Friday 4 May 2018

Rural Electrification


இந்தியாவின் கிராமப்புறங்கள் அனைத்திற்கும் மின்வசதி கிடைத்துவிட்டது, இது பாஜகவின் சாதனை என்றும் செய்தி வந்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை அறிவோம்.
இப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரியம் செய்வோம். அதாவது, அடுத்த வாரத்தில் ஒரு நாள் இந்தியா முழுக்க இரவு 10 மணிக்கு அனைத்து வீடுகளிலும் மின்விளக்குகளை ஒளிர விடுவோம். அப்போது சேட்டிலைட் உதவியுடன் வானத்திலிருந்து இந்தியாவை படம் பிடித்தால் எப்படி இருக்கும்..? துணைக்கண்டமே வெளிச்சக்கடலில் மூழ்கியிருக்கும் அல்லவா...? காண கண்கொள்ளா காட்சி.... ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்காது என்பதுதான் உண்மை..!
என்ன? அப்போது அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி வந்துவிட்டது என்ற செய்தி பொய்யா? பொய்யில்லை.... உண்மைதான். ஆனால் Devil is in Details... கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.
Village Electrification (VE) மற்றும் Household Electrification (HE) என்று இரண்டு இருக்கிறது... அதாவது, ஒரு கிராமத்தில் இருக்கும் 10% வீடுகளுக்கும், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற ஒருசில இடங்களுக்கும் மின் இணைப்பு வந்துவிட்டால் அந்த கிராமம் மின்வசதி பெற்றதாக (VE) கணக்கு எடுத்து கொள்ளப்படும்.
கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு இருக்கவேண்டும் என்பதில்லை... எல்லா குடியிருப்பு இடங்களிலிலும் மின்கம்பங்கள் இருக்க தேவையில்லை... அவ்வளவு ஏன், மின் இணைப்பு பெற்ற வீட்டிற்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா என்பது கூட கணக்கு இல்லை.
இதுதான் VE. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கிடைத்தால்தான் HE. இப்போது இந்திய அரசு அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு 100% VE.
அது என்ன ‘அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு’ ? - அரசு சொல்வது உண்மைதானா என்பது யாருக்கும் தெரியாது. வெவ்வேறு அரசு வலைதளங்கள், ஆப்கள் (apps) வெவ்வேறு தரவை தருகின்றன. ஒன்றுக்கொன்று முரணாகவும் இருக்கின்றன. உதா. மின் இணைப்பு கொடுத்த கிராமங்களின் எண்ணிக்கை சில மாதங்களில் அதிகரிக்கிறது, ஆனால் மின் இணைப்பு கொடுத்த வீடுகளின் எண்ணிக்கையோ குறைகிறது. இது எப்படி சாத்தியம்? (படங்களை பாருங்கள்)


