங்குகளை வைத்திருக்கிறது. இப்போது 43% சதவிகித பங்குகளை 10500 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு திட்டம் ரெடி.

IRDA (Insurance Regulatory and Development Authority) விதிகள் படி ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி, எந்தவொரு நிறுவனத்திலும் 15% மேல் முதலீடு செய்யக்கூடாது. இப்போது IDBI பங்குகளை LIC வாங்கினால், IDBI பங்குகளில் 51% LIC வசம் வந்துவிடும். ஆகவே, இந்த முதலீட்டை IRDA அப்ரூவ் செய்யவேண்டும். நாளைக்கு மீட்டிங்... அதெல்லாம் அப்ரூவ் செய்துவிடுவார்கள் என்று நம்பலாம்.

LIC போன்ற பெரிய நிறுவனத்திற்கு 10500 கோடியெல்லாம் விஷயமல்ல... ஆனால், பிரச்சனையே வங்கியை வாங்கியபிறகு, அதை நஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க கிட்டதட்ட 1 லட்சம் கோடியை முதலீடு செய்யவேண்டும். ஆமாம், லட்சம் கோடிதான். இந்த பணம் பொதுமக்கள் தங்கள் காப்பீடுக்காக LIC-யிடம் கட்டிய பணம்... ஒரு காலத்தில் லாபத்துடன் திரும்பி வரும் என்னும் நம்பிக்கையில் மக்கள் முதலீடு செய்த பணம்...!

இந்த பணத்தை எடுத்து, ஓடாத IDBI குதிரையில் கட்டவேண்டும்.... அப்புறம் வங்கி நிர்வாகத்தில் அனுபவமே இல்லாத LIC, அந்த ஓடாத குதிரையை வெற்றிகரமாக ஓட்டவேண்டும். அந்த குதிரை ஜெயித்தால், காப்பீட்டுதாரர்கள் பணம் பத்திரம் என்று அர்த்தம்... இல்லையென்றால்...?

இன்னொரு பக்கம் IDBI வங்கி நிர்வாகத்தில் LIC தலையிடாது... அது முதலீடு செய்வதோடு நின்றுவிடும் என்றும் சொல்கிறார்கள்.

அனுபவமில்லாத துறையில் நிர்வாகம், அல்லது பணத்தை போட்டு விட்டு நிர்வாகத்தில் எந்த அதிகாரமும் இல்லாமல் வாயை மூடி கொண்டு இருப்பது – இரண்டில் எது சிறந்த தீமை?

IDBI வங்கியை LIC வாங்கக்கூடாது என்று நிதித்துறை விற்பன்னர்கள் கூறுகிறார்கள்... அரசு கேட்குமா? Btw, தற்போது நாட்டின் நிதியமைச்சர் யார்?



No comments:

Post a Comment