Friday 27 April 2018

நீதிபதிகள் நியமனம்


கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதியின் பெயரை மத்திய அரசு நிராகரித்து விட்டது. நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கும் (இனிமேல் சுருக்கமாக கோர்ட்) மத்திய அரசுக்கும் இடையில் என்னத்தான் பிரச்சனை?
அரசியலமைப்பு சட்டப்படி நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்னால் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க (Consultation) வேண்டும்.
நடைமுறையில் மத்திய அரசுதான், கோர்ட்டுடன் கலந்தாலோசித்து புதிய நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், 90களில் இந்த நிலைமை மாறியது. Consultation என்று அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட வார்த்தையை Concurrence (ஒத்துப்போதல்) என்றே படிக்கவேண்டும் என்று கோர்ட் சொன்னது. அதாவது, கோர்ட் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயரை ஜனாதிபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், நீதிபதிகளின் நியமன அதிகாரம் கோர்ட்டின் கைக்கு வந்துவிட்டது. இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலீஜியம் முறை. இந்த முறையில் கோர்ட் பரிந்துரைக்கும் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் கொரியர் பாய்தான் மத்திய அரசு..!
இந்த முறை மிகவும் விசித்திரமானது... அரசியலமைப்பு சட்டத்திலும் சொல்லப்படாதது. வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கொலீஜியம் முறை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்கள், இந்த முறையை மீண்டும் பரிசீலனை செய்யச்சொல்லி கோர்ட்டை வேண்டினார். கோர்ட்டும் கொலீஜியம் முறையையே உறுதி செய்தது.
மோடியின் அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிபதிகளை ஒரு தனிக்குழு நியமிக்கும் என்று ஒரு சட்டம் (NJAC Act) கொண்டு வந்தது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி அந்த சட்டத்தை கோர்ட் நிராகரித்து விட்டது.
கடுப்பான மத்திய அரசு அதற்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிக்கவே இல்லை. கோர்ட்டின் பரிந்துரையை மத்திய அரசுதான் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அப்படி எந்த பரிந்துரையையும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இப்படியாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசும் முட்டி கொண்டது. இதுதான் இதுவரை நடந்த வரலாறு.
சரி, இப்போதைய பிரச்சனை என்ன? கொலீஜியம் பரிந்துரைத்த ஒரு நீதிபதியின் நியமனத்தை மத்திய அரசு ஏற்கவில்லை. அரசு சொல்லும் காரணம் – சீனியாரிட்டி அடிப்படையில் அவர் 45வது இடத்தில் இருக்கிறார் என்பதே.
பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றாலும், திறமையின் அடிப்படையிலும் கொலீஜியம் நீதிபதியை பரிந்துரைக்கலாம். ஆக, மத்திய அரசு பெயரை நிராகரித்தது, தற்போது இருக்கும் நடைமுறை பிரகாரம் சரியில்லை.
பாஜக சில சித்து வேலைகள் செய்து உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை 2016-ல் கொண்டுவந்தது. அப்படி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தவர்தான், தற்போது கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி என்பதால் இந்த விஷயம் அரசியல் முக்கியத்துவமும் பெறுகிறது.
மத்திய அரசின் தலையீட்டிற்கு எதிராக நீதித்துறை இருந்தாலும், தலைமை நீதிபதி இது குறித்து பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்பட்ட பெயரை நிராகரிக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லியிருக்கிறார். அதே நீதிபதியை இரண்டாவது முறை பரிந்துரைப்பார் என்னும் நம்பிக்கை எனக்கில்லை.
அதே சமயம் கொலீஜியம் முறையை தலைமை நீதிபதியால் மட்டுமே மாற்ற முடியாது. கொலீஜியம் தொடரத்தான் போகிறது... இதில் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதுதான் கேள்விக்குறி...! கொலீஜியம் முறை அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படாதது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment