Tuesday 27 February 2018

ஹாங்


Hang சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தாளவாத்தியம் ... ஹாங் என்று உச்சரிக்க வேண்டும். சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஃபெலிக்ஸ் ரோனர் மற்றும் சபீனா ஷாரார் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த இசைக்கருவி பிரபலமாகி கொண்டு வந்தாலும், இன்னும் அவ்வளவு பரவலாகவில்லை....

நம்ம ஊர் வாணலி இரண்டை ஒட்ட வைத்தது போன்ற அமைப்பு.... மேலே இருக்கும் வாணலிக்கு டிங் (Ding) என்று பெயர்... இதில் விதவிதமான ஸ்வரம் எழுப்பும் குழிகள் உள்ளன. கீழ் பக்கம் இருக்கும் வாணலிக்கு கூ (Gu) என்று பெயர். ‘கூ’-வில் சின்ன ஓட்டை இருக்கிறது. காற்று அதன் உள்ளே நுழைவதால் ஒரு வித்தியாசமான எஃபக்ட் கிடைக்கிறது.

ஹாங் இன்னும் Standardize செய்யப்படவில்லை... அதை செய்யும் உலோகத்தில், அதன் அமைப்பில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி மாற்றம் செய்யப்பட்ட இசைக்கருவிகளை எல்லாம் Handpan என்று அழைக்கிறார்கள். Standardize செய்யப்படாததால் ஒவ்வொரு கருவியிலும் ஒவ்வொரு விதமான இசை அனுபவம் கிடைக்கிறது. படுக்க வைத்து வாசித்தால் ஒருவிதமான ஓசைகளும், செங்குத்தாக நிற்க வைத்து வாசித்தால் வேறுவிதமான ஓசைகளும் கிடைக்கின்றன.

ஒரு சிறிய 3 நிமிட விடியோவை இங்கே தந்துள்ளேன். மேலும் இந்த இசை கேட்க விரும்புபவர்கள் யூடியூபில் சென்று Hangdrum, Handpan என்று வார்த்தைகளை கொண்டு தேடலாம்.

https://m.youtube.com/watch?v=747hJQNJpeg

நீரவ் மோடி டெபாஸிட்


டீமானிடைஸேஷன் அறிவிப்பிற்கு சில மணி நேரங்கள் முன்பாக நீரவ் மோடி 90 கோடி ரூபாய் பணத்தை (பழைய நோட்டுகள்) வங்கியிலே டெபாசிட்செய்துள்ளார் என்னும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

RBI பழைய நோட்டுக்களை எண்ணி முடிக்கவுமில்லை….. டீமானிடைஸேஷன் மர்மங்கள் என்றும் விலக போவதுமில்லை…! 

திரிபுரா தேர்தல் மறுவாக்குப்பதிவு


திரிபுரா சட்டசபை தேர்தலில் 191 (6%) VVPAT மெஷின்களும், 89 (5%) EVM மெஷின்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றும், 520 வாக்குச்சாவடிகளில் மெஷின்களை குறித்த குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்றும் தேர்தல் ஆணையரே கூறியுள்ளார்.

இதற்கிடையில், எந்த குற்றச்சாட்டும் எழாத 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையர் உத்தரவு போட்டிருக்கிறார். ஏன் மறுதேர்தல் என்பதற்கு எந்த காரணமும் சொல்லவில்லை. அதில் ஒன்று மாணிக் சர்க்கார் போட்டியிடும் தொகுதியை சேர்ந்ததாகும்.

சில வாக்குச்சாவடிகளில் வோட்டர் லிஸ்டில் இருப்பவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாகவே வோட்டுக்கள் பதிவும் ஆகியிருக்கின்றன. அங்கெல்லாம் மறு வாக்குப்பதிவு வைக்காமல், இந்த 6 வாக்குச்சாவடிகள் மட்டும் ஏனோ?

மேலே இருப்பவனுக்கே அனைத்தும் வெளிச்சம்….!

Friday 23 February 2018

ஆசிரியர்கள் கையில் துப்பாக்கி?


அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் நாம் அனைவரும் அறிந்ததே…! கடந்த 14ம் தேதி ஃப்ளாரிடாவில் உள்ள MSD High School என்னும் பள்ளியில் ஜேக்கப் க்ரூஸ் என்னும் 19 வயது இளைஞன் (சிறுவன்?) நுழைந்து 17 மாணவர்களை சுட்டு தள்ளினான்.

