Wednesday 31 January 2018

Super Foods


பருமனாக இருந்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, 18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து ஃபிட்டானார். அதற்கு காரணம், ருஜுதா திவேகர் என்னும் நியூட்ரிஷனிஸ்ட்.
கரீனா கபூரின் Size Zero - வுக்கும் ருஜுதாதான் காரணகர்த்தா...கரிஷ்மா கபூர், அனுபம் கெர், ரிச்சா சத், சயீஃப் அலி கான், அனில் அம்பானி என்று பல படா பிரபலங்களின் ஃபிட்னஸ் ருஜுதாவின் கைவண்ணம்தான்.
இவரின் ஒரு அப்பாயிண்மென்டிற்கு பல லட்சங்களில் ஃபீஸ் வாங்குகிறார்... இருந்தாலும் பிரபலங்கள் தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ருஜுதாவைதான் முதல் சாய்ஸாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
ருஜுதா நம்ம ஊர் பாரம்பரிய உணவுகளையே டயட்டாக பரிந்துரைக்கிறார். டயட் என்பது ஒரு லைஃப் ஸ்டைல். உங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்படிக்க முடியாத உணவு பழக்கம், உங்கள் டயட் ப்ளானாக மாற லாயக்கற்றது என்கிறார்.
அவரது புத்தகங்களில் ஒன்று – இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ்... போன வாரம்தான் படித்தேன். நாம் எங்கு வாழ்கிறோமோ அந்த பகுதியிலேயே விளையும் உணவுகள்தான் நமக்கு ஏற்றது என்கிறார் இவர். இறக்குமதி செய்யும் உணவுகள் நமக்கு ஏற்றதல்ல.
மருத்துவர்களும் கார்ப்பரேட்களும் பல பொய்யான தகவல்களால் நம்மை குழப்பி வைத்திருக்கின்றனர். அரிசி ஒரு நல்ல தானியம். வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. முந்திரியினால் கொலஸ்ட்ரால் ஒன்றும் ஆகாது. நெய் சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்கும். ஆந்திரா கோங்குரா (புளிச்சகீரை), தேங்காய், பலாப்பழம் அனைத்தும் உடலுக்கு நல்லதே - இதெல்லாம் ருஜுதாவின் பரிந்துரைகள். சும்மா போகிற போக்கில் அடித்து விடாமல், ஒவ்வொரு உணவும் என்னென்ன ஊட்டச்சத்துகளை தருகிறது.... நம் கலாசாரத்தோடு எப்படி பின்னி பிணைந்தது என்றும் விளக்குகிறார்.
உதாரணமாக, நெய் சேர்த்து கொண்டு சாப்பிடுவதன் மூலம், உணவின் கிளைசமிக் இண்டெக்ஸ் குறைந்து போகிறது. அதனால், நெய் சேருங்கள் என்கிறார்.
நீங்களும் அவரது புத்தகங்களை படித்து பாருங்கள்.... கண்டிப்பாக உணவு குறித்த உங்கள் சிந்தனை மாறும். ருஜுதாவின் பேஸ்புக் பக்கம் இதோ - https://www.facebook.com/rujuta.diwekar/ அவ்வப்போது டிப்ஸ் தருகிறார். விரும்புபவர்கள் தொடரலாம்.

Sunday 21 January 2018

பேருந்து கட்டண உயர்வு


பேருந்து கட்டண உயர்வையடுத்து இரண்டு விதமான extreme சிந்தனைகளை பேஸ்புக்கில் காண்கிறேன்.... ஒரு பக்கம், போக்குவரத்து துறையை தனியாருக்கே தந்துவிட வேண்டும் என்பவர்கள். தொடர் நஷ்டத்தினால் மக்கள் வரிப்பணம் ஊழலில் வீணாகிறது என்பதும், அரசாங்கம் ஏன் போக்குவரத்து தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதும் இந்த கட்சியின் வாதம். 
அரசாங்கமே தனியார் பேருந்துகளையும் வாங்கிவிட வேண்டும், அல்லது தொழிலாளர்களிடமே நிர்வாகம் வழங்கப்படவேண்டும் என்பது இன்னொரு கட்சி. அதாவது, தனியாரிடம் போகும் லாபம் அரசாங்கத்திடம் வந்துவிடும், தொழிலாளர்கள் தம் நிறுவனம் என்ற உணர்வில் உழைப்பார்கள் என்பது இந்த கட்சியின் சிந்தனை.

