Thursday 29 March 2018

Fake News – சமாளிப்பது எப்படி?


ஃபேக் நியூஸ் – அதாவது ஆதாரமற்ற, குற்ற எண்ணத்தோடு வேண்டுமென்றே (baseless and malicious) பரப்பப்படுகிற பொய் செய்திகள்.... இண்டர்நெட் யுகத்தில் பொய் செய்திகள் மிக வேகமாக பரவுகின்றன.... பரப்பப்படுகின்றன.


கோப்ரா போஸ்ட் என்னும் நிறுவனம் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியிருக்கிறது. இந்தியாவின் பல செய்தி நிறுவனங்கள் காசு தந்தால் ஹிந்துத்துவா சார்ந்த செய்திகளை வெளியிடவும், எதிர்க்கட்சி தலைவர்களை குறித்த பொய்யான தகவல்களை (Character Assasination) பரப்பவும் தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விவரமாக அறிய -
https://thewire.in/media/large-media-houses-seen-striking-deals-for-paid-news-to-promote-hindutva-agenda

தேர்தல் வெற்றிக்காக எந்த லெவலுக்கும் இறங்க எல்லா கட்சிகளும் தயாராக இருக்கின்றன என்பது நாம் அறிந்ததுதான். அதற்கு துணை செய்ய மீடியாவும் தயாராக உள்ளதே இந்த ஸ்டிங் ஆபரேஷன் உணர்த்தும் உண்மை.

ஸ்டிங் ஆபரேஷனோ, கேம்பிரிட்ஜ் அனலிடிகாவோ... வரப்போவது தேர்தல் காலம்.... பரபரப்பான பொய் செய்திகளின் குழியிலே போய் விழாதீர்கள். நீங்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். அதற்கு சில யோசனைகள் –

1. கட்சி சார்ந்த பத்திரிக்கைகள், வலைத்தளங்கள், முகநூல் பக்கங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எனக்கு பிடித்த கட்சியை சார்ந்த பத்திரிக்கை, வலைத்தளம் என்று பெருமிதம் கொள்ளாதீர்கள்.
2. ஊழல் செய்யாத கட்சிகள் எதுவும் கிடையாது. ஊழலில்லாத கட்சி என்று செய்தி வந்தால் அந்த சேனலோ, வலைதளமோ கட்சி சார்ந்தவை.
3. எந்த காரணமுமின்றி தனிநபர் தாக்குதல் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். (உதா. எதற்கெடுத்தாலும் மோடியை திட்டுபவர்கள், ராகுல் கிளார்க் வேலைக்கு கூட ஆக மாட்டார் என்பவர்கள், கொச்சை வார்த்தைகள் உபயோகிப்பவர்கள்)
4. செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்... ஆனால், உணர்ச்சி வசப்பட வைப்பவர்களை ஒதுக்கிவிடுங்கள். (உதா. அர்னாப் போல வெறித்தனமாக கத்துபவர்கள்)
5. கூச்சலிடாமல், அறிவுஜீவித்தனமாக பேசினாலும், பேசுபவரின் நேர்மையை, அவர் கடந்து வந்த பாதையை பாருங்கள்.
6. சிரமம் பார்க்காமல் ஒரே செய்தியை பல வலைதளங்களில், செய்தி தாள்களில் படியுங்கள். ஒருமித்த கருத்து அந்த செய்திகளில் வந்திருக்கிறதா என்று பாருங்கள். உதா. இந்த லிங்கை பாருங்கள்
https://www.livemint.com/Home-Page/WpuNaIcqbRbsLUgXbkgIPM/Govt-extends-facility-of-fixed-term-employment-for-all-secto.html. Fixed Term Employment குறித்த சாதகங்களை மட்டுமே குறிப்பிட்ட இந்த வலைத்தளம் அதன் பாதகங்களை பற்றி சொல்லவில்லை.
7. தலைவர்கள் குறித்த குற்றச்சாட்டுகளையோ, ஏதாவது மதத்தினர் குறித்த குற்றச்சாட்டு செய்திகளையோ அப்படியே நம்பாதீர்கள். விஷயத்தை கொஞ்சம் ஆறப்போடுங்கள்.
8. மேற்சொன்ன குறிப்புகளை கடைப்பிடிக்கா விட்டால், அட்லீஸ்ட் சமூக வலைத்தளங்களில் எதையும் பகிராமலாவது இருங்கள்.

அனைத்திற்கும் மேலாக, தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தான கருத்துக்களை இப்போதே லைட்டாக, பென்சிலால் மனதில் எழுத ஆரம்பியுங்கள். காரணம், இனிமேல் பொய் செய்திகள் அதிகம் வர ஆரம்பிக்கும்... தேர்தல் சமயத்தில் உங்கள் அறிவு சரியான முடிவெடுப்பது கஷ்டமாகும்.

பொய் செய்திகள் அல்ல, நீங்கள்தான் உங்கள் வாக்கை தீர்மாணிக்கவேண்டும்..!

No comments:

Post a Comment