க்ரூஸ் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்…. கறுப்பர்களை காரணமே இல்லாமல் வெறுப்பவன்…. துப்பாக்கிகளை நேசிப்பவன்….. சமூக வலைத்தளங்களில் அவனது தீவிரவாத கருத்துக்களுக்காக அரசாங்கத்தின் பார்வையிலே ஏற்கனவே இருப்பவன். அப்படியிருந்தும் எப்படியோ இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்திவிட்டான்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த முறை துப்பாக்கிகளுக்கு எதிராக போராடுபவர்கள் க்ரூஸின் தாக்குதலிலிருந்து தப்பித்த மாணவர்கள். “Never Again MSD” என்னும் இயக்கத்தை ஆரம்பித்து வலுவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க ரஷ்யாவும் களத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்க மக்களை இரண்டு குரூப்களாக பிரிக்க வலைதளங்களில் Automated BOT-கள் மூலமாக கருத்துகளை விதைத்து விடுகிறது. இது மூலமாக அமெரிக்க மக்களிடையே வெறுப்பை வளர்த்து வருகிறது. (இதே போல நெட் நியூட்ராலிட்டி விவாதங்களிலும் BOT-கள் மூலமாக கருத்துகளை பரவ செய்தனர். டெக்னாலஜி என்பது எப்போதுமே இருமுனை கத்திதான்…. அது வேறு கதை)

எப்போதெல்லாம் துப்பாக்கிகளுக்கு எதிரான கருத்து ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் NRA (National Rifle Association) தன் லாபியை தொடங்கிவிடும். அதிபர் ட்ரம்போ துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிப்பவர். அவர் தேர்தல் பிரசாரத்திற்காக NRA மொத்தம் 30 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்தது.


அப்படிப்பட்ட ட்ரம்ப் வேறு என்ன முடிவெடுப்பார்…? பள்ளி குழந்தைகளை துப்பாக்கி சூடுகளிலிருந்து காப்பாற்ற, ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்கலாம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். நாளை ஏதாவது ஆசிரியரே மனநிலை தவறிப்போய் குழந்தைகளை கொன்றால்…? குழந்தைகளிடமும் துப்பாக்கி கொடுக்கலாம் என்பார். இவரையெல்லாம் அதிபராக வைத்துக்கொண்டு…?

மக்களுக்கு எதற்கு துப்பாக்கி? அமெரிக்கர்களுக்கு துப்பாக்கி ஒரு போதையாக உள்ளது…. கண்டிப்பாக மனநிலை சிகிச்சை தேவைப்படுகிறது.

Wednesday 21 February 2018

Guilt Tax


நம்ம ஊரில் நியாயமாக வரி போட்டாலே, அதை கட்டுவதற்கு மூக்கால் அழுபவர்கள் உண்டு. ஆனால், லண்டனிலே அதிக வரி கட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பணக்கார ஏரியா. அப்படிப்பட்ட ஏரியாவிலும் ஏழைகள் உண்டு. சமீபத்தில் கூட வீடில்லாமல் தெருவில் படுத்திருந்த ஒருவர் இறந்து போய்விட்டார். (இதையெல்லாம் அவர்கள் ஊரில் ரொம்ப சீரியஸாக எடுத்து கொள்கிறார்கள்)

இப்படி தங்கள் ஏரியாவில் இருக்கும் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயருவதற்காக, வெஸ்ட்மின்ஸ்டரில் இருக்கும் பணக்காரர்கள் City Council க்கு அதிக வரி கட்ட தாங்களாகவே முன்வந்திருக்கிறார்கள். அதாவது, தாங்கள் மட்டும் பணக்கார வாழ்க்கையை வாழ, மற்றவர்கள் ஏழ்மையில் வாடுவதை கண்டு வருந்தி, அதிக வரி கட்ட தயாராக இருக்கிறார்கள். அதனால், இதை guilt tax, அதாவது, குற்றவுணர்ச்சி வரி என்று அழைக்கிறார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் இதை சமூக நன்கொடை (Community Contribution) என்றழைக்கிறது. 10 மில்லியன் பவுண்டு மதிப்பிற்கு மேல் சொத்து இருந்தால், அவர்களை நிதியுதவி செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த நிதியுதவி செய்யவேண்டியது கட்டாயமில்லை என்றாலும், 55% பணக்காரர்கள் புதிய வரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

நல்லார் உளரேல் அவர் பொருட்டு மழை...!

Tuesday 20 February 2018

டிரம்பும், அவர் பிஸினஸும்


பொதுவாக அமெரிக்க அதிபர்கள், தாங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தங்கள் சொத்துக்கள், வியாபாரங்களை எல்லாம் ஒரு Blind Trust – ன் கட்டுப்பாட்டிற்கு மாற்றி விடுவார்கள்.

அது என்ன பிளைன்ட் டிரஸ்ட்? பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, வியாபாரத்தில் என்ன நடக்கிறது போன்ற விவரங்களை சொத்தின் உரிமையாளருக்கு தெரிவிக்க மாட்டார்கள். அதுதான் பிளைன்ட் டிரஸ்ட்.

இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தனக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கவும் முடியாது…. அவர் தனக்கு சாதகமாக பொருளாதார முடிவுகள் எடுக்கிறார் என்று யாரும் குற்றம் சாட்டவும் முடியாது.

இந்த வழக்கத்தை முதலில் ஒபாமா உடைத்தார்…. தன்னுடைய பணத்தை எல்லாம் treasury bond – களில் முதலீடு செய்தார். அதனால், அவருக்கு பிளைன்ட் டிரஸ்ட் அமைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதன் மூலமாக அதிபரின் சொத்து மதிப்பு என்னவென்று மக்களுக்கு நேரடியாக தெரியும் என்று காரணமும் கூறப்பட்டது.

இப்போது, டிரம்ப் விஷயத்துக்கு வருவோம்….

