Monday 2 October 2017

Facebook Discussions


உடனடியாக எதையும் செய்ய முடியாது. பண மதிப்பிழப்பிலேயே பொருளாதாரம் அடிவாங்கிவிட்டது. அதிலிருந்து வெளிவர சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும். இதற்கு நடுவே ஜி.எஸ்.டி என்ன செய்கிறது, செய்யப்போகிறது என்பதே புரியவில்லை. பண மதிப்பிழப்பினாலும், வருமான வரித்துறை கடுமையான பாய்ச்சல் காட்டுவதாலும் கட்டுமானத்துறை (Real Estate and Construction) வீழ்ந்து விட்டது. கொஞ்ச நாள் அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருத்தல் வேண்டும். ஐந்து வருடத்தில் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றெல்லாம் வீறாப்பு கூடாது.
இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு நம்மால் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது கடினம். இது நாள் வரை விவசாயம்தான் வேலை தந்து வந்தது. இந்தியா விவசாயத்தை விட்டுவிட்டு வெகு வேகமாக நகரமயமாகிறது. நகரமயமாகும் வேகத்தை குறைக்க வேண்டும்.
நகரத்தில் இருக்கும் ஜனங்கள் சுகபோகமாக இருக்க கிராமங்களில் இருப்பவர்கள் அவதிப்படுவார்களா? சிறிது சிறிதாக வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு போக வேண்டும். எந்த அரசாங்கமும் இதை செய்வதில்லை.
ஆட்டோமேஷனை சில காலத்துக்கு ஊக்கப்படுத்தக்கூடாது. ஏற்கனவே Car Driving –ல் ஆட்டோமேஷனை ஏற்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதை மற்ற துறைகளுக்கும் தொடரவேண்டும். 
கார்ப்பரேட்டுகளை மட்டும் ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு சிறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த வேண்டும், உதவி செய்ய வேண்டும். இந்த Startup-களை ஊக்கப்படுத்துகிறோம் என்னும் விளம்பரங்களை நிறுத்தி கொண்டு உண்மையிலேயே தொழில்களுக்கு உதவ வேண்டும்.
நான் கூறுபவை பத்தாம்பசலித்தனமாக தோன்றக்கூடும். ஆனால், இதுதான் வழி. நதிநீர் இணைப்பு என்று அரசாங்கம் பேச ஆரம்பித்திருப்பது வேலை வாய்ப்பை உருவாக்கவே என்பது என் எண்ணம். ஆனால் அது அடுத்த தலைவலி. 
நான் சொன்னது எதுவுமே சின்ன விஷயம் கிடையாது... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இந்தியாவுல இருக்குற லட்சக்கணக்கான கிராமங்களுக்கு நகரத்து வசதிகள கொண்டு போகணும். எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள், சாலை வசதிகள், கடைகள், மின்சாரம், வாகனங்கள்...? எத்தனை மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிகள், ஆசிரியர்கள், மின்உற்பத்தி நிலையங்கள்...? எவ்வளவு மூலதனமும், எத்தனை வருஷ உழைப்பும் தேவை? பொறுமையா யோசிச்சு பாருங்க. நான் சொல்லியிருக்கற ஒவ்வொரு பாயிண்டும் அப்படிப்பட்டதுதான். யானையை விட ரொம்ப பெருசு....
அரசாங்கத்த சும்மா இருக்க சொன்னது, பண மதிப்பிழப்பு மாதிரி நடவடிக்கைகள. ஏதாவது மாற்றம் கொண்டு வந்தா, அதோட எதிர்விளைவுகள் (ripple effects) அடங்கற வரைக்கும் பொறுமை வேணும். அது இந்த அரசாங்கத்துக்கிட்ட இல்ல.
மானியம் குறித்த என்னோட பார்வைகள் வேற. பேஸ்புக்கில ரொம்ப பெரிய அளவுல விவாதிக்க முடியாது. இந்தளவுக்குத்தான் பதிவு போடமுடியுது. இது பேஸ்புக்குல இருக்கற சங்கடம்.
நான் சொன்னது வெறும் பொருளாதார கட்டமைப்பு மட்டுமல்ல. நான் பொருளாதாரத்த தனியா பாக்கல... அப்படி பாக்கவும் முடியாது. ஒட்டுமொத்தமா அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, மொழி, நீதி, சுற்றுசூழல் - இப்படி நாட்டோட எல்லா விஷயங்களையும் பத்தி சொல்றேன். நான் சொல்றது கிராமங்கள நோக்கி அரசியல், பொருளாதாரத்தோட பார்வைய திருப்பற ஒரு விஷயம். 
மற்ற நாடுகளும் இந்தியாவும் வேற. நமக்கான திட்டத்த நாமதான் உருவாக்கனும். அது பொருளாதாரமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி.... இப்படி புதுப்பார்வையோட ஒரு புதுப்பயணத்த ஆரம்பிக்கனும். 
5 அல்லது 10 வருஷத்துல முடியற விஷயம் இல்ல. எந்த ஒரு நாடும் ஒரு இலக்கை அடைஞ்சுட்டு உக்காரமுடியாது. இது ஒரு பயணம். இலக்கு மட்டுமே சந்தோஷமல்ல, பயணம் மொத்தமே சந்தோஷம்தான். இன்னிக்கு எல்லாரும் ஒரு சந்தோஷமான இலக்கை எதிர்பாக்கறாங்க. நான் ஒரு சந்தோஷமான பயணத்த பத்தி பேசறேன்.

No comments:

Post a Comment