Thursday 22 March 2018

Mining in India – New Changes


இயற்கைவளம் நிரம்பிய நம் நாட்டில் சுரங்கத்துறை ஒரு முக்கியமான துறையாகும். சுரங்கத்துறை நம்நாட்டு ஜி.டி.பி-யில் 2.5% வரை பங்களிக்கிறது.... கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு நிதி ஆயோக் நிலக்கரியைதான் நம்பியிருக்கிறது என்றால் இந்த துறையின் முக்கியத்துவத்தை அறியலாம்.

இந்த துறை இன்னமும் வளர மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், வளராததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் – ஒன்று, 2008க்கு பிறகு உலக மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனது. இரண்டாவது, சட்ட சிக்கல்கள், வெளிப்படைத்தன்மையின்மை, அரசு விதிமுறைகள் போன்ற காரணங்கள்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று கொண்டதும் இந்த துறையில் Foreign Direct Investment (FDI) ஒரு லட்சம் கோடி வரை அதிகரிக்கவேண்டும் என்று விரும்பியது. 2014ல் இருந்து 2016 வரை இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7800 கோடி ரூபாய் FDI வழியாக கிடைத்தது. (2017ல் மீண்டும் FDI 330 கோடியாக விழுந்துவிட்டது வேறு விஷயம்). மேலும், அரசு அனுமதியை எளிதாக்க 31 கனிமங்களை மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, மாநிலங்களின் நிர்வாகத்திற்கு கொடுத்தது.

இப்படி அரசாங்கம் சுரங்கத்துறை வளர முயற்சிகள் எடுக்கும்போது, நம் நாட்டின் அரசு நடைமுறைகள், ஊழல் காரணமாக Illegal Mining எனப்படும் முறையில்லாத சுரங்கத்தொழில் அதிகமாக நடைபெறுவதும், நீதிமன்றம் தலையிட்டு சுரங்க உரிமங்களை ரத்து செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.


இப்படி ஒரிஸ்ஸாவில் இரும்பு மற்றும் மங்கனீஸ் தாது எடுக்க அரசாங்கம் உரிமம் கொடுக்க, அனுமதி பெறாத இடங்களில் சட்டவிரோதமாக தாது எடுப்பது, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் தாது எடுப்பது என்று அட்டகாசம் நடந்திருக்கிறது. சுற்றுசூழல் சீர்கேடு சொல்லி மாளாதது. பாதிக்கப்பட்ட ஆதிவாசியினர் போன்றோருக்கு ஒரு நிவாரணமோ, நஷ்டஈடோ கிடையாது. இதற்கெல்லாம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆசி இருந்திருக்குமென்று சொல்ல தேவையில்லை. (அரசு கம்பெனியான கோல் இந்தியாவும் இது போன்ற விதிமீறல்கள் செய்திருக்கிறது)

இது குறித்த வழக்கு பல ஆண்டுகள் நடந்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு அதிர்ச்சி தீர்ப்பளித்தது. அதாவது, சுற்றுசூழல் பாதிப்பு இருந்தால், அது உரிமம் பெற்ற சுரங்கமாக இருந்தாலும், அங்கு நடப்பது illgal mining என்று அதிரடியாக சொல்லியது. தீர்ப்பின் விளைவு - MMDRA சட்டப்படி எவ்வளவு தாது தோண்டப்பட்டதோ அதன் மதிப்பிற்கு அபராதம் கட்டவேண்டும்! ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம்! மேலும், புதிய சுரங்க கொள்கை உருவாக்க வேண்டுமென்றும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

இதற்காக ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு சுற்றுசூழல் ஆர்வலர் கூட இல்லையென்பது வருத்தமான விஷயம். இதுநாள் வரை யார் illegal mining நடக்க யார் உதவி செய்தார்களோ, யார் கடமை தவறினார்களோ அந்த அரசு அதிகாரிகளை கொண்டே ஒரு கமிட்டி அமைந்தது.

கமிட்டி எப்படியோ போகட்டும்.... இப்போது விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் சுற்றுசூழல் குறித்த விஷயத்தை கிளறியிருக்கிறது என்பது அரசின் கருத்து. அதனால், சுற்றுசூழல் காரணமாக உரிமம் பெற்ற mining-ஐ illegal என்று சொல்லக்கூடாது என்று முன்தேதியிட்டு (retrospectively) சட்டதிருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது.

இரண்டு விஷயங்கள் – ஒன்று ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம் என்பது சுரங்க தொழிலை நிச்சயம் பாதிக்கும். சுற்றுசூழல் குறித்த நிபந்தனை MMDRA சட்டத்தில் இல்லாதது. அதனால், அபராதத்தை குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவது, சுற்றுசூழல் பாதிக்கப்பட்ட இடங்களை முடிந்தவரை சரிசெய்வது போன்ற விஷயங்களுக்கு நிதி ஒதுக்கீடு எங்கிருந்து வரும்? இரண்டையும் அரசாங்கம் கவனிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை, சுற்றுசூழல் நாசத்தை அப்படியே கைகழுவ கூடாது.

இரண்டாவது, நாளது தேதி வரையில் சுற்றுசூழலுக்கும் illegal mining –ற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால், உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஒரு சரியான பார்வையை வழங்கியபின்னரும், சுற்றுசூழலுக்கும் சுரங்க உரிமத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறுகள் தொடர்ந்து நடக்கவே வழிவகுக்கும்.

மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

No comments:

Post a Comment