டிரம்ப் ஆர்கனைஸேஷன் என்பது மிகப்பெரிய நிறுவனம்…. 1923ல் டிரம்பின் பாட்டியும், அப்பாவும் ஆரம்பித்த நிறுவனம்… 70களில் இருந்து டிரம்ப் நிர்வாகம் செய்து வருகிறார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் டிரம்ப் தன் மகன்களை டிரஸ்டியாக போட்டு, தன் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டார். ஆனால், அது பிளைன்ட் டிரஸ்ட் கிடையாது.



அமெரிக்க அதிபர் பிளைன்ட் டிரஸ்ட்தான் உருவாக்க வேண்டுமென்று சட்டம் எதுவும் இல்லை…. அது ஒரு மரபுதான். அந்த மரபை ஒபாமா மாற்றியது, டிரம்பிற்கு சாதகமாகிவிட்டது.

அதிபர், தன் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு பாலிஸிகளை தீர்மாணிக்கிறார் என்ற சந்தேகம் அமெரிக்காவில் உண்டு. இது தொடர்பான வழக்குகளை சமீபத்தில் கோர்ட் தள்ளுபடி செய்து, அமெரிக்க காங்கிரஸ்தான் இதை பற்றியெல்லாம் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.

இப்படியெல்லாம் பிரச்சனை வரக்கூடாது என்றுதான் நம்ம ஊரிலே பினாமி வைத்து கொள்வது…!

Friday 16 February 2018

Yondr Your Cellphone


அடிக்ஷன் காரணமாக பலரும் செல்போன்களை எப்போதும் நோண்டி கொண்டே இருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த வியாதி பரவி வருவது கவலை தரும் ஒரு விஷயம்தான்.

ஆபிஸ் மீட்டிங்கில் மேனேஜர் பேச்சை கேட்காமல்…. வகுப்பறையிலே ஆசிரியரை கவனிக்காமல்…. இசைநிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கு இசையை ரசிக்காமல்… செல்போன் நோண்டி கொண்டே இருக்கிறார்கள். திருமண விழாக்களுக்கு சென்றால் கூட செல்போனே பிரதானம்… இப்படி, செல்போனால் கவனம் சிதறுவது ஒருபக்கம் இருக்க, மனித உறவுகளும் பாதிக்கப்படுகின்றன.

இதற்கெல்லாம் ஒரு எளிய தீர்வுதான் யாண்டர் (Yondr). யாண்டர் ஒரு சின்ன ரப்பர் பௌச்.. உங்கள் செல்போனை இந்த பையினுள் போட்டுவிடவேண்டும்… சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் பார்க்கும் anti theft tag இந்த பையை மூடிவிடும்…. இப்போது உங்களால் செல்போனை வெளியே எடுக்க முடியாது. மீண்டும் செல்போனை எடுக்கவேண்டுமானால், நீங்கள் அதற்குரிய base station வந்துதான் அன்லாக் செய்ய வேண்டும். இனி உங்கள் கைவிரல்கள் செல்போனை நோண்டி கொண்டிருக்காது…. வாவ்!


யாண்டர் நிறுவனம் இந்த பைகளையும், base station-ஐயும் தயாரித்து வாடகைக்கு விடுகிறது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், இசை அரங்குகள் பலவும், மிக எளிய தீர்வான யாண்டர்க்கு மாறி வருகின்றன.

கலிபோர்னியாவில் ஒரு பள்ளி ஆசிரியர் இதுபற்றி சொல்லும்போது, “யாண்டர் வந்த பிறகு மாணவர்களின் ஒழுங்கீனம் குறைந்திருக்கிறது… கிரேடுகள் முன்னேறியிருக்கின்றன… மாணவர்கள் மேல் வந்த கம்ப்ளெயிண்டுகள் 82% குறைந்துவிட்டன” என்கிறார். வேறு ஏதாவது சைடு எஃபக்ட்…? “ஆமாம், பள்ளி வளாகம் சத்தமாகிவிட்டது. மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுகிறார்கள்… விளையாடுகிறார்கள். முன்பு போல கூட்டமாக நின்றுகொண்டு செல்போனையே பார்த்து கொண்டிருப்பதில்லை” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் யாண்டர் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. நம்ம ஊருக்கும் யாண்டர் தேவைதான். உள்ளொழுக்கங்கள் மனிதனை வழிநடத்தாத போது, வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம்தானே..?

Tuesday 13 February 2018

GSTயும் வழக்குகளும்


GST - நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு அமலாகிவிட்டது. ஆனால், இன்னும் வர்த்தகர்களின் சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்ந்தபாடில்லை. வரித்துறை அதிகாரிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இருக்கும் புரிதல் குழப்பம், நீதிமன்றங்களில் வழக்காகத்தான் போய் முடியும்.

GST வரி அமலாக்கப்பட்டவுடன் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்... இது GST வரியை அமல்படுத்திய பல நாடுகளின் அனுபவம். நம் நாட்டிலும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட புரிதல் காரணமாக வழக்குகள் அதிகமாகலாம். இந்திய பொருளாதாரத்தின் அளவை வைத்து பார்த்தால் GST குழப்பங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று KPMG கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் நம் நாட்டு சூழ்நிலை அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை. ஏற்கனவே நேரடி, மறைமுக விரிவிதிப்பு தொடர்பாக 2 லட்சம் வழக்குகள் பல நிலைகளில் தேங்கி கிடக்கின்றன (படத்தை பார்க்கவும்). இவற்றோடு GST குறித்த வழக்குகளும் அதிகமாக சேரும் வாய்ப்பு இருக்கிறது.
 