முழுமையான கம்யூனிஸமோ, முழுமையான கேபிடலிஸமோ நம்முடைய தீர்வாகாது.... போக்குவரத்து துறையை முழுவதும் தனியாருக்கு தந்து விட்டால், லாப நோக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கும். எல்லா ரூட்டுகளிலும் பேருந்துகள் ஓடுமா என்பதும் சந்தேகம். லாபம் இருக்கும் ரூட்டுகளில் மட்டுமே சேவை நன்றாக இருக்கும். (உதா. அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கார்டெல் அமைத்து கொண்டு அதிக விலை வைத்து கொண்டிருந்தன. ஜியோ அந்த கார்டெலில் சேராத காரணத்தை முன்னிட்டே நமக்கு இப்போது உண்மையான போட்டியின் நன்மைகள் விளைகிறது. இல்லையென்றால் தொலை தொடர்பு துறை இன்னமும் பழைய மாதிரிதான் இருக்கும்)
முழுவதும் அரசு மயமாகிவிட்டால் அதுவும் நன்மை தராது. இப்போது இருக்கும் ஊழல் இன்னும் பெருகத்தான் வாய்ப்பு இருக்கும். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்கப்பட்டால் எந்த அளவு திறமையுடன் நடக்கும்? Accountability எப்படி வரையறுப்பது? தனியாரின் திறமை, பணம் ஆகியவற்றை நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்துவது? இதுவும் சரியாக படவில்லை.
அரசுத்துறை தன்னை மேம்படுத்தி கொண்டு தனியாருடன் போட்டியிட்டால் மட்டுமே நன்மை. (தொலைதொடர்பு துறையில் BSNL அதை செய்யவே இல்லை. அரசியல் காரணங்கள் சொல்கிறார்கள்)
ஆனால், அரசாங்கம் போக்குவரத்து துறை நடத்தலாமா? அது அவசியமா? கண்டிப்பாக அவசியம்... லாபம் வராத ரூட்டுகளில் அரசாங்கம் மட்டும்தான் பேருந்து ஓட்டமுடியும்... தனியார் முதலாளிகள் அதை செய்ய மாட்டார்கள். லாபம் வரும் ரூட்டுகளிலிருந்து பணம் சம்பாதித்து அதை நட்டம் வரும் ரூட்டுகளில் பேருந்து ஓட்ட பயன்படுத்த வேண்டும்.
இதுதான் சரியான லாபநோக்கமில்லாத சேவை... லாபம் தரும் ரூட்டுகளிலும் நிர்வாக திறமையின்மை, ஊழல் காரணமாக நஷ்டம் சம்பாதிக்க கூடாது.... அரசுத்துறை லாப நோக்கமில்லாது இயங்கலாம்... அதற்காக நஷ்டப்படவேண்டும் என்பது அர்த்தமல்ல...!
கேபிடலிஸத்தில் சொல்லப்படும் போட்டியின் மூலமாக கிடைக்கும் நன்மைகளும், சேவை மேம்பாடும் கிடைக்க வேண்டும்.... தனியார் முதலாளிகள் பேருந்து விடாத ரூட்டுகளிலும் போக்குவரத்து சேவை நடக்க வேண்டும். நம் நாட்டின் நிலைமைக்கு, இதுதான் நாம் எதிர்பார்க்க வேண்டிய தீர்வு. 100% கம்யூனிசமோ, கேபிடலிஸமோ அல்ல...! இஸங்களில் மாட்டிக்கொள்ளாது தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்.

