Friday 9 March 2018

மக்கள் தொகை குறைவது தீங்கு


தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையாதீர்கள்.... உண்மையைத்தான் சொல்கிறேன். மக்கள் தொகையை குறைப்பது மாநிலங்களுக்கு பெரும் பாதகம்தான். விவரமாக சொல்கிறேன்.

நம் நாட்டில் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பது, நாடாளுமன்ற தொகுதிகளை நிர்ணயிப்பது, ஏன் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது வரை அனைத்தையும் முடிவு செய்வது – மாநிலங்களின் மக்கள்தொகையே.

70களில் இந்திராகாந்தி மக்கள்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள்தொகையை குறைத்துவிடலாம் என்று எண்ணினாரோ என்னவோ, 1976ல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் போது 2001 வரை லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்று விட்டார். நாடு முழுவதும் ஒரே மாதிரி மக்கள்தொகை குறையும் என்பதுதான் அவரது assumption.

ஆனால், நடந்தது வேறு. நோயாளி மாநிலங்கள் என்று சொல்லப்படும் BIMARU (Bihar, Madhya pradesh, Rajasthan, Uttar Pradesh) மாநிலங்கள் மக்கள்தொகையில் வீங்கி கொண்டிருக்க, தென்னக மாநிலங்கள் மக்கள் தொகையை நன்றாக கட்டுப்படுத்தி கொண்டிருந்தன. கடந்த நாற்பதாண்டுகளில் தென்னக மாநிலங்களின் மக்கள்தொகை 121% அதிகரித்தது. பீமாரு மாநிலங்களின் மக்கள்தொகை 145% அதிகரித்தது. மக்கள்தொகையை மிகவும் கட்டுப்படுத்தியது கேரளமும், தமிழகமும்தான் (56%, 75%)

நிதி ஒதுக்கிட்டிலிருந்து, நாடாளுமன்றத்தில் குரல் ஒலிப்பது வரை இந்த மக்கள்தொகை முடிவு செய்யுமாதலால், 2001-ஆம் ஆண்டு லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றுவதற்கு எதிர்ப்பு வந்தது. இதையடுத்து வாஜ்பாய் அரசு 2026-ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் கொண்டு வரப்படாது என்று அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது.

முதன்முதலாக 14வது நிதி கமிஷன் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு, 2001 மக்கள்தொகையை சிறிய அளவில் பயன்படுத்தியது. அதாவது, 1971 மக்கள்தொகைக்கு 90%, 2001 மக்கள்தொகைக்கு 10% weightage. (இதற்கே தமிழகத்திற்கு வருமான இழப்பு ஏற்பட்டது)

இப்போது 15வது நிதி கமிஷன் 2011 மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு நிதிஒதுக்கீடு செய்யப்போவதாக சொல்லியுள்ளது. (மாநிலங்களுக்கான Weightage முடிவு செய்யப்படும்போது இந்த மக்கள்தொகை ஒரு முக்கிய காரணி). 15வது நிதி கமிஷனின் முடிவுகள் 2020-2025 வரை செல்லுபடியாகும்.

இன்னும் பார்ப்போம்.... ஏறத்தாழ பத்தரை லட்சம் மக்களுக்கு ஒரு தொகுதி என்னும் அடிப்படையில் லோக்சபா தொகுதிகள் முடிவுசெய்யப்பட்டன. தற்போது பீமாரு மாநிலங்களுக்கு 174 தொகுதிகளும் (மக்களவையில் 32%), தென்னக மாநிலங்களுக்கு 129 தொகுதிகளும் (மக்களவையில் 24%) இருக்கிறது.

இப்போது இதை 2011 சென்சஸ் அடிப்படையில் மாற்றினால், மக்களவையில் 1152 தொகுதிகள் இருக்கும். பீமாரு மாநிலங்களுக்கு 423 தொகுதிகளும் (37%), தென்னக மாநிலங்களுக்கு 239 தொகுதிகளும் (21%) கிடைக்கும். அதாவது, மக்கள் தொகையில் மட்டும முன்னேறி, வேறெதிலும் முன்னேறாத மாநிலங்கள் லோக்சபாவில் வலுவாக இருக்க, மக்கள் தொகையை குறைத்து, வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பலவீனமாக இருக்கும். அது மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி வளர்ச்சியடையாத (அப்படி அடைய விருப்பமில்லாத?) மாநிலங்களுக்கே செல்லும். 



கூட்டாட்சியில் இது போல பணக்கார மாநிலங்கள், ஏழை மாநிலங்களோடு பங்கீடு செய்வதுதான் நியாயம் என்றாலும் எந்த அளவிற்கு, எவ்வளவு காலத்திற்கு என்பதை முடிவு செய்யவேண்டும். Performers should not be punished.

இப்போது அரசியல்.... வடக்கு மாநிலங்களை மட்டும் ‘கவனித்தாலே’ (in other words படிப்பறிவு தராமல், மக்கள் தொகையை அதிகரித்து, மோசமான நிலையில் வைத்திருந்தாலே) மத்தியில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம், அல்லவா? பீமாரு மாநிலங்களில் பாஜக இருப்பதும் (பீஹாரிலும்), தென்னக மாநிலங்களில் பாஜக இல்லாததையும் கூட்டி கழித்து பாருங்கள். நிதி கமிஷன் 2026க்கு முன்பே 2011ஆம் ஆண்டு சென்சஸ் கணக்கை ஏன் உபயோகப்படுத்தவேண்டும்? இது குறித்து அறிவிப்பு வந்தும் எந்த கட்சியும் எதிர்த்து கேள்வி கேட்டதாக தெரியவில்லை.

No comments:

Post a Comment