Tuesday 31 July 2018

NSE and Sharemarket reforms


90-களில் நரசிம்மராவும், மன்மோகனும் சேர்ந்து செய்த பல பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று, பங்கு சந்தையை நவீனமயமாக்கியதே.

24 ஆண்டுகளுக்கு முன்பு (23.7.94), NSE  ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை BSEதான் நாட்டிலேயே பெரிய பங்குசந்தை. உண்மையிலேயே சந்தைக்கடை போல கூவிக்கூவித்தான் பங்குகளை வாங்க/ விற்கவேண்டும். பேப்பரில்தான் பங்கு சர்டிபிகேட்டுகள். Delivery default-கள் அதிகம்.

NSE அவற்றையெல்லாம் மாற்றியது. முதன்முறையாக Screen Based Trading அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டரில் விலையை போட்டால் உங்கள் ஆர்டரோடு பொருந்தும் இன்னொரு ஆர்டரை கம்ப்யூட்டர் மேட்ச் செய்தது.

மன்மோஹன் NSE-ஐ தொடங்கிவைக்கிறார்
ஆரம்பத்தில் NSE சந்தையை ஒருத்தரும் மதிக்கவில்லை. NSE-ல் வர்த்தகம் ஒரு நாளைக்கு 10 கோடிதான். BSE-ல் வர்த்தகமோ 200-250 கோடி. ஒரு பங்கு சந்தை வளர வர்த்தகம் முக்கியம். வர்த்தகம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் பங்குகளை எளிதாக வாங்கவோ, விற்கவோ முடியும். இதை Liquidity என்பார்கள். ஆக, liquidity இருந்தால்தான் நீங்கள் அந்த சந்தைக்கு போவீர்கள். உங்களை போன்ற பலர் சந்தைக்கு வந்தால்தான் liquidity பெருகும். Chicken or Egg பிராப்ளம்தான்.

NSE இதை அனாயசமாக சமாளித்தது. Screen based trading  புரோக்கர்களை ஈர்த்தது. எட்டே மாதத்தில் BSE-க்கு நிகரான வர்த்தகம், 18 மாதங்களில் BSE போல ஒன்றரை மடங்கு வர்த்தகம். கொஞ்சம் கொஞ்சமாக BSE  ஆதரவு புரோக்கர்கள் NSE வசம் வந்துவிட்டார்கள்.

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பங்குகளை டிமாட்டாக (Demat) வைத்து கொள்ள, 96-ல் NSDL ஆரம்பிக்கப்பட்டது. அதே போல பங்கு வர்த்தகத்தில் default வராமல் இருக்க NSCCL ஆரம்பிக்கப்பட்டது. இவையிரண்டும் சேர்ந்து T+2 செட்டில்மெண்டுக்கு வழிவகுத்தது. (T+2 என்றால் நீங்கள் பங்குகள் வாங்கிய இரண்டு நாட்களில் உங்கள் டிமாட் அக்கௌண்டுக்கு பங்குகள் வந்துவிடும் என்று அர்த்தம்)

இவற்றுக்கெல்லாம் முன்பேயே 92ல் SEBI ஆரம்பிக்கப்பட்டு, பங்குச்சந்தைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தரப்பட்டது.

இவையனைத்தையும் செய்தது காங்கிரஸ்தான் என்பதை மறக்கக்கூடாது. காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

எதற்காக பழைய கதை என்றால், NSE ஆரம்பித்து 24 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இரவு நேரத்திலும் டிரைவேடிவ் வர்த்தகம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று தெரியவில்லை.

காரணம், Cash Market எனப்படும் உண்மையான பங்குச்சந்தை இரவிலே இயங்காது. பங்குகளின் விலையை அடிப்படையாக வைத்துதான் டிரைவேடிவ் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆக, Cash market இல்லாது derivative market சிறக்காது.

இரவு பொழுதில் நிறைய பேர் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அதனால் கமிஷன் கட்டுபடியாகாது என்கிறார்கள் புரோக்கர்கள். எப்படியிருப்பினும் இது NSE-ன் புது முயற்சி…!

Monday 30 July 2018

VVPAT for 2019


2019 தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் VVPAT கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2017 ஏப்ரலில், தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டிலே சொன்னது.

இதையடுத்து Bharat Electronics Ltd (BEL) மற்றும் Electronics Corporation of India Ltd (ECIL) ஆகிய இரண்டு கம்பெனிகளிடம் 16.15 VVPAT யூனிட்டுகள் செய்து தரச்சொல்லி தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்தது.

நாளது தேதி வரையில் 3.5 லட்சம் யூனிட்டுகள்தான் ரெடியாகி இருக்கின்றன. தயாரிப்பு வேகத்தில் BEL ஆமை, ECIL நத்தை.

இப்போ 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்படி நடக்கப்போகிறது? EVM, VVPAT அல்லது Ballot Paper?

Monday 23 July 2018

Jobless Growth


இந்தியாவில் அமைப்பு சார்ந்த வேலைகளில் (Formal Employment) இருப்பவர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. 2017ல் 40.67 கோடி பேர் பணிபுரிந்த இடத்தில் தற்போது 40.62 கோடி பேர் பணிபுரிகிறார்களாம். அதாவது, வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாக வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கையை விட 5 லட்சம் அதிகம். இது formal sector மட்டும் என்பதை கணக்கில் கொள்ளவும். Informal sector-ல் இன்னமும் அதிகமாக இருக்கக்கூடும்.

மார்ச் மாதமே இதுகுறித்து பதிவு போட்டிருந்தேன். https://www.facebook.com/vijayasarathy.rao/posts/1680577802035035. கூடிய விரைவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த வருடம் ஒரு காலாண்டு கழிந்த பின்னரும் ராக் பாட்டம் எனப்படும் அடிமட்டம் தொடப்படவில்லை.

சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் புதிய முதலீடுகள் 38% குறைந்துவிட்டன. ஏற்கனவே ஆரம்பித்த பிராஜெக்டுகளும் முடியாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. சென்ற வருடம் (17-18) FDI 15% குறைந்துவிட்டதாக தெரிகிறது. பொருளாதாரம் Demo, GST பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.


வேலைவாய்ப்புகள் மீண்டும் வர எத்தனை மாதங்களாகுமோ? இதில் புதிய வேலைவாய்ப்புகள் என்று நாடாளுமன்றத்தில் மோடி சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? Jobless growth யாருக்கு நன்மை?


Friday 20 July 2018

Chinese Yuan and Indian Exports


அமெரிக்கா சீனபொருட்கள் மீது வரிவிதித்ததாலோ என்னவோ, சீனா நைஸாக தன் கரன்ஸியின் மதிப்பை குறைத்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 8% மதிப்பு குறைந்துவிட்டது. இது சீனாவின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான விஷயம்.

யானையும் யானையும் சண்டை போடும்போது கோழி நசுங்குவது போல, நடுவிலே 
இந்திய ஏற்றுமதி அடிபடும். ஒருவேளை டாலருக்கு எதிராக ரூபாய் விழுவது மத்திய அரசின் ராஜதந்திரமா அல்லது காலி பெருங்காய டப்பாவா?

யுவான் ஏப்ரலிலிருந்து விழுகிறது… அதாவது, அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரிவிதிப்பை முன்மொழிந்த நாளிலிருந்து….!