Friday 19 January 2018

Cape Town - Zero Day


கேப்டவுன் – தென்னாபிரிக்காவின் முக்கியமான நகரம். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் கேப்டவுனுக்கு ஸீரோ டே வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதென்ன ஸீரோ டே என்று கேட்கிறீர்களா? குழாய்களில் சொட்டு தண்ணீர் கூட வராமல் போகும் நாள்தான் ஸீரோ டே.
ஆமாம், டூரிஸத்திற்கு பேர் போன இந்த நகரம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் மாட்டி கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக மழை சரியில்லை. தீவாட்டர்ஸ்க்ளூஃப் – கேப்டவுன் பகுதிக்கு தண்ணீர் தரும் பெரிய அணையானது வரண்டு போய் காணப்படுகிறது (படத்தை பாருங்கள்). மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தாலும், நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
Theewaterskloof Dam

பிரச்சனைக்கு காரணம் மூன்று – முதல் காரணம், க்ளோபல் வார்மிங். பருவ மழை தள்ளி போகிறது, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் தேவை இல்லாத இடங்களில் மழை பெய்கிறது, குறைவாக மழை பெய்யும் ஆண்டுகள் குறைந்த இடைவெளிகளில் வருகிறது (interval between below average rainfall years is decreasing). இதெல்லாவற்றிற்கும் க்ளோபல் வார்மிங் காரணம் என்கிறார்கள் சுற்றுசூழல் ஆய்வாளர்கள். எல் நினோவையும் சிலர் காரணமாக கூறுகின்றனர்.
இரண்டாவது காரணம், மக்கள் தொகை. கடந்த 2 பத்தாண்டுகளில் மக்கள்தொகை 79% (2018ல் 43 லட்சம் இருக்கும் என்று கணக்கு) அதிகமாகிவிட்டது. ஆனால், தண்ணீர் சேமிப்பு 15% தான் அதிகமானது.
மூன்றாவது, அரசியல். கேப்டவுன் மாகாணம் மட்டும் எதிர்கட்சியால் ஆளப்படுகிறது. மத்திய அரசு விவசாயத்திற்கு நிறைய தண்ணீரை திருப்பி விட்டுவிட்டதாக கூறுகின்றனர்.
சரி பிரச்சனையை எப்படி சமாளிப்பது? தண்ணீர் சிக்கனம், கடல் நீரை குடிநீராக்குவது, bore போட்டு தண்ணீர் எடுப்பது. ஏற்கனவே மக்கள் அதிகளவில் சிக்கனமாகத்தான் இருக்கிறார்கள். நீச்சல் குளங்களை மூடிவிட்டனர். சுற்றுலா பயணிகளையும் சிக்கனமாக இருக்க சொல்லி வலியுறுத்துகிறார்கள். முடிந்த வரை குளிக்க வேண்டாம். குளித்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஷவர் உபயோகிக்க வேண்டாம். குழாயை திறந்து வைத்து கொண்டு பல் தேய்க்காதீர்கள். டாய்லெட் ஃப்ளஷ் பார்த்து உபயோகியுங்கள்.... இன்னும் பல அறிவுரைகள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டமெல்லாம் ரொம்ப மெதுவாக நடக்கிறது. அரசாங்க திட்டங்களில் ஏற்படும் தாமதம்தான் காரணம். அரசு நிர்வாகம் வேகமாகயில்லை.
தண்ணீர் மேலாண்மை செலவு அதிகரித்திருப்பதால், கேப் டவுன் மேயர் வறட்சி வரி விதிக்க திட்டம் போட்டுள்ளார். அதாவது, சொத்து மதிப்பிற்கு ஏற்றார்போல வரி..! இதற்கும் எதிர்ப்பு வந்துள்ளது. முதலில் இப்படியெல்லாம் வரி போட அரசியலமைப்பு சட்டத்திலேயே இடமில்லையாம். அதற்கு பதிலாக தண்ணீருக்கு அதிக கட்டணம் விதிக்க சொல்கிறார்கள். ஆனால், அப்படி தண்ணீருக்கு அதிக கட்டணம் விதித்தால் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் அதிக வரி செலுத்த வேண்டி வரும். சிக்கல்தான்....
கேப்டவுனின் இந்த பிரச்சனை தற்காலிகமானதல்ல என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வறட்சி இன்னும் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள். இயற்கை வளங்களுக்கு ஏற்ப ஒரு நகரத்தில் இத்தனை பேர்தான் வசிக்க முடியும் என்று சொல்வது ஒரு நல்ல தீர்வாக இருக்குமா?

Wednesday 10 January 2018

Fowl Language Comics


குழந்தை வளர்ப்பது எவ்வளவு சிரமமான காரியம்? அதை வேடிக்கையாக கார்ட்டூன் வடிவில் சொல்வதே Fowl Language Comics...
ஒரு அப்பா வாத்து... அதன் குழந்தை வாத்துக்களை வளர்க்க எப்படி சிரமப்படுகிறது என்பதுதான் Fowl language கார்ட்டூனின் மையக்கருத்து. நம்ம பசங்களும் இப்படித்தானே பண்ணுது (அல்லது) இதுக்கு நம்ம பசங்க எவ்வளவோ மேல் என்று நம்மை எண்ண தூண்டும் வகையில், குழுந்தை வாத்துகள் அப்பாவை படுத்தியெடுத்து விடும்.
இந்த கார்டூன்களை வரைபவர் பிரையன் கார்டன் என்பவர். முன்பு Hallmark என்கிற கிரீட்டிங் கார்டு கம்பெனியில் கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார். அவர் உருவாக்கிய Chuck & Beans எனப்படும் நாய் மற்றும் முயல் கேரக்டர்கள் Hallmark கிரீட்டிங் கார்டுகளில் பிரபலம். இந்த இரண்டு பாத்திரங்களுமே சிங்கிள், 20 வயதிற்குட்பட்டவை... பாப் இசையில், டேட்டிங் கலாச்சாரத்தில் ஆர்வம்.
கார்டனுக்கு வயதானது, திருமணமானது, குழந்தைகளும் பிறந்தனர். அவர் வயதுக்கு, அவரால் மீண்டும் மீண்டும் சிங்கிள்களின் வாழ்க்கையை பற்றியோ, பாப் கலாசாரத்தையோ வரையமுடியவில்லை. அவரால் தன் படைப்பில் பொருந்த முடியவில்லை.
அதே சமயம், அவர் வேலை பார்த்த கிரீட்டிங் கார்டு கம்பெனி கொஞ்சம் பணக்கஷ்டத்தில் மாட்டிகொண்டது. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்னும் குழப்பமும் நிலவியது. என்ன செய்யலாம் என்று கார்டன் யோசித்து கொண்டிருந்த போது, புதிதான கார்டூன் கேரக்டர்களை உருவாக்கி ஒரு புதிய கார்டூன் சீரியஸ் ஆரம்பிக்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
இதுவரை தான் வாத்துக்களை வரைந்ததில்லையே என்று நினைத்த கார்டன் தன் புது சீரியஸ்ஸிற்கு வாத்துகளை கேரக்டர்களாக உருவாக்கினார். தன் குழந்தைகளை வளர்க்க தான் படும் சிரமங்களையே கார்ட்டூனாக போட தொடங்கினார். அதனால்தான், அவர் கார்ட்டூனில் அம்மா வாத்து எப்போதாவதுதான் வரும். அப்பா வாத்துதான் குழந்தைகளிடம் மாட்டி கொண்டு முழிக்கும்.
இப்படி ஆரம்பித்ததுதான் Fowl Language Comics. இரண்டு வருடங்களில் கார்ட்டூன் பிரபலமான நிலையில் கார்டனுக்கு Hallmark-ல் வேலை போனது. ஆனால், சில மணி நேரங்களிலேயே Huffington Post –லிருந்து தொடர்பு கொண்டனர். அவர் கார்ட்டூன்களை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட ஆர்வம் தெரிவித்தனர். கார்டனுக்கு இருந்த பொருளாதார கவலை தீர்ந்தது.
கார்டனிடமிருந்து நாம் கற்று கொள்ள விஷயம் இருக்கிறது. கார்டன் சிறு வயதிலிருந்தே கார்டூனிஸ்ட் ஆக ஆசைப்பட்டவர். அந்த ஆசையை, ஆர்வத்தை விடாமல் தன் திறமையை வளர்த்து கொண்டார். வயதாகும் போது ஏற்படும் மாற்றங்களை ஏற்று கொண்டார்... தன் கார்டூன்களை மாற்றி கொண்டார். வேலை போய்விடும் என்ற நெருக்கடியில் அவர் ஆரம்பித்த புதிய கார்டூன் சீரியஸ் புதிய வாய்ப்புகளை அவருக்கு தேடி தந்தது.
கனவுகளில் நம்பிக்கை, திறமைகளை வளர்த்து கொள்வது, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது, நல்லநண்பர்கள், தொடர்புகளை உருவாக்கி கொள்வது, மற்றவர்கள் ஆலோசனைகளை கேட்டு கொள்வது.... கார்டன் ஒரு நல்ல உதாரணம்.
Fowl Language Comics – முகநூல் பக்கம் இருக்கிறது. விரும்புபவர்கள் தொடரலாம்.

Tuesday 9 January 2018

Sneha Village


AIDS – 2005ல் இந்தியாவில் 150000 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். UNAIDS ரிப்போர்ட் படி 2016ல் 80000 பேர் மட்டுமே இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அரசாங்கங்களின், தொண்டு நிறுவனங்களின் சீரிய முயற்சியே காரணம். அதோடு, Antiretroviral Therapy (ART) எனப்படும் தெரபி முறையும் காரணம். இந்த தெரபியினால், எய்ட்ஸை குணப்படுத்த முடியாது. ஆனால், எய்ட்ஸ் நோயையும், அது மற்றவர்களுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்தலாம்.
எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் நிலை கஷ்டமான ஒன்று. குழந்தைகளாக அவர்கள் வளரும் போது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அன்பும், ஆதரவும், நம்பிக்கையும அவர்களுக்கு கிடைக்காது. அதனால், அவர்களுக்கு தனி கவனமும், தனியான காப்பகமும் தேவையாயிருக்கிறது.
அப்படி ஒரு காப்பகம்தான், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ளது. ஸ்நேஹா சாரிடபிள் டிரஸ்ட் எனப்படும் அமைப்பு சிநேஹாகிராம் என்னும் பெயரிலே இந்த காப்பகத்தை நடத்துகிறது. தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து கிராமப்புற எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இங்கே தங்கியிருக்கின்றனர். ஸ்நேஹா டிரஸ்ட் மற்ற மாநிலங்களிலும் இது போல காப்பகங்கள் நடத்துகிறது. மொத்தம் 350 குழந்தைகள் இந்த காப்பகங்கள் மூலம் பயனடைகின்றனர்.
இப்போது, AR தெரபி மூலமாக இந்த குழந்தைகளின் வாழ்க்கையானது முன்பிருந்ததை விட நீண்டுள்ளது. ஒரு பேட்ச் மாணவர்கள் +2 முடிக்கப்போகிறார்கள். அதனால், 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை வாழ பணம் ஈட்டக்கூடிய தொழில்களையும் சொல்லி தர வேண்டியுள்ளது. இந்த காப்பகத்தில் பயிர் தொழில், தோட்டக்கலை, சமையல் வேலைகள் சொல்லி தரப்படுகின்றன.
சொல்லி தரப்படும் கல்வி என்பது வரையரைக்குட்பட்டது. தானே கற்று கொள்ளும் கல்வியே சிறந்தது. அதனால், இந்த காப்பகத்தின் நிர்வாகத்தில் ஒரு பகுதி இந்த குழந்தைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பெண்கள் அணி காய்கறிகளை பயிர் செய்கிறது. அதை விற்கும் பணி ஆண்கள் அணிக்கு. ஒரு வாரம் பெண்கள் அணி சமைத்தால், மறு வாரம் ஆண்கள் அணி சமைக்கவேண்டும்.
ஒரு பார்லிமெண்ட் வடிவத்திலே இந்த குழந்தைகள் தங்கள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். பிரதமர், அமைச்சர்கள் உண்டு. உதாரணமாக, இந்த 17 ஏக்கர் காப்பகம் முழுவதையும் ஆர்கானிக் முறையிலே பயிர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கவனித்து கொள்வது சுற்றுசூழல் அமைச்சருடைய பொறுப்பு. இப்படி ஒவ்வொரு அமைச்சரும் தமக்குரிய வேலைகளை செய்கின்றனர்.
கல்வி அமைச்சர், இனிமேல் பார்லிமெண்டில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதிலிருந்து இவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ந்துள்ளது.
ஒழுங்கான நேரத்தில் மருந்து சாப்பிடுவதும், சீரான உடற்பயிற்சி செய்வதும் இவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். காலையில் எழுந்ததும் ஓட்டப்பயிற்சி, பின்பு மற்ற உடற்பயிற்சிகள். காலையில் அனைவரையும் நேரத்திற்கு எழுப்பவதற்கு ஒருவர் பொறுப்பேற்றிருக்கிறார். அனைவரும் ஒழுங்காக மருந்துகள் எடுத்து கொண்டனரா என்பதை உறுதி செய்ய ஒருவர் பொறுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.
இங்கிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுமே சிறப்பானவர்கள்தான். பிரதமர் மாணிக்பிரபு இன்னும் கொஞ்சம் சிறப்பானவர். அவர் ஒரு தடகள வீரர். மாரத்தான் ஓடக்கூடியவர். பாஸ்டன், நெதர்லாண்ட்ஸ், கொழும்பு ஆகிய இடங்களில் நடந்துள்ள மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
சமூகத்தின் ஆதரவும் இருந்தால் இவர்களின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக மலரும் என்பதில் சந்தேகமேயில்லை.

