Friday 6 April 2018

Test of Proportionality


ஆதார் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திலே தொடர்ந்து நடந்து வருகிறது. ஆதார் Proportionality Test-ற்கு உட்பட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது என்ன proportionality test?
1882 பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி) போலீஸின் அதிகாரம் குறித்த ஒரு வழக்கில் முதன்முதலாக இந்த proportionality கருத்து விவாதிக்கப்பட்டது. மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டன – ஒன்று, முக்கியத்துவம் (Suitability) சட்டம் என்ன செய்ய நினைக்கிறதோ, அந்த குறிக்கோளானது, குடிமக்களின் உரிமையை பறிக்கும் அளவிற்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். உதா. நீங்கள் சுதந்திரமாக நடமாட எல்லா உரிமையும் இருந்தாலும், முக்கியமான விஐபி செல்லும்போது நீங்கள் சாலையை கடக்கக்கூடாது.
இரண்டாவது, தேவை (Necessity) சட்டத்தின் குறிக்கோளை அடைய வரையறுக்கப்படும் வழிமுறைகள் உண்மையிலேயே தேவையானதாக இருக்கவேண்டும். வழிமுறைகளை எளிமையாக்கினாலும், குறிக்கோள் நிறைவேறும் என்றால், அந்த diluted வழிமுறைகளையே பின்பற்றவேண்டும். உதா. விமானநிலையத்தில் தீவிரமான security check இருக்கும். மற்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் போதும், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உங்களை தொட்டு தடவி பரிசோதனை செய்வதில்லை.
மூன்றாவது, பொருத்தம் (Rationality). வழிமுறைகள் குறிக்கோளுடன் பொருந்தியதாக, அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். உதா. பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரும் பச்சை சட்டை அணியவேண்டும் என்றால் அது அறிவுக்கு பொருத்தமானதாக இல்லை.
இப்போது ஆதார், இந்த proportionality test-ஐ கடக்கவேண்டும். ஆதார் சட்டப்படி, UIDAI-க்கு மிக அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். UIDAI விரல் ரேகை, கண் ரேகை மட்டுமல்லாது, எந்த biological attribute-ம் கேட்கலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. இது ஒரு blanket approval.
செல்போன் சிம்களோடு ஆதார் இணைப்பதற்கு என்ன காரணம் என்று நீதிபதி கேட்டபோது அரசு வழக்கறிஞர், தீவிரவாதத்தை தடுப்பதற்கு என்று காரணம் கூறியுள்ளார். நீதிபதி இதை முழுதாக ஒப்புக்கொள்ளவில்லை.
அதே போல, வங்கியில் நடக்கும் மோசடிகளை ஆதார் போக்குமா என்று நீதிபதி கேட்டதற்கு, வங்கி அதிகாரிகளின் துணையோடு மோசடிகள் நடக்கின்றன, அவற்றை ஆதார் கொண்டு தடுக்கமுடியாது என்று வழக்கறிஞர் பதில் கூறியுள்ளர்.
விசாரணை தொடர்கிறது...

No comments:

Post a Comment