அதற்கு மாறாக ரூபாய் ஜனவரியிலிருந்து விழுகிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் – ஏற்றுமதி – இறக்குமதி வித்தியாசம், க்ரூட் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததும்/ வெளியேறுவதும்.

ஸோ, சீனாவை சமாளிக்கும் விதமாக ரூபாய் மதிப்பு விழவில்லை… காலி பெருங்காய டப்பாதான்…!

Wednesday 18 July 2018

Demonitisation Overtime Pay


டிமானிடைஸேஷன் (Demo) சமயத்தில் வங்கி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் வேலை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அத்தனை கூட்டத்தையும் சமாளித்து, மை வைப்பது, ஐடென்டிடி ஆதாரம் வாங்குவது என்று மத்திய அரசு செய்த அத்தனை கோமாளித்தனத்திற்கும் ஈடு கொடுத்தனர். வாடிக்கையாளர்களின் கோபத்தையும் அவர்களே எதிர்கொண்டனர்.

அதிக நேரம் வேலை செய்த அவர்கள் ஓவர்டைம் சம்பளம் கேட்டனர். நியாயமான கோரிக்கை…! அனைத்து வங்கிகளும் ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கொடுத்ததா என்று தெரியவில்லை. கனரா வங்கியில் இந்த பிரச்சனை இன்னும் தொடர்வதாக தெரிகிறது. (படம் பார்க்கவும்)

கடந்த ஏப்ரல் 1, 2017 அன்று, SBI வங்கியுடன் அதன் subsidiary வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஹைதராபாத், மைசூர், ட்ரிவாங்கூர் மற்றும் பிகானிர் & ஜெய்ப்பூர் ஆகியவை இணைக்கப்பட்டன.

இதன்பின்னர், SBI வங்கி தனது ஊழியர்களுக்கு 17000-30000 ரூபாய் (ஊழியரின் நிலைகேற்ப) Demo ஓவர்டைம் சம்பளம் தந்தது. இப்போது இணைக்கப்பட்ட அந்த ஐந்து வங்கியை சேர்ந்த 70000 ஊழியர்களிடமிருந்தும் SBI ஓவர்டைம் காசை திருப்பி கேட்கிறது…!

Demo சமயத்தில் இந்த வங்கிகள் SBI-உடன் இணைக்கப்படவில்லை. இணைப்பு நடந்தபின்தான் Demo ஓவர்டைம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. “நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு மட்டும்தான் ஓவர்டைம் சம்பளம் வழங்கினோம். மற்ற ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் தந்திருக்க வேண்டியது பழைய நிர்வாகத்தின் பொறுப்பு” என்பது SBI வாதம்.

Demo ஓவர்டைம் சம்பளம் கொடுப்பது குறித்து பலகாலம் விவாதம் நடந்ததாக நினைவு. கனரா வங்கியில் இன்னும் பிரச்சனை இருக்கிறதல்லவா? அப்படி இருக்கும் பட்சத்தில் SBI வங்கியின் வாதம் சரியில்லை…!

பழைய வங்கிகளின் அனைத்து சொத்துக்களையும், கடன்களையும் SBI ஏற்றுக்கொண்டுதான் இந்த இணைப்பு நடந்துள்ளது. பழைய நிர்வாகத்தில் ஓவர்டைம் சம்பளம் குறித்து முடிவெடுக்காததோ, பாலன்ஸ் ஷீட்டில் நிதி ஒதுக்காததோ ஊழியர்கள் தவறில்லை. (இணைப்பு சமயத்தில் யூனியன்கள் இதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தன?) யூனியன் தவறிழைத்திருந்தாலும் ஊழியர்கள் உழைத்தது உண்மைதான்…. அதற்கு பணம் தரவேண்டியதும் நியாயம்தான்.

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளரையும், ஊழியரையும் திருப்திப்படுத்திதான் லாபம் ஈட்ட பார்க்கும். இந்த SBI வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களையும் சிரமப்படுத்துகிறது…. ஊழியர்களையும் சிரமப்படுத்துகிறது….! என்ன டிசைனோ?

Tuesday 17 July 2018

Minimum Support Price


சமீபத்தில் மத்திய அரசால் விவசாய பொருட்களுக்கான MSP அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50% விலை என்னும் தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றிவிட்டது என்று பாஜகவினரும், இந்த MSP கணக்கு ஏமாற்று வேலை என்று எதிர்கட்சியினரும் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை கொஞ்சம் அலசியிருக்கிறேன். 
ராகுல்காந்தி ஒரு கணக்கு சொல்கிறார். இந்தியாவில் 12 கோடி விவசாயக்குடும்பங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 15000 கோடி ரூபாய் MSP-க்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 1250 ரூபாய் மட்டுமே. இதனால் பயன் ஏதும் இல்லை என்கிறார். 
இந்த கணக்கு சரியா? தவறு. முதலில் 15000 கோடி என்பது அதிகரிக்கப்பட்ட MSPக்கான ஒதுக்கீடு. இதை மொத்த ஒதுக்கீடு போல பேசக்கூடாது. இரண்டாவது, இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் கம்பேர் செய்யும் பேச்சு. MSP என்பது பயிர்களின் உற்பத்தி அடிப்படையில் தருவது. விவசாய குடும்பம் அடிப்படையில் அல்ல. ஆக, ராகுலின் வாதத்தில் சாரம் இல்லை. 
இவ்வளவு MSP அதிகரிப்பதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை (Fiscal Deficit) அதிகரிக்கும் என்கிறார்கள். இதற்கு ஜேட்லி, பட்ஜெட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டதால் பற்றாக்குறை அதிகரிக்காது என்று அசட்டுத்தனமான விளக்கம் அளித்திருக்கிறார். MSP ஏற்றுவது ஒரு வருட கதையல்ல, ஒவ்வொரு வருடமும் மொய் வைக்க வேண்டும், அல்லவா? 
இப்படி இரண்டு பக்கமும் அசட்டுத்தனமான வாதங்களைத்தான் முன்வைக்கிறார்கள். 
இப்படி MSP ஏற்றப்பட்டிருப்பதால் rural demand அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் என்பது பாஜகவின் வாதம். UPA அரசு வருடாவருடம் அதிகரித்து வந்த MSP சதவிகிதத்தில்தான் இந்த முறையும் MSP அதிகரித்திருக்கிறது. இதில், விசேஷமாக ஒன்றும் இல்லை. இது வெறும் தேர்தல் விளம்பரம் என்றும் சொல்கிறார்கள். (படத்தை பார்க்கவும், தேர்தல் வருடங்களில் அதிக ஒதுக்கீடு நடப்பதை கவனிக்கவும்) 
இன்னொரு பக்கம், அதிகரிக்கப்பட்டிருக்கும் MSP தவறான பார்முலா… இந்த MSP விவசாயிகளுக்கு போதாது என்றும் கிளம்பியிருக்கிறார்கள். அதையும் பார்க்கலாம். 
இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து பொய்த்ததால் 2004ல் M.S. சுவாமிநாதன் தலைமையிலே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 வரை இந்த கமிஷன் 5 அறிக்கைகளை சமர்ப்பித்தது. அதில் ஐந்தாவது அறிக்கையில், Weighted Average Cost of Production-ஐ விட 50% அதிகமாக MSP இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், Weighted Average Cost of Production என்றால் என்னவென்று சொல்லவே இல்லை என்பது சிறப்பு. இங்கே முக்கியமாக இரண்டு பார்முலாக்கள் வருகின்றன. ஒன்று A2+FL, இன்னொன்று C2. A2+FL என்பது உற்பத்திக்கு செலவழித்த தொகையும், உற்பத்திக்காக வேலை செய்த விவசாய குடும்பத்தின் Notional கூலியும் சேர்ந்தது. C2 என்பது Comprehensive Cost. விவசாய நிலத்திற்கான குத்தகை பணம், அல்லது சொந்த நிலமாக இருந்தால் Notional வாடகை மற்றும் உபகரணங்களின் தேய்மானம் ஆகியவை வரும்.