Saturday 6 January 2018

ஒரு மாற்று திறனாளியின் சாதனை


50000 மரக்கன்று நடுவோம், ஒரு லட்சம் மரக்கன்று நடுவோம் என்று சில இயக்கங்கள் அறைகூவல் விடுகின்றன.... உண்மையில் அத்தனை மரக்கன்றுகளுக்கு எங்கே போவார்கள் என்று யோசித்ததுண்டா? ஆந்திராவில் ராஜமுந்திரி அருகிலிருக்கும் கடியம் என்னும் பகுதிக்கு போய்தான் அத்தனை மரக்கன்றுகளையும் வாங்கி வருகிறார்கள். கடியம் பகுதியில் என்ன விசேஷம்... பார்க்கலாமா?
கடியம் என்பது சீமாந்திரா பகுதியில் கோதாவரிக்கு சற்று தொலைவில் இருக்கும் கிராமம். இப்போது சுற்றியிருக்கும் கிராமங்களையும் சேர்த்து கடியம் மண்டலம் என்றே அந்த பகுதிக்கு பெயர் வந்துவிட்டது. இந்த மண்டலத்திற்கு பின்னால், அதன் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு மாற்று திறனாளியின் உழைப்பும் ஆர்வமும் இருக்கிறது.
பல்ல வெங்கண்ணா – ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த, போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்று திறனாளி. நடப்பதற்கே சிரமம்... ஆனால் விவசாயித்தில் பெரும் ஆர்வம். தந்தையின் மறைவிற்கு பின்னர், சகோதரர்கள் சொத்து பிரிக்கும் போது, ‘நடக்கவே சிரமப்படும் உனக்கு விவசாயம் நிலம் எதற்கு?’ என்று சொல்லி அரை ஏக்கர் நிலம் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதம் நிலமெல்லாம் சகோதரர்களே பாகம் பிரித்து கொண்டனர். இது நடந்தது 1952ல்.
தன் உடல் ஊனத்தை காட்டி சொந்த சகோதரர்களே இகழ்ந்ததால் பல்ல வெங்கண்ணாவிற்கு கோபம் வந்தது. ஆனால், தன் கோபத்தை சரியான திசையிலே திருப்பினார். இருக்கும் அரை ஏக்கர் நிலத்தை கொண்டு முன்னேற தீர்மாணித்த அவர், அந்த வளமான பூமியிலே ஒரு நர்சரி தோட்டம் ஆரம்பித்தார். அயராத உழைப்பு, நேர்மை – அவருக்கு வெற்றியை தந்தது. அரை ஏக்கர் நர்சரி இன்று 150 ஏக்கராக பரந்திருக்கிறது. இத்துடன் நின்றிருந்தால் அது வெங்கண்ணாவின் தனிப்பட்ட வெற்றியாக இருந்திருக்கும், அவ்வளவுதான்! அவர் ஒரு மாமனிதராகி இருக்க மாட்டார்.