இது விஷயத்தில் வரித்துறை அதிகாரிகள் மேல்தான் அதிக தவறு இருப்பதாக தோன்றுகிறது. இது போன்ற வழக்குகளில் 65% வழக்குகள் வரி கட்டுபவர்களுக்கு சாதகமாகவே முடிகின்றன. இந்த சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, அதிகாரிகள் வீண் வழக்கு தொடுப்பது அதிகமாக இருக்கிறது.
 

இதற்காகவே வரித்துறை அதிகாரிகளின் Performance appraisal முறையை சென்ற வருடத்திலிருந்து அரசாங்கம் மாற்றியுள்ளது. அதாவது, நிறைய வரி வசூலித்தால் சிறந்த appraisal என்பது இல்லாமல், தரமான துரிதமான assessment, வரிகட்டுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் இருக்கும் தகராறுகளை தீர்ப்பது போன்ற அடிப்படையில் appraisal முறை மாறியுள்ளது.

நிதித்துறை மட்டும் வேகமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டுவந்தால் போதாது, இந்திய நீதித்துறையும் வேகமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், நாட்டின் வர்த்தகம் பெருகாது வழக்குகள்தான் பெருகும்...!

Tuesday 6 February 2018

ஒரே தேசம், ஒரே தேர்தல் – பகுதி ஒன்று


நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிற்கும் ஒன்றாக தேர்தல் நடத்தவேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இது குறித்து நிதி ஆயோக்-ஐ சேர்ந்த பிபேக் திப்ராயின் கட்டுரை (பேப்பர்) ஒன்றை படிக்க நேர்ந்தது. கட்டுரை ஒரு தலை பட்சமாக இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த கட்டுரையில் படித்ததை மட்டுமே வைத்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன். தவறுகளை திருத்தினால் சந்தோஷப்படுவேன்… ஆனால், ஆதாரங்கள், லிங்குகள் அவசியம்.

