Tuesday 10 April 2018

Virtual Water


உங்கள் ஜீன்ஸ் பேண்டில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று கேட்டால் ‘இவன் யாருடா லூஸு?’ போல பார்ப்பீர்கள்... ஆனால் உங்கள் ஜீன்ஸ் பேண்டில் 8000-10000 லிட்டர் தண்ணீர் இருக்கிறது.
அதாவது, ஜீன்ஸ் பேண்டிற்கு பருத்தி வேண்டும்.... பின்னர் அதை நூலாக்கி சாயம் ஏற்றவேண்டும்.... பேண்ட் தயாரித்தபின் அதை தோய்க்கவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நீர் வேண்டும். இப்படி ஒரு ஜீன்ஸ் பேண்ட் செய்ய மொத்தமாக 8000 லிட்டர் தண்ணீர் வேண்டும். இதை மறைநீர் (Virtual Water) என்கிறார்கள்.
இப்படி நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் (உங்கள் செல்போனில் கூட) தண்ணீர் இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும்போதும் அதோடு சேர்த்து நீரை செலவழிக்கிறோம் என்பதை மனதில் வையுங்கள். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை....
இந்த பூமியின் 71% தண்ணீர்தான்... ஆனால், அத்தனை தண்ணீரும் நாம் உபயோகப்படுத்த தகுந்ததல்ல. இருக்கும் தண்ணீரில் 97% கடலிலே உப்பு நீராக உள்ளது. மிச்சம் இருக்கும் 3%தான் நல்ல நீர்.