மோடி அவர்கள் 2014 பிரச்சாரத்தில் Cost + 50% என்று வாக்குறுதி அளித்தார். உஷாராக, A2+FL, C2 குழப்பத்திற்குள் அவர் போகவில்லை. அவர் அறிவித்தபோதே பல பயிர்களின் MSP A2+FL விட 50% அதிகமாகத்தான் இருந்தது. ஆக, அவர் சொன்னது C2தான் என்பது விவசாயிகளின் வாதம். M.S. சுவாமிநாதனும் தான் அறிக்கையிலே குறிப்பிட்டது C2தான் என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.

அப்போது, C2+50%தானே அரசு அறிவித்துள்ள MSPயாக இருக்கவேண்டும். அதுதான் கிடையாது…! அரசு கூறியுள்ளது A2+FL+50%தான். காரணம் A2+FL மற்றும் C2 இடையேயான தொகை வித்தியாசம் அதிகம். அரசுக்கு C2 கண்டிப்பாக கட்டுப்படியாகாது. (படம் பார்க்கவும்)

சில நிபுணர்கள் அடிப்படையிலேயே கைவைக்கிறார்கள். அதாவது, பயிரை பொறுத்து பணம் தரும் திட்டங்கள் கூடாது. மாறாக, விவசாயியை பொறுத்து பணன் தரும் திட்டங்கள் வேண்டும் என்கிறார்கள் (Crop based vs Farmer based schemes). ஐரோப்பிய நாடுகள் தற்போது farmer based formula-விற்கு மாறிவிட்டனவாம். இதன் மூலம் பணக்கார விவசாயிகளுக்கு பதிலாக ஏழை விவசாயிகளுக்கு பலன் போய் சேரும்.

பொதுவாக Cost plus பார்முலாக்கள் திறனின்மையை (Ineffeciency) வளர்க்கும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதில் விவசாயிகளுக்கு உண்மையான பலன் இருக்கிறதா? அதை வரும் தேர்தல்கள்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் விவசாயிகளை தாஜா செய்வது பாஜக பார்முலா. இதுவும் அதில் சேர்த்திதான்.

இந்த திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா என்பதை அறிய சில வருடங்கள் தேவைப்படலாம். அதற்குமுன் இதை விமர்சிப்பதோ பாராட்டுவதோ சரியல்ல.

Friday 13 July 2018

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு...!


வரிவிதிப்பு தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்குமல்லவா….? இது போன்ற வழக்குகளில், அப்பீல் போவதற்கான வரம்பை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 29600 நேரடி மற்றும் மறைமுக வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படும்.

இதனால், வழக்குகளில் கோரப்பட்ட 5600 கோடி ரூபாய் (Disputed Amount) அரசுக்கு வராது. இதை இழப்பு என்று சொல்லமுடியாது… ஆனாலும், அரசு விட்டு கொடுத்ததாய் எடுத்து கொள்ளலாம்.

முன்பொரு முறை GST காரணமாக புதிய வழக்குகள் நிறைய வந்து சேரும் என்று பதிவிட்டிருந்தேன். ஏற்கனவே குவிந்த வழக்குகளை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துள்ளது. நல்ல விஷயம், மத்திய அரசிற்கு பாராட்டுகள்...!

இதற்கு முன்னதாகவும் விரைவாக assessment முடிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிகாரிகளின் performance appraisal முறைகளையும் அரசு மாற்றியமைத்திருந்தது.

அரசின் போக்கு இப்படி இருந்தாலும், அதிகாரிகளின் போக்கு மாறினாற் போல தெரியவில்லை.  கடந்த மே மாதம், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு GST return-களுக்கு இடையே 78 பைசா வித்தியாசம் இருந்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

GST குறித்த புரிதல் இன்னும் சிறு, குறு வியாபாரிகளுக்கு வரவில்லை… சின்ன சின்ன விஷயங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, பெனால்டி போடுவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து அதிகாரிகள் விலக வேண்டும். மத்திய அரசு இதற்கும் வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday 12 July 2018

கல்வி – அந்த காலமும் இந்த காலமும்


பகுதி 1 - முன்னுரை
சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்தேன். சுவையான சந்திப்பின் நடுவிலே, நண்பர் சீரியஸான இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
நண்பர் எழுப்பிய கேள்விகளில் ஒன்று, Morality மற்றும் Ethics குறித்தது. இன்னொரு கேள்வி, பண்டைய இந்தியாவின் கல்வி குறித்து.
இரண்டாவது கேள்வி என்னை மிகவும் சிந்திக்க தூண்டியது. அந்த காலத்தைய குருகுல நடைமுறைகள் குறித்து காஞ்சி பெரியவாள் தெய்வத்தின் குரலில் கூறியிருந்த விஷயங்களை மீண்டும் படித்து பார்த்தேன். இன்றைய கல்வி கற்பிக்கும் முறைகளையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
காஞ்சி பெரியவாளின் தெய்வத்தின் குரல், உபநிஷதங்கள், மஹாபாரதம் இவற்றை அடிப்படையாக வைத்து, நம்மிடையே இருந்த கல்விமுறை குறித்து பதிவு செய்திருக்கிறேன்.
இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை தொடரவேண்டாம்...! பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க கல்வியை குறித்தது... மாறாக ஜாதியை முன்வைத்து கிண்டலடிக்கும் கமெண்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும். கல்வி குறித்த விவாதங்கள் மட்டுமே வரவேற்கப்படும்.