முதலில் எதற்காக இந்த ஒன்றாக தேர்தல் என்கிற பேச்சு வருகிறது என்று பார்ப்போம். முதல் காரணம், ஒரேடியாக தேர்தல் வைத்தால் செலவு குறைச்சல். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அரசுக்கு 3400 கோடிகளுக்கு மேல் செலவு வைத்தது. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வைத்தால் பாதுகாப்பு செலவு, கண்காணிப்பு செலவு ஆகியவற்றை குறைத்து விடலாம். ஆனால் விஷயம் என்னவென்றால், நாடு முழுக்க தேர்தல்கள் நடத்த ஐந்தாண்டுகளுக்கு 8000 கோடி ரூபாய்தான் செலவாகிறதாக சொல்கிறார்கள்…. அதாவது, சராசரியாக ஒரு வருஷத்திற்கு 1600 கோடி ரூபாய். இந்திய பட்ஜெட் படி ஒரு ஆண்டு மொத்த செலவு 25 லட்சம் கோடிகள். இதில் 1600 கோடி ரூபாய் ஒரு விஷயமேயில்லை. பிபேக் massive expenditure என்று சொல்கிறார்... பணத்தை சேமிக்கலாம் என்றால் தப்பில்லை, massive expenditure என்பது பில்டப்பு.
அடுத்தது மாடல் கோட்… தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசாங்கம் புது திட்டங்களை அறிவிக்க கூடாது, முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது. இதனால், அரசாங்கமே முடங்கி போவதாக குற்றச்சாட்டு. இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள் கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால், 5 வருடங்களில் மொத்தம் 4 மாதங்கள்… 6% நாட்கள் அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை என்றே அர்த்தம். ஆனால், நம் நாட்டின் நிலைமையை வைத்து பார்த்தால் ஏதோ 56 மாதங்கள் வெட்டி முறித்து விட்டு, அந்த 4 மாதங்களால்தான் நாடு முன்னேறமுடியவில்லை என்று சொல்வதெல்லாம் அபத்தம். பிபேக் எதிர்கேள்விகளுக்கு எதிர்பார்க்கும் தரவுகளை, இந்த மாடல் கோட் காலத்திற்கு தரவில்லை…. அதாவது, எத்தனை முக்கிய திட்டங்கள் மாடல் கோட் காலத்தில் நின்று போய், என்ன நஷ்டம் வந்தது என்றெல்லாம் சொல்லவில்லை. வாதத்தில் உண்மை இருந்தாலும், தரவுகள் இல்லை.
அடுத்தது, தேர்தல் ஜாதி, மத, இன உணர்வுகளை கிளப்புகிறது. எப்போது பார்த்தாலும் தேர்தல் நடந்து கொண்டிருந்தால், இதற்கு ஒரு விமோசனமே கிடையாது என்று முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி சொல்கிறார். ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.... இந்த இன்டர்நெட் யுகத்தில், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் செய்யப்படும் (அல்லது செய்வதாக சொல்லப்படும்) மதம் சார்ந்த பிரச்சாரங்கள் இந்தியா முழுக்க செய்தியாகிறது. அதே சமயத்தில் நாடு முழுக்க ஒரே நேரத்தில் மதத்துவேஷம் தோன்றினால், மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்னும் ரிஸ்கும் இருக்கிறது.... காரணம் தேர்தலும், மதவாதமும் ஒன்றாக பிணைந்துள்ளது.
1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறைதான் இருந்தது என்கிறார் பிபேக். இது அபத்தமான வாதம்… அப்போது காங்கிரஸிற்கு, நேருவிற்கு இருந்த செல்வாக்கு வேறு. நேரு மறைவிற்கு பின்னரே இந்திய அரசியல் களம் சூடாகி நாசமாகி போனது. இன்றைய சூழ்நிலையில், 30 வருடங்களுக்கு பிறகு 2014ல்தான் ஒரு கட்சி ஆட்சி வந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பது ஒரு தவிர்க்க முடியாத உண்மை. நமது அரசியல் சூழல் மாறிவிட்டது. 50 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்தகால நடைமுறை என்பது லாஜிக்கில்லாத வாதம்.
இப்போது இந்த ஐடியாவிற்கு எதிர்ப்புகளை பார்க்கலாம் …. அதற்கு முன்னர் – இந்த ஐடியாவை எந்த கட்சியெல்லாம் எதிர்க்கிறது என்று முழு லிஸ்ட் பிபேக் தரவில்லை. இது தவறு. பிபேக்கின் stature – ல் இருக்கும் ஒருவர் ஒரு அபெண்டிக்ஸில் இதையெல்லாம் போட வேண்டும். நான்கு கட்சிகள் பேர் போட்டு Etc போடுவது கூடாது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை முழுமையாக பதிவு செய்யவேண்டும். சரி, இனி விவாதத்திற்கு போவோம்.
இப்போது எதிர்ப்புக்கான முதல் காரணம், நடைமுறை சாத்தியம். ஒரே நேரத்தில் நாடு முழுக்க இரட்டை தேர்தல்கள் நடத்தினால் பாதுகாப்பை, கண்காணிப்பை உறுதி செய்வது எப்படி? கிட்டத்தட்ட 10 லட்சம் BSF ஆட்கள் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு தேவைப்படுகிறார்கள். ஒரே தேர்தலாக நடத்தினால் இந்த பாதுகாப்பு பிரச்சனை சுலபமாகிவிடும். ரொம்ப காலத்திற்கு BSF படைகள் தேவைப்படும் என்று எதிர்ப்பாளர்கள் சொல்வது சரியல்ல… பாராளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு காலம் ஆகுமோ அதே அளவுதான் ஆகும்... May be கொஞ்சம் கூடுதலாக ஆகலாம்.
ஆனால், கண்காணிப்பு? ஒரு RK நகரை கண்காணிக்கவே விழி பிதுங்குகிறது... இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையம் எப்படி கண்காணிக்கும்? நேர்மையில்லாத தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி என்ன புண்ணியம்? ஒரு அதிகாரி முறைகேடு செய்தார் என்று இடமாற்றம் செய்யலாம். எல்லா இடத்திலும் தேர்தல் நடக்கும் போது எங்கே இடமாற்றம் செய்வது? அத்தனை மனுக்களை பரிசீலனை செய்யவேண்டும்... வேட்பு மனு செல்லாது போன்ற வம்பு வழக்குகளை சமாளிக்க வேண்டும்.... இதற்கு நடுவில் சட்டம் ஒழுங்கையும் பார்த்து கொள்ளவேண்டும்.