அந்த 3 சதவீதத்தையே இப்போது எடுத்து கொள்ளுங்கள்... அதிலே கிட்டத்தட்ட 69% பனிப்பாறைகளாக (Glaciers) இருக்கின்றன. அவையெல்லாம் உருகினால் கடல் பொங்கி ஊரை மூழ்கடித்துவிடும். அதனால் அதை மறந்துவிடுவோம். ஒரு 30% நிலத்திற்கு கீழே உள்ளது. நிலத்தடி நீர் அனைத்தையும் எளிதாக எடுத்துவிட முடியாது. மிச்சம் இருக்கும் 1 சதவிகிதத்திற்கும் குறைவான நீர்தான் நாம் ஆறுகளில், ஏரிகளில் பார்க்கும் தண்ணீர். நாம் எளிதாக உபயோகிக்க முடிந்த நீர் இவ்வளவுதான்..!
முன்பிருந்ததை விட உலக மக்கள்தொகை அதிகரித்து விட்டது. மக்கள்தொகையாலும், தொழிற்சாலைகள் அதிகரித்ததாலும் தண்ணீரின் தேவை அதிகரித்துவிட்டது. ஆனால் உலகின் தண்ணீர் அளவுகள் மாறவில்லை... மாறவும் போவதில்லை.
சுருக்கமாக சொன்னால், தண்ணீர் ஒரு Limited Resource. அதை சிக்கனமாகவும், முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை தந்து உபயோகிப்பதும்தான் புத்திசாலித்தனம்.
முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை தந்து அதற்கு ஏற்றபடி தண்ணீரை பயன்படுத்துவது எப்படி?
இங்குதான் Virtual Water Trade அதாவது மறைநீர் வர்த்தகம் என்னும் விஷயம் வருகிறது. அதாவது, தண்ணீர் குறைவாக இருக்கும் நாடுகள் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்யாமல் முடிந்தவரை பொருட்களை இறக்குமதி செய்வது, தண்ணீர் அதிகமாக இருக்கும் நாடுகள் Virtual Water அதிகம் தேவைப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்து தண்ணீர் வளத்தை காசாக மாற்றுவது.
இப்படி தண்ணீரை ஆதாரமாக கொண்டு ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை வகுப்பதெல்லாம் இன்னும் தெளிவான பொருளாதார கொள்கையாக வரையப்படவில்லை. ஆனால், சீனா ஏற்கனவே இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறது.
சீனா கால்நடை தீவனம், பருத்தி, சோயாபீன்ஸ், தானியங்கள், கோழி ஆகியவற்றை இறக்குமதி செய்துகொள்கிறது. இதன்மூலம் தனது நீர்வளத்தை காத்து கொள்கிறது.
இந்தியா? இந்த விஷயத்தில் இந்தியா அசடுதான்…. அதிக தண்ணீர் தேவைப்படும் பருத்தி, காபி, மாட்டுக்கறி (Beef), முந்திரி, தாதுபொருட்கள் இதையெல்லாம் உலகிலேயே அதிக அளவில் உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்கிறது.
உலகிலேயே அதிகமாக மறைநீர் ஏற்றமதி செய்யும் நாடு, நம் இந்தியாதான்…!
தண்ணீர் செலவை பொறுத்தவரை பொருட்கள் மட்டுமல்ல, பொருட்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் மற்ற விஷயங்களும் கவனிக்கவேண்டியவை. ஒரு நல்ல, ஈரப்பதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்வதை விட, வறண்ட நிலத்தில் விவசாயம் செய்ய இரண்டு மடங்கு நீர் தேவை.
மண்வளத்திற்கேற்ற விவசாயம் ரொம்ப முக்கியம். உதா. கர்நாடகத்தின் மாண்ட்யா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் ஒருகாலத்தில் ராகி முக்கியமாக பயிரிடப்பட்டு வந்தது. நெல் உற்பத்தி செய்ய ஆகும் தண்ணீர் தேவையில் ஆறில் ஒரு பங்கிலே ராகி உற்பத்தி செய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு பாசன வசதிகளை அதிகப்படுத்தியப்பின் நெல், கரும்பு ஆகியவற்றை மிகுதியாக பயிரிட தொடங்கினர். கரும்பு சாகுபடிக்கு ஏற்ற மண்வாகே இந்த மாவட்டங்களில் கிடையாது. விளைவு – அதிக நீர் செலவு..!
உற்பத்தி முறைகளும் முக்கியமானவை… உதா. ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய அமெரிக்காவிலும், சீனாவிலும் ஏறக்குறைய 1300 லிட்டர் தண்ணீர் செலவாகிறதென்றால், இந்தியாவில் 2850 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. நெல் மட்டுமல்ல, எந்த பயிரை எடுத்தாலும் இந்தியா அதிகம் தண்ணீர் செலவழித்தே உற்பத்தி செய்கிறது. விவசாயம் மட்டுமல்லாது, இந்தியாவில் லெதர் போன்ற பொருட்களின் உற்பத்திக்கும் நிறையவே தண்ணீர் செலவாகிறது.
நம்முடைய விவசாய முறை, உற்பத்தி முறைகள் மாற வேண்டும் என்பதையே இது சுட்டி காட்டுகிறது. தண்ணீரை திறமையாக உபயோகிப்பது குறித்த கவனம் நம் நாட்டில் சுத்தமாக இல்லை.
இந்தியாவிற்கு நல்ல மழைவளம் இருந்தாலும், மொத்த மழையில் 50% மழை வெறும் 15 நாளில் பொழிந்து தள்ளிவிடும். 90% ஆறுகள் 4 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கொண்டிருக்கும். தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு இயற்கையாகவே இருக்கிறது. ஆனால், அந்த சேமிப்பு நடப்பதில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் குடிமகன் ஒருவனுக்கு 5 மில்லியன் லிட்டர் அளவிற்கு சேமிப்பு ஆதாரம் கொண்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா கூட ஒரு குடிமகனுக்கு 1 மில்லியன் லிட்டர் சேமிப்பு ஆதாரம் கொண்டிருக்கிறது. இந்தியா 2 லட்சம் லிட்டர் அளவிற்குதான் சேமிப்பு ஆதாரம் வைத்திருக்கிறது… நிச்சயமாக இது போதாது. (2005ம் ஆண்டு உலக வங்கி ரிப்போர்ட்)
நிலத்தடி நீரையாவது சேமிக்கிறோமா என்றால் அதுவும் கிடையாது. உலகிலேயே நிலத்தடி தண்ணீரை அதிகம் உபயோகிப்பது நாம்தான். சேமிப்பதற்கான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. உதா. பெங்களூரு நகரத்தில் பெய்யும் மழையில் 30% நீரை சேமித்தால் கூட, அந்த ஊருக்கு சப்ளை செய்யப்படும் காவிரி நீரை விட அதிகமாக சேமிக்க முடியும்.
அரசாங்க திட்டங்களும் கார்ப்பரேட்களின் நன்மையையே கருத்தில் கொண்டு அமைகின்றன என்பது வருத்தமான விஷயம். நதிநீர் மாசு, நிலத்தடி நீர் மாசு, வணிக பயன்பாட்டுக்கு வரைமுறையின்றி தண்ணீர் உறிஞ்சுவது என்று கார்ப்பரேட்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதும், அரசாங்கம் கண்மூடி வேடிக்கை பார்ப்பதும் வேதனை.
சரி, அரசாங்கத்தையோ, கார்ப்பரேட்களையோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீரை பாதுகாக்க குடிமக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?
தண்ணீரை சேமிக்க வழிகள் என்ன? குழாயை மூடுவது, ஷவர் இல்லாமல் குளிப்பது போன்ற வழக்கமான வழிகளுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களை சொல்கிறேன். முடிந்தவரை கடைப்பிடிக்க பாருங்கள்.
உணவை வீணடிக்காதீர். ஒவ்வொரு உணவு பொருளும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியே உங்கள் தட்டிற்கு வருகிறது. அதனால், உணவை வீணடிப்பவர் அத்தனை லிட்டர் தண்ணீரை வீணடித்தவரே..!
அசைவ பிரியர்கள் முடிந்தால் அசைவம் சாப்பிடுவதை கொஞ்சமாவது குறைத்து கொள்ளுங்கள். அசைவ உணவுகளுக்கு ஏராளமான தண்ணீர் தேவைப்படுமாம். எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அறிய கொஞ்சம் கூகுள் செய்யுங்கள்.
Softdrinks என்னும் குளிர்பானங்கள் எல்லாம் அதிக தண்ணீரை உறிஞ்சுபவை. உதா. 1 லிட்டர் குளிர்பானம் உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இது நேரடி நீர் மட்டுமே. மறைநீரை சேர்த்தால் இது 250 லிட்டராக உயரும். (குளிர்பானங்களில் அதிகம் சர்க்கரை உண்டு... சர்க்கரை கரும்பிலிருந்து வருகிறது... கரும்பு அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்... புரிகிறதா?) பாட்டில் தண்ணீர் கூட தவிருங்கள். அதற்கும் அதிக தண்ணீர் தேவைப்படும்.
இந்த குளிர்பான கம்பெனிகள் நம்நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நாம் அறிந்ததே... நம் இயற்கை வளத்தை அழித்து, ஏராளமான சர்க்கரை போட்டு நமக்கு வியாதி கொடுத்து, அதிக விலைக்கு விற்கும் பானங்கள் நமக்கு தேவையா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
தண்ணீர் சேமிக்க இன்னும் கொஞ்சம் டிப்ஸ்...
ரசாயன உரத்தாலும், பூச்சி கொல்லிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணும், நீரும் நஞ்சாகிறது. விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் முடிந்தவரை ஆர்கானிக் பயிர்களுக்கு ஆதரவளியுங்கள். கெமிக்கல் தெளிக்காவிட்டால் மண்வளமும், நீர்வளமும் காக்கப்படும்.
சிறு தானியங்களை சாப்பிட ஆரம்பியுங்கள். தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானியங்களுக்கு, பொதுவாக உரங்களும் தேவையில்லை. இவை Low Glycemic உணவாகும்... அதாவது, உங்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் இருக்க உதவும். இவ்வளவு நன்மை பொருந்திய சிறு தானியங்களை ஆதரியுங்கள்.
மின்சார பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள். மின் உற்பத்திக்கு தண்ணீர் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. மின்சாரத்தை சேமித்தால் தண்ணீரை சேமிப்பவர் ஆவோம். (நம் ஊரில் transmission loss 22%... அது இன்னொரு கதை)