பகுதி 2 – படிப்புக்கு கூலி என்ன?
பண்டைய கால கல்வி குறித்த இந்த பதிவில், முதலில் ஆசிரியர் என்னும் அர்த்தம் தரும், ஆசார்யர், உபாத்யாயர் என்னும் இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.
ஆசார்யர் என்பவர் காசுக்காக இல்லாமல் வித்தையை தானமாக கொடுப்பவர். அந்த காலத்தில் குருகுல வாசம் முடிந்த பின்னர் குருதக்ஷிணை என்று மாணவன் தருவதை ஆசார்யர் வாங்கி கொள்ளுவார்.
வித்தையை தானம் செய்வது என்னும் கான்செப்ட் வேறு கலாச்சாரங்களில் இருந்ததா என்று தெரியவில்லை. வித்தை அடுத்த தலைமுறையை சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர் ஆசார்யர்.
உபாத்யாயர் என்பவர் fees வாங்கி கொள்பவர். இவரை ‘ப்ருதக அத்யாபகர்’ (Bhruthaka) அதாவது கூலிக்கு வேலை செய்பவர் என்று மனு கண்டிக்கிறார்.
குரு தக்ஷிணை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம்... அது வெறும் டோக்கன்தான். பசு, நிலம், தங்கம் போன்ற காஸ்ட்லி தக்ஷிணைகளுக்கு நடுவில் கொஞ்சம் தானியம், காய்கறி, குடை, செருப்பு ஆகிய எது கொடுத்தாலும் அது தக்ஷிணைதான்.
அந்த காலத்து படிப்பு என்பது முடிய பொதுவாக 12 ஆண்டுகாலம் ஆகுமாம். இந்த பன்னிரெண்டு ஆண்டு காலமும் கூடவே தங்க வைத்துக்கொண்டு, சோறு போட்டு, வித்தையும் சொல்லித்தருபவரே ஆசாரியன்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள், இந்த காலத்தில் 12 வருடங்களுக்கு ஹாஸ்டலில் தங்கவைத்து, சாப்பாடு போட்டு, படிப்பும் சொல்லி தந்து ஒரு கூடை காய்கறியையோ, ஒரு ஜோடி காலணியையோ கட்டணமாக தந்தால் எந்த கல்வி தந்தையாவது ஒப்புக்கொள்வாரா?
சரி குருதக்ஷிணை எப்போது கிடைக்கும்?
குருதக்ஷிணை என்பது சிஷ்யன் ‘கற்று கொண்டாய் விட்டது’ என்ற திருப்தியில் தருவதல்ல... மாறாக ‘கற்று தந்தாகிவிட்டது’ என்ற திருப்தியில் ஆசார்யர் பெறுவது. உதாரணமாக, யாக்ஞவால்கியர் என்னும் ரிஷி உபதேசம் செய்ய செய்ய, ஜனகராஜா தக்ஷிணை வைக்கிறார். யாக்ஞவால்கியரோ, உபதேசம் முழுவதும் செய்து முடியாமல் தக்ஷிணையை ஏற்கமாட்டேன் என்று ஏற்க மறுக்கிறார். (பிருஹதாரண்யக உபநிஷதம்).
இதைத்தான் குருதக்ஷிணையாக கொடுக்கவேண்டும் என்று முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு பாடம் ஆரம்பிக்கவும் கூடாது. அப்படி செய்யும் அந்தணனை, சிராத்தம் முதலிய சடங்கிற்கு கூப்பிடக்கூடாது என்று மனு கூறியிருக்கிறார். அதாவது, அப்படிப்பட்ட குருவிற்கு எந்த மதிப்பும், மரியாதையும் கிடையாது.
இந்த காலத்தில் இரவு முழுவதும் க்யூவில் நின்று, அப்ளிகேஷன் வாங்கி, டொனேஷன் கொடுத்து ப்ரீகேஜியில் சேர்க்கும் காட்சி கண் முன்னே வருகிறதா?

பகுதி 3 – தனிநபர் சார்ந்த கல்வி
அந்த காலத்து குருகுலம் என்பது ஒரு நிறுவனம் கிடையாது. It is not an institution. மாறாக அது ஒரு தனிநபரால் நடத்தப்படுவது. ஏன் அப்படி வைத்தார்கள் என்றால் ஆசார்யருக்கான தகுதி வரையரை அப்படி. ஆசார்யருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்.
ஆசார்யர் தெளிவாக கற்றிருக்க வேண்டும். கற்றதை வாழ்க்கையில் ஒழுக வேண்டும். மற்றவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க செய்யவேண்டும்.
கற்க கசடற, நிற்க அதற்கு தக – இந்த இரண்டும் மாணவனுக்குதான். கூடுதல் கடமையாக ஆசிரியர் மாணவனை ‘அதற்கு தக’ நிலைநிறுத்த வேண்டும். மூன்றாவது விஷயம் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான், குருகுலத்தை தற்போதைய educational institution போல நிறுவனமாக நடத்தாமல் தனிமனித ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டே நடத்தியிருக்கிறார்கள். அதாவது, ஆசார்யர் என்பவர் Role Model. அவரை பார்த்து மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை அதே அடிச்சுவட்டில் அமைத்துகொண்டனர்.
தற்காலத்தில் நல்லாசிரியர்கள் அதிக அளவில் இல்லை என்பதும் ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. Role Model என்று சொல்லப்படும் தகுதிநிலையை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள் என்பதும் நிதர்சனம், அல்லவா?
அதோடு மாணவர்கள் ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்க போவதில்லை. நேரத்திற்கு வந்து பாடம் எடுத்தாலே, ஆசிரியர் அவரது கடமையை செய்தவராகிறார். இதில் என்ன ரோல் மாடல் இருக்கிறது? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதில் தர்மம் தவறாமல் நடந்து கொள்ளுதல், கோபம், பொறாமை போன்ற தீயக்குணங்களை தவிர்த்தல், இடைவிடாத சமய ஒழுக்கம் இவைகளெல்லாம் தனிப்பட்ட வாழ்விலிருந்துதான் கற்று கொள்ளமுடியும்.
இன்னும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்... பிள்ளையின் முக்கியமான வளரும் பருவத்தில் எந்த தகப்பனாவது குருகுலம் என்று வேறொருவரிடம் 12 ஆண்டுகள் அனுப்புவாரா? முக்கியமான டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளை வேறொருவரிடம் வளரவேண்டும்... அப்படியானால் அந்த குருவின் நடத்தை எப்படி இருக்கவேண்டும்?
குரு என்பவர் வெறும் புத்திசாலியாக மட்டும் இருந்தால் போதாது, ஒழுக்கமானவராக இருக்கவேண்டும்.... அதோடு, அன்பானவராக இருந்தால்தான் குழந்தைகளை ஒழுக்கம் தவறாமல் வளர்த்து, கல்வியும் கற்று தரமுடியும்.
ஒழுக்கத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று மாணவர்களை அடிக்கக்கூடாது என்பது சாஸ்திரம். அப்படி ஒருவேளை மாணவன் ரொம்ப ஒழுங்கீனமாக இருந்து அடிக்கவேண்டி வந்தால் கூட கயிறு, மெல்லிய மூங்கில் குச்சியினால் முதுகில் மட்டும் அடிக்கலாம்... தலையில் எல்லாம் அடிக்கக்கூடாது என்று மனு கூறுகிறார்.
இந்த காலத்தில் செய்தித்தாள்களில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது குறித்த செய்திகளை படித்தால் மனம் பதைக்கிறது. அந்த காலத்தில் ஆசிரியருக்கு எவ்வளவு கண்டிஷன்கள்?

