Monday 18 June 2018

துணி எங்கு காயப்போட வேண்டும்?


நம்ம ஊரிலே எங்கு வேண்டுமானாலும் துணி காயப்போடுவோம்... வீட்டு கேட்டிலோ... பால்கனியிலோ... மொட்டைமாடியிலோ.... உள்ளாடையோ, மற்ற ஆடைகளோ நமக்கு எந்த கூச்சமும் கிடையாது, நம் பார்வையிலும் எந்த வித்தியாசமும் கிடையாது.

ஆனால், மேற்கத்திய நாடுகளில் இந்த விஷயத்தில் கொஞ்சம் நாசூக்கு பார்ப்பார்கள். மற்றவர் பார்வையில் படும்படிக்கு துணி காயப்போட தயங்குவார்கள். (வெயில் இல்லாத காலங்களில் dryer-ல் போட்டு எடுத்து விடுவார்கள்)

இதனால், நன்மையும் உண்டு... குடியிருப்புகள் டீசண்டாக தோற்றமளிக்கும்... அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும். (எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதிரி நிறத்தில் பெயிண்ட் கூட அடிப்பார்கள்...!)

Ms Claire Mountjoy
கோலிட்டான் (Colyton) இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய டவுன்... மக்கள்தொகை மிஞ்சி போனால் 3000 பேர்தான் இருப்பார்கள்... இந்த ஊரிலே க்ளேய்ர் மௌண்ட்ஜாய் (Claire Mountjoy) என்னும் அம்மையார், மற்றவர் பார்வையில் படும்படிக்கு துணி காயப்போட்டார். லோக்கலில் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் க்ளேய்ருக்கு ஒரு மொட்டை கடுதாசி அனுப்பினார்.

ரொம்ப டீசண்டான மொட்டை கடுதாசிதான்... “அம்மணி, உங்கள் வீடு ஊரின் prime area-வில் உள்ளது. வீட்டுக்கு வெளியே துணி காயப்போடாதீர்கள்... இதனால், எங்கள் வியாபாரம் கெடுகிறது. டிரையர் உபயோகித்து கொள்ளுங்கள் அல்லது வீட்டுக்கு உள்ளேயே துணி காயப்போடுங்கள். நம்ம ஊர் அழகாக இருந்தால் நமக்கு பெருமைதானே?”

ரொம்ப பணிவுடன்தான் கடுதாசி எழுதியிருக்கிறது... ஆனால், கோலிட்டான் நகரவாசிகள் எப்போதுமே கொஞ்சம் முரட்டு பேர்வழிகள்... “என் வீடு, நான் எங்க வேணா துணி காய போடுவேன்... நீ யாருடா கேட்க?” என்று க்ளெய்ர் சோஷியல் மீடியாவில் பொங்க அவருக்கு ஆதரவு கூடிவிட்டது.

இதை தொடர்ந்து பலரும் வீட்டுக்கு வெளியே வந்து துணி காயப்போட ஆரம்பித்து விட்டார்கள்...! கேட்டால் டிரையர் உபயோகித்தால் மின்சாரம் செலவாகிறது... சுற்றுசூழல் மாசு என்று காரணம் சொல்கிறார்கள். 


ஒரே ஒரு வீட்டில் துணி காயப்போட்டதை கண்டிக்க போக, இப்போது பல வீடுகளில் வெளியிலே துணி காயப்போடுகிறார்கள்....! நல்லதுக்கு காலமில்லை என்பது கரெக்டுதான் போல..!


No comments:

Post a Comment