Use and Throw கலாச்சாரத்தை முடிந்தவரை கைவிடுங்கள். ஒவ்வொரு பொருளிலும் நீர் உள்ளது. ஒரு பொருளை ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிவது தண்ணீரை வீணடிக்கும் செயலே, அல்லவா?
பிளாஸ்டிக் தயாரிக்கவும் தண்ணீர் வேண்டும். உபயோகித்தப்பின் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் குப்பைகள் தண்ணீரை மாசு படுத்துகின்றன... மழை நீர் பூமியில் இறங்காது தடுக்கின்றன... இவ்வளவு மோசமான பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்வில் இணைந்துவிட்டது. முடிந்த அளவு பிளாஸ்டிக்கை தவிருங்கள். பிளாஸ்டிக் கவர் வேண்டாம்... மஞ்சள் பையே உற்ற நண்பன்.
நம்மிடம் ஒரு சொத்து இருந்தால் அதை பாதுகாத்து நம் வாரிசுகளிடம் பத்திரமாக ஒப்படைப்போம் அல்லவா? சொத்திற்கு எல்லாம் மேலான சொத்து, இந்த பூமியும், நீரும், காற்றும். அவற்றை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைக்கும் பொறுப்புடன் செயல்படுவோம்.

No comments:

Post a Comment