பகுதி 4 – நிறுவனம் சார்ந்த கல்வி
சர்வகாலசாலைகள் என்பது அந்த காலத்தில் இல்லையா? வெறும் குருகுலம்தான் இருந்ததா? பௌத்தர்கள்தான் முதலில் கல்வியை institutionalise செய்தவர்கள். அபூர்வமாக இந்துக்களும் கலாசாலை போன்ற அமைப்பை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட அமைப்பை நடத்தியவர்களை குலபதி என்று அழைத்தனர். கண்வர், வசிஷ்டர் போன்றவர்கள் குலபதி.
குலபதிகளும் fees வாங்கி கொண்டு பாடம் எடுக்கக்கூடாது. ‘யோ அன்ன தானாதி போஷனாத் அத்யா பயதி’ என்பது விதி.
இத்தனை பேருக்கு எப்படி சாப்பாடு போடுவது..?. அதனால் ராஜமான்யங்கள் இருந்தன. கல்வியின் மூலமாக நல்ல குடிமக்களை உருவாக்கி தருவதால் ராஜமான்யம் கிடைத்தது. கல்வி கற்க மாணவர்கள் செலவு செய்ய தேவையில்லை. கல்வி என்பது அன்று அரசாங்க செலவு. நம் நாட்டின் இன்றைய நிலையை பாருங்கள். கல்வி கடன் கிடைப்பது கூட கஷ்டமாக இருக்கிறது.
சரி, படிப்பு எப்படி இருந்தது? படிப்பு என்பது வெறும் அறிவை சார்ந்து இல்லாமல், ஒழுக்கத்தை சார்ந்தே இருந்தது. ஒரு வருஷமாவது குரு தன் கூடவே சிஷ்யனை வைத்து கொண்டு, அவன் குணத்தை பற்றி திருப்தி செய்து கொண்ட பிறகே பெரிய விஷயங்களை சொல்லித்தர வேண்டுமென்பது சாஸ்திரம்.
அப்படி ஒரு வருஷத்தில் திருப்தியடைந்து வித்தை சொல்லி தராமல் குருகுலத்தில் வேலை மட்டும் வாங்கி அனுப்பினால் என்னவாகும்? அந்த மாணவனின் பாவம் அத்தனையும் குருவுக்கு வந்து சேரும் என்பதே விதி..
அது மட்டுமில்லை, ஒருவன் சிஷ்யனாக ஆன பின்பு செய்யும் பாவமும் குருவையே சேரும். கல்வி கற்பிப்பவர் சீடனை நல்வழிப்படுத்தவேண்டும், அல்லவா? அப்படி நல்வழிப்படுத்தும் அளவிற்கு போதனை இல்லாவிட்டால் அதுவும் பாவம்தான்.
சரி வம்பே வேண்டாம் என்று, சிஷ்யனையே சேர்த்து கொள்ளாவிட்டால்...? தகுந்த மாணவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாவம் வந்து சேரும். உதா. தேவர்களின் குருவின் மகனான கசன் என்பவன், அசுரகுருவான சுக்ராச்சாரியடம் கல்வி கற்க வருகிறான். நீ எதிரிக்கூட்டத்தை சேர்ந்தவனாயிற்றே என்று சுக்ராசாரியார் அவனை புறந்தள்ளவில்லை.... அவனை மாணவனாக சேர்த்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியே கிடையாது... தகுதியுள்ள மாணவன் வந்தால் வித்தை கற்று தந்தே தீரவேண்டும் என்பது விதி. (மஹாபாரதம், ஆதி பர்வம்)
படிப்பை விட ஒழுக்கத்திற்கே அதிக மதிப்பு என்பதற்கு ஒரு உதாரணம்... உத்தாலகர் என்னும் குரு தன் மகளான சுஜாதையை, வேதபடிப்பு சரியாக வராத, ஒழுக்கத்தில் சிறந்த கஹோளகருக்கு தருகிறார். (மஹாபாரதம், வனபர்வம்)
எல்லா வர்ணத்தினருக்கும் ஒரே மாதிரி படிப்பு இல்லை என்பது கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம்... இன்னும் கேட்டால் ஒரே வயதில் அனைவரும் குருகுலம் போகவில்லை. அந்தணர்கள் 8 வயதிலும், மற்ற வர்ணத்தினர்கள் சில வருடங்கள் கழித்தும் போனார்கள். இரண்டரை வயதில் ப்ரீகேஜியெல்லாம் நடக்காது.
அவரவர்கள் துறைசார்ந்த கல்வி வழங்கப்பட்டது. ஒரே கல்வி என்பது கிடையவே கிடையாது. நாடெங்கிலும் ஒரே கல்வி என்பதெல்லாம் தற்காலத்திய கோஷங்கள்.
எல்லாருக்கும் கல்வி என்பது கட்டாயம்.... படிக்காதவர்களை ஜாதியை விட்டு விலக்கிவைத்து விடுவார்கள். எல்லா வர்ணத்தினருக்கும் கட்டாய கல்வி என்பது ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. (கல்வியையும் எழுத்தறிவையும் குழப்பி கொள்ள வேண்டாம். அந்த காலத்தில் எழுத்தறிவு அனைவருக்கும் இல்லை. ஆனால், துறை சார்ந்த மகத்தான கல்வியறிவு இருந்தது)

பகுதி 5 – சீடன் எப்படி இருக்கவேண்டும்?
குரு எப்படி இருக்கவேண்டும், நடக்கவேண்டும் என்று பார்த்தோம். சீடன் எப்படி இருக்கவேண்டும்?
தீவிர தாபமில்லாதவன், பக்தி இல்லாதவன், பணிவிடை செய்யாதவனுக்கு போதிக்கக்கூடாது என்று கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். வித்தையானது பாத்திரமறிந்தே தரவேண்டும். நல்லவிதையானது உவர்நிலத்தில் விதைக்கப்படக்கூடாது என்பதே மூலக்கருத்து.
யோக்தையுள்ள சிஷ்யன் கிடைக்கவில்லை என்றால் குரு தன் வித்தையோடு செத்தாலும் சாகலாமே தவிர, என்ன ஆபத்து வந்தாலும் தவறானவர்களுக்கு வித்தையை சொல்லி கொடுக்க கூடாது. (தெ. குரல் 4.28) அப்படி செய்பவன் நரகத்துக்கு போவான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாணவன் தகுதியுள்ளவன் என்பதை எப்படி அறிவது? ஆசார்யர் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தருவார். பிரம்மசர்யம் காத்து, தவம் செய்து, சொல்லி தந்ததை மனதிலே சிந்தித்த பிறகு மீண்டும் வரச்சொல்லுவார். ஒழுங்காக கற்றுக்கொண்டிருந்தால் மீண்டும் கொஞ்சம் சொல்லித்தருவார்.
உதாரணமாக, இரண்டு கதைகளை சொல்லலாம். தேவர்களின் அரசனான இந்திரனும், அசுரர்களின் அரசனான விரோசனனும் பிரம்மாவிடத்திலே ஆத்மவித்தை கற்க போகிறார்கள். இருவரும் 32 வருஷம் பிரம்மச்சர்ய விரதம் இருந்தபிறகு பிரம்மா உடல்தான் ஆத்மா என்று உபதேசிக்கிறார்.
விரோசனன் இதை ஏற்றுக்கொண்டு திரும்பி போகிறான். ஆனால், இந்திரன் சிந்தனை செய்து பிரம்மாவிடம் கேள்வி எழுப்புகிறான். பிரம்மா மீண்டும் 32 வருடங்கள் பிரம்மசர்ய விரதம் இருக்க சொல்லி மீண்டும் உபதேசம் செய்கிறார். அதுவும் முழு உண்மை கிடையாது.
இப்படி நூறு வருடங்கள் பிரம்மசர்யம் காத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மவித்தையை இந்திரன் கற்கிறான். ஒரு விஷயத்தை சொல்லி தரவேண்டும். அதில் தேர்ந்தால்தான் அடுத்த விஷயம். ஒவ்வொன்றுக்கு இடையில் பிரம்மசர்ய விரதம். காரணம், வித்யாப்யாசம் என்பது தவம்... அதனால், புலனடக்கம் முக்கியம். (சாந்தோக்ய உபநிஷதம்)
இந்த கதையிலே, தேவர்களின் தலைவன் மட்டுமல்ல, அசுரர்களின் தலைவனும் ஞானத்தை தேடி போய், குருவை பணிகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆயினும், அவனுக்கு பக்குவம் இல்லாத காரணத்தால்தான் அவன் முழுவதுமாக கற்கவில்லை. பிரம்மாவுக்கு பாரபட்சம் கிடையாது.
இன்னொரு கதையிலே, வருணன் தன் மகனான ப்ருகு மஹரிஷிக்கு உபதேசிக்கிறார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் உபதேசிக்காமல் கொஞ்சம் உபதேசித்து விட்டு தவம் செய்ய சொல்கிறார். மகன் தவம் செய்து, தன் புரிதலை விளக்க, அடுத்த விஷயத்தை விளக்குகிறார். மகனே ஆனாலும், procedure procedureதான். (தைத்திரிய உபநிஷதம்)
பிரச்நோபநிஷதத்தில் ஐந்து பிரம்ம நிஷ்டர்கள் பிப்பலாதரை தேடி வந்து தர்ப்பை சமர்ப்பிக்கிறார்கள். பிப்பலாதர் அவர்களுக்கு ஒரு வருடம் பிரம்மச்சர்யமும், தபஸும் விதிக்கிறார். “தபஸிற்கு பின்னர் கேள்வி கேளுங்கள், எனக்கு தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன்” என்கிறார். (தெரிந்தவரை பதில் சொல்கிறேன் என்றது குருவின் விநயம்). பிரம்ம நிஷ்டர்கள் ஆனாலும் அதே procedureதான்..!