வெங்கண்ணா, விவசாயத்தில் நஷ்டப்பட்ட மற்ற விவசாயிகளையும் நர்சரி ஆரம்பிக்க ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு உதவிகள் செய்தார். மற்றவர்கள் நர்சரி ஆரம்பிப்பதற்கு வெங்கண்ணா உதவி செய்வதால் கடைசியில் அவன் நஷ்டப்படப்போகிறான் என்று அவர் காது படவே சொன்னார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதை வெங்கண்ணா நிறுத்தவில்லை.
இன்று கடியம் மண்டலத்தில் (11 கிராமங்கள்) 1300க்கும் மேற்பட்ட செழிப்பான நர்சரிகள், 3500 ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கின்றன. 20000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு. இப்படி தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவியதால்தான் வெங்கண்ணா ஒரு மாமனிதராக உயர்ந்திருக்கிறார்.
இந்தியா முழுக்க மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்கிறார்கள். பல அரியவகை தாவரங்களை வளர்க்கிறார்கள் என்பதும் விசேஷம். இமயத்தில் மட்டுமே இருக்கும் பிரம்மகமலம், ருத்திராக்ஷம் போன்றவற்றை கூட வளர்க்கிறார்கள்
அரசாங்கமும் இவர்களுக்கு உதவுகிறது. நர்சரிகளுக்கு இலவச மின்சாரம் தருகின்றனர். இப்போது மானியத்துடன் குறைந்த விலையில் சோலார் பேனல்களும் தருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்கென்றே தனியாக ஒரு தோட்டக்கலை வல்லுனரை நியமித்திருக்கிறது.
ஆனால், செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது. கடியம் பகுதியில் தோட்டக்கலை பல்கலைகழகம் ஒன்று ஆரம்பிப்பதாக அறிவித்து பல வருடங்கள் ஆகின்றன. அதே போல தோட்டங்களுக்கு காயர் பித் (Coir Pith) அதிகமாக தேவைப்படுவதால் காயர் போர்டு உதவியோடு தயாரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும். மலர்களுக்கான பல்கலைகழகம் ஆரம்பிப்பதாகவும் சொன்னார்கள். விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு உதவ வேண்டும்.
ஒரு தனி மனிதர் அறுபது ஆண்டு காலத்தில் கொண்டு வந்த மாற்றத்தை, ஒரு அரசாங்கம் நினைத்தால் விரைவாகவே கொண்டு வரமுடியும். கடியம் மண்டலத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