ஆக, அரசு தரும் தரவு நேர்மையானதா? தெரியாது...! சரி, போகட்டும் விடுங்கள். மின் இணைப்பு கொடுத்ததாக சொல்லப்படும் கிராமங்களின், வீடுகளின் நிலைமை எப்படியிருக்கிறது?
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் சில கிராமங்களை கள ஆய்வு செய்தது. உண்மையான மின்வசதி அந்த கிராமங்களை பல காரணங்களால் எட்டவில்லை என்பது அந்த ஆய்விலிருந்து புரிகிறது. கிராமங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக சென்றடைவதே இல்லை. எப்போது நகர்புற தேவையை மிஞ்சிய உபரி மின்சாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் கிராமங்களுக்கு மின்சாரம். இந்த நிலைமையில் மின்இணைப்புக்கு மாத வாடகை வேறு தரவேண்டும். ஏழ்மையின் காரணமாக அவர்களால் அந்த வாடகையை கூட தரமுடிவதில்லை... (அதற்கேற்ற மின்சாரமும் வருவதில்லை). முழு கட்டுரையும் படிக்க விரும்புபவர்களுக்கு - https://www.hindustantimes.com/…/story-pLilYKEh7At99BoSeERq…
பொய் சொல்லி மின் இணைப்பு தருவது, மக்களின் அறியாமை போன்ற மேலும் சில காரணங்கள். காரணங்கள் என்னவாயினும் நாம் அரசு தரவுகளில் பார்க்கும் நிலை வேறு, கள நிலவரம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கிராமங்களை மின்சாரம் சென்று அடைந்ததா என்பது ஒருவருக்கும் தெரியாது... இதுதான் உண்மை.
அரசு தரவுகளின் நிலையை பற்றி கூறினேன். ஆனால், நம்மிடம் இருப்பவை இந்த தரவுகள்தான். இந்த தரவுகளை வைத்துதான் நாம் analyse செய்யவேண்டும். இருக்கும் தரவுகளை வைத்தே தொடர்வோம்.
100% VE வந்ததே ஒரு சாதனைதான்... மோடியின் பாஜக அரசு காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்... தூங்கி வழிந்து கொண்டிருந்த காங்கிரஸை விட செயல்படும் பாஜக எவ்வளவோ சிறப்பல்லவா?
இப்படித்தான் பாஜக பிரமுகர்கள், ஆதரவாளர்கள் சொல்லி கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
மன்மோகனின் UPA அரசு ஆண்டுக்கு சராசரியாக 12000+ கிராமங்களுக்கும், 24 லட்சம்+ வீடுகளுக்கும் (Free connection to BPL Households) மின் இணைப்பு தந்திருக்கிறது. மோடியின் NDA அரசு ஆண்டுக்கு (2017 வரை) சராசரியாக ஆண்டுக்கு 4800+ கிராமங்களுக்கும், 14 லட்சம்+ வீடுகளுக்கும் மின் இணைப்பு தந்திருக்கிறது.
மன்மோகன் அரசாங்கத்தில் செயல் அதிகம், பேச்சு மிகக்குறைவு... மோடி அரசாங்கத்தில் செயல் மிகக்குறைவு, பேச்சு மிக மிக அதிகம். இதுதான் உண்மை... பாஜகவின் சாதனைகள் என்று சொல்லப்படும் விஷயங்களை தோண்டி பார்த்தால் இது போல எத்தனை உண்மைகள் வெளிவருமோ?
அடுத்து HE குறித்து காண்போம். HE என்றால் Household Electrification.
அனைத்து கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் என்னும் இலக்கு எப்போது நிர்ணயிக்கப்பட்டது தெரியுமா? 1978-ல்...! அப்போதைய இலக்குகள் – 1995 க்குள் 100% VE.... 2000 க்குள் 100% HE. ராஜீவ்காந்தி பெயரிலே திட்டம், தீனதயாள் பெயரிலே திட்டம், சௌபாக்யா திட்டம் என்று பல திட்டங்களின் உதவியுடன் இப்போது 2018ல் 100% VE அடைந்துவிட்டதாக கூறி கொண்டாடி கொண்டிருகிறோம். (VE என்றால் என்ன என்று முதல்பகுதியிலேயே சொன்னேன் அல்லவா? 10% வீடுகளுக்கு மின் இணைப்பு வந்தாலே அது VE கணக்கில் எடுத்து கொள்ளப்படும்)
இன்னமும் (ஆகஸ்ட் 2017 நிலவரப்படி) 23% வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இந்த 23% வீடுகளுக்கு அடுத்த 8 மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்று யாராவது சொன்னால் பொய் சொல்லுகிறார்கள் என்று தாராளமாக அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள். ஜூம்லா..!
என்ன காரணம்... மோடி அரசு மின்மயமாக்கியதாக சொல்லப்பட்ட கிராமங்களில் வெறும் 10% கூட முழுமையாக மின்மயமாகவில்லை... இதிலிருந்தே 100% HE எவ்வளவு கடினமானது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு இன்னும் சில பல வருடங்கள் ஆகும்.
சரி, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலேயும் 23% மின் இணைப்பு கிடையாதா... ஏற்றதாழ்வுகள் உண்டா? இதில் மாநிலங்களின் செயல்பாடு எப்படி?
100% HE சாதித்த மாநிலங்கள் இந்தியாவில் ஆறு உண்டு. அவை தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப்..
மற்ற சில முக்கிய மாநிலங்கள் – பிராக்கெட்டில் இருப்பது இன்னும் மின் இணைப்பு தரவேண்டிய வீடுகளின் சதவிகிதம். பீஹார் (53%), ஜார்கண்ட் (56%), மத்திய பிரதேசம் (40%), ராஜஸ்தான் (23%), உத்தர பிரதேசம் (49%), அஸ்ஸாம் (47%).
ஆக, தென்னிந்தியா ஏறக்குறைய முழுமையான மின் இணைப்பு பெற்றுவிட்டது (கர்நாடகாவில் 8%, தெலுங்கானாவில் 7% வீடுகள் மட்டும் பாக்கி), வடஇந்தியாவின் நிலையை பாருங்கள்...!

No comments:

Post a Comment