பகுதி 6 – குருவும் சிஷ்யன்தான்
So, எப்படியாவது குருவாக ஆகிவிட்டால் மாணவர்களை சுத்தவிடலாம்.. அப்படித்தானே..! அதுதான் கிடையாது. Continous Education கான்செப்ட் அந்த காலத்திலேயே இருக்கிறது.
உத்தாலகர் (Uddalka) என்பவரின் மகன் ச்வேதகேது. ச்வேதகேதுவிற்கு கொஞ்சம் அகம்பாவம் உண்டு. ச்வேதகேதுவை பிரவாஹனன் என்னும் ராஜா கொஞ்சம் கேள்விகளால் குடைந்தெடுக்கிறார். கேள்விகளுக்கு பதில் தெரியாத ச்வேதகேது அவமானம் தாங்காமல் உத்தாலகரிடம் திரும்புகிறான். உத்தாலகருக்கும் ராஜா கேட்ட கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
“மகனே! எனக்கே இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது. வா, அந்த ராஜாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்து விடை தெரிந்து கொள்வோம்” என்கிறார். ஆனால், அவமானம் பொறாத மகன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்தணன் போய் க்ஷத்திரியனிடம் பாடம் கேட்பதா என்று உத்தாலகருக்கு எந்த ஈகோவும் கிடையாது. 
உத்தாலகர் பிரவாஹனனிடம் போகிறார். அரசன் அவருக்கு பெரும் செல்வத்தை தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளாத உத்தாலகர், அரசனிடம் ஞானத்தையே வேண்டி, சிஷ்யனாகிறார். பஞ்சாக்னி வித்தை என்னும் வித்தையை கற்றுக்கொண்டு திரும்புகிறார். (சாந்தோக்ய உபநிஷதம்)
இதே போல ஐந்து வைதீக சீலர்கள் உத்தாலகரிடம் வைச்வாநர ஆத்மா பற்றி தெரிந்து கொள்ள போகிறார்கள். தெளிவாக தெரியாமல் எதையாவது சொல்லக்கூடாது என்பதற்காக உத்தாலகர் அவர்களை கேகய ராஜாவான அஸ்வபதியிடம் அனுப்பிவைக்கிறார். அதாவது, அந்தணர் தனக்கு வித்தை கற்றுத்தர தகுதியில்லை என்று சொல்லி, அந்தணர்களை க்ஷத்திரியனிடம் அனுப்பி வைக்கிறார்.
உத்தாலகரின் கதையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஆச்சார்யருக்கு ஈகோ துளியும் கூடாது. தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டாவது, வர்ண வித்தியாசங்கள் கல்வியை தடைசெய்யக்கூடாது என்பதில் பழங்காலத்தில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். வித்தையை யாரும் யாரிடமிருந்தும் கற்று கொள்ளலாம் என்று வைத்திருந்தனர். தேவையெல்லாம் ஒழுக்கமும், ஆர்வமும், புத்திகூர்மையும்தான்.
அந்தணன் கூட எந்த வருணத்தாரிடமிருந்தும் வித்தையை கற்று கொள்ளலாம். வேதத்தை கூட இப்படி மற்ற வருணத்தாரிடம் இருந்து அந்தணர் கற்று கொள்ளலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்.
வேதங்களை நான்காக வகுத்த வியாசர், புராணங்களை நான்காவது வருணத்தினரான சூதருக்கு உபதேசிக்கிறார். வேதம் கற்ற அந்தணர்கள் அவருக்கு உயர்ந்த ஆசனம் அளித்து, மரியாதை செய்து புராணங்களை கற்று கொள்கிறார்கள். (பாகவதம், மஹாபாரதம்)
கொங்கணர் என்னும் ரிஷியும் தன் பாடத்தை தர்மவியாதன் என்னும் கசாப்பு கடைக்காரனிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார். (மஹாபாரதம், வனபர்வம்).