ஒரே நேரத்தில் நாடு முழுக்க தேர்தல் நடத்தினால் எத்தனை வோட்டு மெஷின்கள் தேவைப்படும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதெல்லாம் one time investment என்று நினைக்கிறேன். ஆனால், மெஷின்களை தேர்தலுக்கு முன்பு டெஸ்ட் செய்வது, கவுண்டிங் வரை ஒழுங்காக பாதுகாப்பது இவையெல்லாம் சிரமம்தான்... நம் தேர்தல் ஆணையம் அனுபவமிக்கது... சமாளித்து விடலாம்.
இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடத்துவது? இந்தியா போன்ற பரந்து விரிந்த, பல கலாச்சார, காலநிலைகளை கொண்ட நாட்டில் இது கஷ்டம்தான். ஆனால், நாம் ஏற்கனவே அப்படித்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்துகிறோம். இதெல்லாம் பெரிய பாயிண்டில்லை. ஆக, தேர்தல் கண்காணிப்பை தவிர மிச்ச விஷயங்கள் சாத்தியமாகத்தான் படுகிறது.
இரண்டாவது விஷயம் – முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி இரண்டு பாயிண்டுகள் சொல்கிறார். தேர்தல் காலத்தில் பொருளாதாரம் மேம்படுகிறது... வேலைவாய்ப்புகள் பெருகுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் இப்படி நடவாது. ஆனால், பிபேக் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் சார்ந்த பொருளாதாரம் கருப்பு பொருளாதாரம்... வேலைவாய்ப்புகள் நிரந்தரமல்ல என்கிறார். கருப்பு பொருளாதாரம் பாயிண்ட் ஓகே... உபி தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் செய்த செலவு 5500 கோடியாம்.... அத்தனையும் கருப்பு பணம்தான். அதேசமயம், இந்த காலத்தில் எந்த வேலைவாய்ப்பும் நிரந்தரமல்ல என்பது தான் உண்மை. நிரந்தரமின்மையை பார்த்தால் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையும் நிறுத்த வேண்டுமல்லவா? கருப்பு பொருளாதாரத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் distribution of wealth நடக்கிறது. இந்தியா போல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக இருக்கும் நாட்டில் இது போன்ற wealth distribution சந்தர்ப்பங்களும் (துரதிர்ஷ்டவசமாக) முக்கியம்.
அடுத்தது, ஐந்தாண்டுகளுக்கு நடுவில் தேர்தல் வந்தால், அரசியல்வாதிகள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் கட்டாயம் கூடுதலாக வருகிறது… பொறுப்பு கூடுகிறது என்கிறார் குரேஷி. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் பொறுப்பே போதும் என்கிறார் பிபேக். குரேஷி சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. மக்களை அவ்வப்போது நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்க வேண்டுமென்பதால் அரசாங்கத்திற்கு கொஞ்சமேனும் பயம் இருக்கிறது.
இனிதான் மிக முக்கியமான பாயிண்ட் வருகிறது… ஒரு ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறது என்றால், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 86% பேர் ஒரே கட்சிக்குதான் வோட்டு போடுகிறார்கள். (99ல் 68%, 2004ல் 77%, 2014ல் 84%). அதாவது, நம் வாக்காளர்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டிற்கும் இடையே பிரச்சனைகளை, தீர்வுகளை ஆராயும் அறிவு மழுங்கி கொண்டு வருகிறது. லோக்கல் பிரச்சனையை தீர்க்க சட்டமன்ற தேர்தல், அதற்கான தேர்தல் அறிக்கை பார்க்கவேண்டும்.... நாடு அளவில் உள்ள விஷயங்களுக்கு அதற்கான தேர்தல் அறிக்கை, செயல்பாடுகளை பார்க்கவேண்டும். நம்ம ஆட்களுக்கு அவ்வளவு விவரம் போதவில்லை.
இப்போது, இரண்டு தேர்தலுக்கும் இடையில் 6 மாத காலம் இடைவெளி விட்டால் 61% பேர் ஒரே கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதாவது, ஆறு மாத காலத்தில் அனுபவப்பட்டு, நிதானப்பட்டு முடிவெடுக்கும் திறன் அதிகமாகிறது எனலாம். இதே விஷயத்தை வேறொரு ஆய்வும், வேறு விதமாக தெரிவிக்கிறது. விஷயம் இதுதான் – ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் ஒரே கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்.
இதை பிபேக் மறுக்கமுடியவில்லை…. ஆனால், ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். Correlation is not causation, voter’s behaviour is complex என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார். இது பிபேக்கின் வாதத்தில் மிக பெரிய ஓட்டை.
நம் நாட்டு மக்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்படுபவர்கள்… ஒவ்வொரு தேர்தலுக்கும் அனுதாப அலையோ, எதிர்ப்பு அலையோ ஏதோ ஒரு அலை வருகிறது. அந்த நேரத்தில் ஒரே கட்சி இந்தியா முழுவதையும் (சட்டமன்றங்கள், நாடாளுமன்றம்) பிடித்து விட பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
அடுத்து, வாக்காளரின் இந்த முதிர்ச்சியின்மை காரணமாக மாநில கட்சிகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது… மக்கள் தேசிய கட்சிக்கு மட்டுமே வோட்டு போடுவார்கள். அல்லது கிறுக்குத்தனங்களும் நடக்கலாம்… உதாரணமாக, போன 2014 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றே சொல்லாத அதிமுக, இன்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
அடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து அரசியலமைப்பு சட்டமும், மற்ற சட்டங்களும் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கவேண்டும் என்பது குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தேர்தல் நடத்தவேண்டும் அவ்வளவுதான்... அதாவது, வெவ்வேறு நேரத்தில் தேர்தல் வைப்பது தவறல்ல. நாம் இப்போது தவறேதும் செய்யவில்லை... சாதகமாக இருந்தால், தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்யத்தான் பார்க்கிறோம். இந்த புரிதல் அவசியம்.

இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது… ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் வருகிறதே... முதல்முறை அனைத்தையும் ஒரு syncல் கொண்டு வருவது எப்படி? ஒரு நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் காலத்தை ஒரு ஆண்டு வரை நீட்டிக்கலாம். அல்லது, இடையிலே கலைக்கவும் செய்யலாம். இது இரண்டும் விரும்பத்தகாதது அல்ல என்றாலும் ஒரே ஒரு முறை மட்டும் செய்துவிட்டு, அனைத்து தேர்தல்களையும் Sync செய்துவிடலாம். (கொஞ்சம் கொஞ்சமாகவும் Sync செய்யலாம்)

சரி, ஒரு முறை அனைத்து தேர்தல்களையும் ஒருங்கிணைத்தாலும், நடுவில் ஏதாவது ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது? இனி மேல்தான் அபத்தங்கள் ஆரம்பம். ஆட்சி கவிழாமல் இருப்பதே நல்லது.... அப்போதுதான் இந்த ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ செல்லுபடியாகும். அதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், கூடவே யாருக்கு ஆதரவு என்னும் நம்பிக்கை தீர்மானமும் கொண்டு வரவேண்டும். அதாவது, இந்த பிரதமர், முதல்வர் ஆட்சி வேண்டாம் என்றால், எந்த பிரதமர், முதல்வர் ஆட்சி வேண்டுமென்றும் சொல்லவேண்டும். இதன் மூலமாக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தடுக்கப்படும். ஐந்தாண்டுகள் நிலையான (அசைக்க முடியாத) ஆட்சி அமையும்.

ஆட்சியை கவிழ்த்த பின் கட்சிகள் ஆதரவை மாற்றி கொள்வதும் உண்டு. They change their camps. ஒரு வகையில் இது அசிங்கமாக இருந்தாலும், குதிரைபேரத்தை ஊக்குவித்தாலும், கட்டுப்பாடில்லாத நிலையான ஆட்சியை தடுப்பதால், இதுவும் நல்லதென்றே தோன்றுகிறது.

அடுத்து, ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்து விட்டால்? இன்னும் எவ்வளவு பதவி காலம் மீதமிருக்கிறதோ, அதை வைத்து முடிவு எடுக்கப்படும். மீதமிருக்கும் பதவிகாலத்திற்கு மறு தேர்தல் வைப்பதிலிருந்து, ஜனாதிபதியே (அல்லது கவர்னரே) ஆட்சி செய்வது வரை பாஸிபல் சொல்யூஷன்கள் தருகிறார் பிபேக். (இது குறித்து ப.சிதம்பரம் சொல்வதை நம்பாதீர்கள். எல்லா நேரத்திலும் ஜனாதிபதி ஆட்சி என்பது கிடையாது)

ஆனால், இப்போது பிரதமர் தலைமையிலே ஒரு சட்டம் நிறைவேறினால், அதை ஜனாதிபதி அப்ரூவ் செய்கிறார். ஜனாதிபதி, அதே அமைச்சரவையை வைத்து கொண்டு சட்டம் நிறைவேற்றினால் யார் அப்ரூவ் செய்வது? ஏற்கனவே மத்திய அரசு சொல்லும் விஷயங்களுக்கு ஜனாதிபதி தலை ஆட்டுகிறார் என்னும் குற்றச்சாட்டு உண்டு. பிரணாப் ஆம் ஆத்மியின் Office of Profit சட்டத்தை நிராகரித்தார். ஒரே கட்சி எல்லா இடத்திலும் இருந்தால் இது போல நடப்பது சந்தேகமே. நம் துணை ஜனாதிபதியை எடுத்து கொள்ளுங்கள்.... அவர் இன்னும் பாஜக உறுப்பினர் போலவே நடந்து கொள்கிறார். அவர் நாளை ஜனாதிபதியானால் எப்படி செயல்படுவாரோ?

ஜனாதிபதி ஆட்சியில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி நடக்கும்? நம் நாட்டு அரசியலமைப்பு ஜனாதிபதியை ம்யூட்டாகவும், பிரதமரை ஆக்டிவாகவும் வைத்திருக்கும். ஜனாதிபதியே ஆட்சி செய்தால், அது அரசியலமைப்புக்கு எதிராக அமையும்.

அடுத்து, ஜனாதிபதி சட்டமன்ற உறுப்பினர்களின் வோட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்க படுகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், ஒரே கட்சி ஜெயிக்கவே பெரிய வாய்ப்பு என்று ஏற்கனவே பார்த்தோம். ஒரே கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதியும் அதே கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார். இப்போது, அதே கட்சி அமைச்சரவையை வைத்து அதே கட்சியை சேர்ந்த ஜனாதிபதி ஆட்சி நடத்தினால்… இதற்கு எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? So, there will not be any real democracy post elections.

இப்போதே பல சட்டங்களை, money bill என்று சொல்லி ராஜ்யசபாவை மீறி கொண்டுவருகிறார்கள்...ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே கட்சி நாடு முழுவதும் ஆட்சி என்று வந்தால், எதிர்ப்பு என்பதே இல்லாமல் அனைத்து சட்டங்களும் நிறைவேறிவிடும். Genunine தவறுகளை கூட கண்டிக்கவோ, தடுக்கவோ ஆள் இல்லாமல் போய்விடும்.

இந்த திட்டத்திற்கு பல அரசு அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக பிபேக் சொல்கிறார். அரசு நிறுவனங்கள் (institutions) இப்போது சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. இந்த கருத்துகளையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள முடியாது.