பகுதி 7 - முடிவுரை
கல்வி குறித்த இந்த பதிவிலிருந்து நாம் அறிந்தது என்ன? சுருக்கமாக பார்த்துவிடுவோம்… பழங்காலத்தில் கல்வி என்பது இலவசமாக கிடைத்து கொண்டிருந்தது. தனிநபர்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டது. இதனால், ஆசிரியர் மாணவன் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த முடிந்தது. மாணவன் ஆசிரியரை ரோல் மாடலாக கொள்ள முடிந்தது.
அறிவை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்தில் மாணவனை நிலைநிறுத்துவதுதான் ஆசிரியரின் தலையாயப்பணி.
கல்வி என்பது நடைமுறை வாழ்விற்கு பொருந்தியதாக இருந்தது. ஆசிரமத்தின் அன்றாட தேவைகளுக்கு உழைப்பது முதல், தொழிலை கல்வியாக கற்க முடிந்தது வரை practical application என்பது இருந்தது.
கல்வி என்பது அறிவு சார்ந்ததாக மட்டும் இல்லை… ஒழுக்கம் சார்ந்ததாக, திறமை சார்ந்ததாக, தொழில் சார்ந்ததாக, ஆன்மீகம் சார்ந்ததாக இருந்தது. கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயம். தொடர்ந்து பயில்வது (Continuous Education), கல்வி தேடல் என்பது இருந்தது.
சரி, இன்றைய நிலையில், 21ம் நூற்றாண்டில் இவற்றை எல்லாம் பொருத்தி பார்க்க முடியுமா? இன்றைய கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுவதால் common syllabus என்பது இருக்கிறது. இந்த common syllabus என்பதே தரம் குறைந்த படிப்பு என்பது என் கருத்து. புத்திசாலி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்குமான சராசரிதான் இந்த common Syllabus. படிப்பு வராத மாணவர்களுக்கு வேறு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறியாமல் அவர்களை முட்டாள் என்று பெயர் கொடுப்பது சரியல்ல.
இன்னொரு புறம் அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை syllabus என்னும் பெயரால் அறிவாற்றலில் முன்னேற்றாமல் தடுத்து நிறுத்துவதும் சரியில்லை… இது இரண்டு வகை மாணவர்களுக்கும் செய்யப்படும் துரோகம்…!
கல்விக்கு கட்டணம் என்பதும், இலவச கல்வியென்றால் தரமில்லாத கல்வியாக இருப்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வழியல்ல. கண்டிப்பாக தற்போதைய கல்வியின் scope விரிவுப்படுத்தப்பட வேண்டும். அறிவை மட்டுமே சார்ந்து இல்லாமல், ஒழுக்கம், தொழில், மற்ற திறமைகள் என்று பலவற்றை மையப்படுத்தி கல்வி அமையவேண்டும்.
அனைவரும் வெறும் படிப்பறிவை பெறுவதையே சாதனை என்று விளம்பரப்படுத்துவது, கல்வித்தரம் குறைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ‘படித்தவர்கள்’ இருந்தும் நம் தெருக்கள் சுத்தமாக இல்லை… ஊழல் அதிகமாக இருக்கிறது…. தவறான ஆட்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள்… உறவுகள் கூட கசக்கின்றன… சுயமரியாதை இல்லாமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் இருக்கின்றனர். தகவல்கள் அடிப்படையில் இது நாள் வரை தரப்பட்ட படிப்பானது தோற்றுவிட்டது என்றே நான் கருதுகிறேன்..
மேற்குலகின் கல்வியை நாம் கடைப்பிடித்ததில் நம் பொருளாதார கணக்குகள் முன்னேறியிருக்கலாம்… ஆனால், அடிப்படைகளில் நாம் தோற்க ஆரம்பித்துவிட்டோம். மாற்றத்தை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை…!
பொருளாதார ரீதியாக பார்த்தாலும் கூட, தகவல்களை மனப்பாடம் செய்யும் தற்போதை கல்வி போல அல்லாமல், தகவல்களை சீர்தூக்கி ஆராயும் சிந்திக்கும் முறையை கற்பிப்பதே உண்மையான கல்வி. Internet-ம், Cloud-ம் வந்துவிட்ட இந்த காலத்தில் தகவல்களை அடைவதை விட, அந்த தகவல்களை கொண்டு முடிவெடுப்பதும், செயல்படுவதுமான திறமைகளே தேவைப்படுகின்றன.
சமுதாய ரீதியாக பார்த்தால், பண்டைய காலத்து கல்வி கோட்பாடுகளை, தற்போதைய கல்வியில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்… இல்லையென்றால், பொருளாதாரம் மட்டும் முன்னேறும், சமுதாயம் பின்னடையும்…!

Wednesday 11 July 2018

American Opposition to Breastfeeding


ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) ஒரு தீர்மானம் இயற்றப்பட இருந்தது. தீர்மானம் ரொம்ப சிம்பிள்… தாய்பாலுக்கு மாற்றாக ஃபார்முலா உணவுகள் (புட்டிபால் முதலியன) இருக்கிறதல்லவா..? இப்போதெல்லாம் தாய்பாலை விட ஃபார்முலா உணவுகள்தான் சத்துமிக்கவை, ஆரோக்கியமானவை என்று விளம்பரங்கள் வருகின்றன. உலகநாடுகள் இந்த பொய் பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் தீர்மானம்.

இந்த தீர்மானத்தை ஈக்வடார் என்னும் நாடு முன்மொழிய வேண்டும்…. மற்ற நாடுகள் ஆதரிக்கவேண்டும். ரொம்ப ஈஸியாக தீர்மானம் நிறைவேறிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, அமெரிக்கா வடிவில் முட்டுக்கட்டை வந்தது.

இந்த தீர்மானத்தை உப்புசப்பில்லாத தீர்மானமாக (diluted) மாற்ற முயன்ற அமெரிக்கா, ஒரு கட்டத்தில் ஈக்வடார் நாட்டை மிரட்ட ஆரம்பித்தது. தீர்மானத்தை முன்மொழிந்தால் ஈக்வடார் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்ட ஈக்வடார் பயந்து போய் ஒதுங்கி கொண்டது. அடுத்தடுத்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் இது போல அமெரிக்காவால் மிரட்டப்பட்டு ஒதுங்கிகொண்டன.

கடைசியில் அமெரிக்காவால் மிரட்டப்படமுடியாத நாடு, அதுதாங்க ரஷ்யா, தீர்மானத்தை முன்மொழிய அமெரிக்கா மூக்குடைப்பட்டு ஒதுங்கி கொண்டது.

அமெரிக்கா இது போல மிரட்ட காரணம், ஃபார்முலாக்களுக்கான மார்க்கெட். 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள மார்க்கெட் தற்போது வளர்ந்த நாடுகளில் ஆதரவிழந்து வருகிறது. மக்களுக்கு தாய்பால் குறித்த விழிப்புணர்வு வளருவதுதான் காரணம். (அதற்கு பதிலாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஃபார்முலா பிரபலமாகி வருவது கொடுமை!)

ஃபார்முலா உணவு வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக ட்ரம்ப் அரசாங்கம் இப்படி மற்ற நாடுகளை மிரட்டுகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு இதெல்லாம் தர்ம சங்கடம்… காரணம், அந்த அமைப்பிற்கான பெரிய நிதி உதவி அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. So, அமெரிக்கா நாட்டாமைத்தனம் செய்கிறது.

இது தனிப்பட்ட நிகழ்வல்ல… குப்பை உணவுகள் என்றழைக்கப்படும் Junk Foods பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை வாசகங்கள் எழுதவேண்டும் என்னும் தீர்மானத்தையும் அமெரிக்கா எதிர்க்கிறது.

எவர் ஆரோக்கியம் கெட்டாலும் பரவாயில்லை, வர்த்தகம் நடக்கவேண்டும். டாலர்தான் கடவுளப்பா…! எவன் செத்தாலும் கவலையில்லைப்பா….!


Friday 6 July 2018

Via Verde - Mexico City


வையா வெரடே – அப்படியென்றால் ஸ்பானிஷ் மொழியில் பசுமை வழி என்று அர்த்தம். நம்ம ஊர் சேலம் – சென்னை சாலை இல்லை. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள சாலைகளை பசுமையான சாலையாக மாற்றும் ப்ராஜெக்டிற்கு பசுமை வழி என்று பெயர்.

மெக்ஸிகோ சிட்டி உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. லேட்டஸ்ட் தகவல்கள் படி கிட்டத்தட்ட 2.25 கோடி மக்கள் வசிக்கிறார்கள் (சென்னை ஒரு கோடிதான் இருக்கும்). ரொம்ப காலமாகவே அந்த ஊரில் அநியாய பொல்யூஷன். 90களிலேயே 10-ல் 6 பேருக்கு சுவாச பிரச்சனை இருந்தது.

சுற்றுசூழலை கொஞ்சமேனும் காப்பாற்ற, இப்போது வெர்டிகல் கார்டன் (Vertical Garden) முறைப்படி சாலைகளில் இருக்கும் பாலங்களின் தூண்களில் செடி, கொடிகளை வளர்க்கிறார்கள்... எப்படி?

வீணான பிளாஸ்டிக் முதலின உபயோகித்து, போர்டுகள் செய்து, அதில் துணி குப்பைகளை கொண்டு ஹைட்ரோபோனிக் (Hydroponic) என்னும் முறையிலே செடி நடுகிறார்கள். மண்ணே இல்லாமல் செடி வளர்க்கும் முறை இது. செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தண்ணீரில் கலந்து விடுவார்கள். செடி வேர்பிடித்து வளர்வதற்கு Felt எனப்படும் துணிக்குப்பை உபயோகப்படும்.

சரி, இதற்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்? பாலங்களின் மேல் பொழியும் மழைநீரை சேகரித்து கொள்கிறார்கள்... Grey water  என்று சொல்லப்படும் அழுக்கு தண்ணீரையும் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். மக்களுக்கான குடிநீரில் கை வைக்கவில்லை. லாரியில் தண்ணீர் கொண்டுபோய் தெருவெல்லாம் ஊற்றும் சமாசாரமல்ல... மாறாக, சொட்டு நீர் பாசன ஐடியாவை பயன்படுத்தி தேவையான அளவு நீரை மட்டுமே செடிகளுக்கு அளிக்கிறார்கள். இது எல்லாமே சென்ஸார் கொண்டு, ரிமோட்டாக நடக்கும் விஷயம்...!

ஆக, குப்பைகளை கொண்டும், அழுக்கு தண்ணீர் கொண்டும், டெக்னாலஜியை கொண்டும் சாலையை பசுமையாக்குகிறார்கள்.

இதன் பயன்கள் குறித்து, பல வெப்சைட்டுகள் பலவிதமான தரவுகளை தருகின்றன. அதனால் நான் அதற்குள் போகவில்லை. நிறைய கார்பன்டைஆக்ஸைடு, தூசுகளை குறைத்து, ஆக்ஸிஜன் தருகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவுதான் சேதி.

ஆனால், கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இதை மொத்தமும் செய்வது அரசாங்கம் இல்லை... பிரைவேட் கம்பெனிகள். (கொஞ்சம் பணம் அரசாங்கமும் தருவதாக சொல்கிறார்கள்).

நம் டெல்லியில் இதே போல செய்யவேண்டும் என்று ஆம்ஆத்மி முன்பு  யோசித்தது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நம் நாட்டிலும் இது போல செய்யலாமே...!

Tuesday 3 July 2018

Aadhar Biometric Data Theft


எது நடந்துவிடுமோ என்று அஞ்சி கொண்டிருந்தேனோ, அது நடந்தே விட்டது. Yes, ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் திருடு போயுள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில மாநிலங்கள் சொத்துக்களை ரிஜிஸ்டர் செய்யும்போது ஆதார் நம்பரை கட்டாயமாக்கியுள்ளன. இப்படி ரிஜிஸ்டர் செய்யப்படும் டாகுமெண்ட்களை முறையாக கட்டணம் செலுத்தியே நகலெடுத்து கொள்ளலாம்.

ஒரு சொத்து டாகுமென்டில் வாங்குபவர், விற்பவர், இரண்டு சாட்சிகள் என்று குறைந்தது 4 பேர் விவரமாவது இருக்கும். அந்த டாகுமென்டை நகலெடுத்தால், அவர்கள் பெயர், முகவரி, ஆதார் நம்பர், PAN ஆகிய அனைத்து விவரங்களோடு கைரேகையும் கிடைத்து விட்டது.

இந்த கை ரேகையை வைத்து ஒன்றும் செய்யமுடியாது….. ஆனால், கொஞ்சம் low cost டெக்னாலஜியை பயன்படுத்தினாலே போதும்…. கைரேகையை படம் எடுத்து, ஒரு பிலிமில் பதியவைத்து, போட்டோபாலிமர் ரெஸின் என்னும் திரவத்தில் மூழ்கடித்து, அல்ட்ராவயலெட் லைட்டில் கொஞ்சம் காட்டினால்… கைரேகை ரெடி. இந்த பிலிமை நீங்கள் ஆதார் ஆதன்டிகேஷன் மெஷினில் காட்டினால் ஒத்துக்கொள்ளுமாம். அதிக செலவு பிடிக்கும் விஷயமல்ல… ஒரு கைரேகை ரெடி பண்ண 75 ரூபாய்தான் ஆகுமாம்.

ஹைதராபாத்தில் ஒரு சிம் விற்பனையாளர் இது போல 6000 பேரின் ஆதார் தகவல்களையும், கைரேகைகளையும் திருடியிருக்கிறார். திருடப்பட்ட கைரேகைகளை வைத்து சிம்களை ஆதன்டிகேட் செய்திருக்கிறார். (இதன் விரிவான நடைமுறை தெரியவில்லை) கருப்பு மார்க்கெட்டில் ஒரு Aadhar Authenticated சிம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம்.

பார்ட்டி இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும், திறமையாகவும் இருந்திருந்தால் சொத்துக்களையே கைமாற்றியிருக்கலாம்… வங்கி அக்கௌண்டுகள் கூட ஆரம்பித்திருக்கலாம். கிறுக்குப்பயல், ஒரே பயோமெட்ரிக் ஸ்கானரில், ஒரே மாதத்தில் ஏகப்பட்ட ஆதன்டிகேஷன் செய்து மாட்டிக்கொண்டு விட்டான்.

இது தனிப்பட்ட சம்பவமல்ல… போன செப்டம்பர் மாதம், உத்தரபிரதேசத்தில், கான்பூரில் இன்னும் விவரமாகவே திருடியிருக்கின்றனர். Authorised Aadhar Operator-டைய கைரேகையை திருட்டுத்தனமாக ஒரு சாதாரண பட்டர் பேப்பரில் பதிய வைத்து கொண்டு, இதே மாதிரி போட்டோபாலிமர் ரெஸின் உபயோகித்து கைரேகை திருடிவிட்டனர். இதை வைத்துக்கொண்டு ஆதார் சிஸ்டம் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, ஆதார் க்ளையண்ட் சிஸ்டத்தின் சோர்ஸ் கோடையும் எடுத்துள்ளனர். இந்த சாப்ட்வேர் உபயோகித்துதான் ஆதார் வழங்கப்படுகிறது. ரெடினா ஸ்கேனிங் முறையையும் எப்படியோ ஏமாற்றியிருக்கிறார்கள். (நல்லவேளையாக  எப்படி ஏமாற்றினார்கள் என்ற தகவல் செய்தித்தாளில் தரவில்லை… அப்புறம் ஒவ்வொரு ஊருலேயும் இப்படி கிளம்புவாங்க..!)

அப்புறமென்ன, கனஜோராக பொய்யான ஆதார் கார்டுகள் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…! 10 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து உள்ளே போட்டிருக்கிறார்கள்.

நான் எப்போதும் சொல்லும் அதே விஷயம்தான்… டெக்னாலஜி என்பது இருமுனை கத்தி…. அது எப்போதும் நமக்கு சாதகமாகத்தான் இயங்கும் என்று நினைத்தால் நாம் முட்டாள்கள்… ஆதார், EVM இரண்டுமே தேசத்திற்கு பேராபத்துகள். டெக்னாலஜி மோகத்தை குறைத்து கொள்வதே தேசத்திற்கும் மக்களுக்கும் நல்லது. யார் கரடியாக கத்தினாலும், அரசாங்கம் இதை கண்டிப்பாக காதில் வாங்கி கொள்ளாது.

தற்போதைக்கு நம்மால் செய்யக்கூடியது இதுதான் - ஆதார் பயோமெட்ரிக் லாக் என்று ஒன்று இருக்கிறதாம். திருடர்கள் அன்லாக் செய்ய வழி கண்டுபிடிக்கும் வரையில் அதை உபயோகிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும்…!