பிபேக் இதை மிகவும் முன்னுரிமை தரவேண்டிய சீர்திருத்தம் என்கிறார். அப்படி எந்த அவசரமும் எனக்கு தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தையே பட்டி டிங்கரிங் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தம் இது. பொறுமையாக அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து, அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து பேசி மாற்ற வேண்டிய விஷயம். குறுகிய கால நோக்கங்களுக்காக இதை செய்ய கூடாது என்பதே என் கருத்து.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை திரும்ப வரவழைக்க எந்த உரிமையும் இல்லாத நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானங்களுக்கு செக் வைப்பது போன்ற திருத்தங்கள், ஜனாதிபதியே ஆட்சி செய்வார் போன்ற திருத்தங்கள் மட்டும் ‘சீர்’ திருத்தங்களாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

Monday 5 February 2018

குஜராத் PDS - எத்தனுக்கு எத்தர்கள்


குஜராத் ரேஷன் கடையில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் கொடுத்த மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் போட்டு டேட்டாவை திருடியிருக்கிறார்கள்.
ஆதார் வருவதற்கு முன்பிருந்தே குஜராத்தில் பயோமெட்ரிக் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் வினியோகம் நடந்து வந்தது. ரேஷன் கடையிலே போய் கைநாட்டு வைத்தால் ரசீதும் பொருளும் பெற்று கொள்ளலாம்.
இந்த நடைமுறை சரியாக இல்லை என்று ரேஷன் கடை டீலர்கள் போராடினார்கள். அப்போது குஜராத்தில் ரேஷன் கடை டீலர்கள் தலைவர் பிரஹ்லாத் மோடி.... ஆம், நரேந்திர மோடியின் சகோதரர்தான். டெக்னாலஜி வந்த பிறகு பொருட்களை திருட முடியாததால், ரேஷன் கடைக்காரர்கள் போராடுவதாக அரசாங்கம் சொன்னது. போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை... எப்படியோ, திட்டம் தொடர்ந்தது.
போலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும் இன்னொரு பக்கம் ரேஷன் பொருட்கள் திருட்டு குறைந்ததாக தெரியவில்லை... இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன – ஒன்று வாடிக்கையாளர்களின் கைரேகைகள் சரியாக பொருந்தவில்லை. அதனால், மானுவல் ரிஜிஸ்டர் முறையும் கொண்டு வரப்பட்டது. இது ரேஷன் பொருட்களை திருடுவதற்கு நல்ல வசதி செய்து கொடுத்தது. இரண்டாவது, ரேஷன் கடைகளில் ரசீது கொடுப்பதில்லை. அரசாங்கம் பிரிண்டர் வாங்க காசு கொடுக்கவில்லையோ என்னவோ, டீலர்கள் கைக்காசு போட்டு பிரிண்டர் வாங்கினார்கள். ரசீது குட்டியாக வராது.... A4 தாளில்தான் வரும். ரசீது வேண்டுமென்றால் கூடுதலாக 5 ரூபாய் தரவேண்டும். அதனால், மக்கள் ரசீதும் வாங்கவில்லை. இதுவும் திருட்டு நடப்பதற்கு ஏதுவானது.
போன வருடம் ஆதாரும் வந்தது.... ரேஷன் பொருள் வாங்கும் போது ஆதார் நம்பரும் தந்து, கைரேகையும் வைக்க வேண்டும் என்று நடைமுறை மாற்றப்பட்டது. இப்போது மாற்று மென்பொருள் மூலமாக பயோமெட்ரிக் தரவுகள் திருடப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

இதை பற்றி நெட்டில் தேடியபோது, ஜனவரி மாதமே குஜராத்தி பத்திரிக்கைகள் இதை பற்றி செய்தி வெளியிட்டுள்ளன என்பது தெரியவந்தது. 1.25 கோடி மக்களின் பயோமெட்ரிக் டேட்டா திருடு போயிருக்கிறது. 25000 ரூபாய்க்கு இதற்கான மென்பொருள் கிடைக்கிறது... பெருவாரியான கடைகள் இந்த திருட்டு மென்பொருளை வாங்கியுள்ளன.
என்ன டெக்னாலஜி கொண்டுவந்தாலும் மாற்று டெக்னாலஜி வரத்தான் செய்யும்.... எத்தனை இடங்களில் ஆதார் expose ஆகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் vulnerability அதிகமாகும். இந்த சிம்பிளான, straight forward விஷயம் ஏன் புரியவே மாட்டேன் என்கிறது?
மோசடிகளை தடுக்கவேண்டும், கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லி, ஆதார் கொண்டு சொத்து பதிவு நடைமுறைகள் வந்து கொண்டிருகின்றன. தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் இந்த விஷயத்தில் முண்ணனியில் இருப்பதாக நினைக்கிறேன். இப்படி கைரேகை தகவல்கள் திருடுபோனால், போலி பத்திர மோசடி போல, போலி பயோமெட்ரிக் மோசடிகளும் வரும்.
இந்த அரசாங்கம் execution-ல் ரொம்பவே சொதப்புகிறது. அது Demo ஆகட்டும், GST ஆகட்டும், E-Way bill ஆகட்டும் எல்லாமே சொதப்பல்... அவசர அவசரமாக ஆதாரை கொண்டுவருவதும் சொதப்பலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. தேவை எல்லாம் கொஞ்சம் நிதானம்.... காரணம் பயோமெட்ரிக் விஷயத்தில் நடக்கும் எந்த ஒரு தவறும் almost irreversible....