Friday 5 January 2018

Equifax மற்றும் ஆதார் திருட்டு


Equifax என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிரெடிட் ரிப்போர்ட் கம்பெனி. அதன் வாடிக்கையாளர்களின் சகல விஷயங்களும் (Social Security Number (SSN) உட்பட) அதன் வசம் இருக்கும். கடந்த மே மாதத்தில் Equifax database சில புத்திசாலி திருடர்களால் ஹேக் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 14.5 கோடி அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. பெரிய அளவிலான திருட்டு... அமெரிக்க மக்கள்தொகையே 32 கோடிதான்.
அரசாங்கம் பரிந்துரைத்த சில செக்யூரிட்டி எச்சரிக்கை நடவடிக்கைகளை Equifax கடைப்பிடிக்கவில்லையென்பது குற்றச்சாட்டு. திருட்டு கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை பொதுமக்களுக்கு சொல்லவில்லை. ஆறு வாரங்கள் அமுக்கமாக இருந்து கொண்டு, 3 பெரிய தலைகள் அவர்களுக்கு Equifax-ல் இருந்த பங்குகளை பல மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார்களாம்.
இப்படி, SSN திருடப்பட்டதால் பல விதமான திருட்டுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி ரீஃபண்டுகள் மோசடியாக வாங்கப்படும். கிரெடிட் கார்டு திருட்டுகள் அதிகமாகும். வாடிக்கையாளர் பெயரிலே வேறு ஒருவர் கடன் வாங்கலாம். இன்னும் என்னென்ன விதமான திருட்டுகள் நடக்கும் என்று சொல்லமுடியாது.
அரசாங்கத்தால் இந்த திருட்டுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. வருமான வரித்துறையால் முடிந்தது எல்லாம், ‘சீக்கிரமாக உங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துவிடுங்கள்” என்ற அறிவுரைதான்.
Credit freeze எனப்படும் பாதுகாப்பு முறையை பரிந்துரை செய்கிறார்கள். அதாவது, வாடிக்கையாளர்களின் சம்மதம் இல்லாமல் கிரெடிட் ரேட்டிங் கம்பெனிகள் யாருக்கும் ரிப்போர்ட் தரக்கூடாது என்பதே credit freeze. ஆனால், அதற்கு கட்டணம் உண்டு. Equifax வேறு வழியில்லாமல் கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால், இதிலும் ஒரு கஷ்டம் உண்டு. Equifax ஒரே ஒரு ரேட்டிங் கம்பெனி கிடையாது. TransUnion, Experian போன்ற மற்ற கம்பெனிகளும் உண்டு. அவர்கள் credit freezeற்கு கட்டணம் விதிக்கிறார்கள். அவர்களிடமும் credit freeze செய்யவேண்டும். இல்லையேல், உபயோகமில்லை. (கட்டணம் வாங்குவது கம்பெனிகளின் முடிவு. அமெரிக்க அரசாங்கம் இதில் தலையிட முடியாது)
இப்போது இந்தியாவின் ஆதார் மாதிரி பயோமெட்ரிக்கோடு கூடிய அடையாளம் வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். SSN, நம்மூர் ரேஷன் கார்டு போல 1930களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷயம். இந்த டிஜிட்டல் காலத்தில் அதன் உபயோகம் சரியல்ல என்றே பலரும் கூறுகின்றனர். (பயோமெட்ரிக் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பது அடுத்த விவாதம்)
ஆனால், ஏதாவது செய்தாக வேண்டிய நெருக்கடியில் அமெரிக்கா இருக்கிறது. காரணம், நடந்திருக்கும் திருட்டினால் அப்பாவி மக்கள் ஆயுளுக்கும் பாதிக்கப்படுவார்கள். அவர்களது பிறந்த நாள் விவரங்களை எல்லாம் மாற்ற முடியாது, அல்லவா? கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் நம்பர் என்று எத்தனை விவரங்களை மாற்றுவார்கள்? எவ்வளவு செலவு பிடிக்கும்? மண்டையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது, இந்தியாவின் ஆதார்.... ரொம்பவே பாதுகாப்பான சிஸ்டம்.... டேட்டா திருடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவது. டிரிப்யூன் பத்திரிக்கை ஒரு குட்டி ஆபரேஷன் நடத்தியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஏஜெண்டிற்கு 500 ரூபாய் பணம் கட்டினால் பத்து நிமிடத்தில் UIDAI databaseக்கு access கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட 90 கோடி இந்தியர்களின் தரவுகள்... புகைப்படம், செல்பேசி எண், முகவரி, இமெயில் முகவரி விவரங்களுடன். நல்லவேளையாக, கைரேகை, ஐரிஸ் விவரங்கள் கிடைப்பதில்லை. இன்னொரு 300 ரூபாய் செலுத்தினால் ஆதார் அட்டை பிரிண்ட் செய்யும் softwareஐயும் தருகிறார்கள்.

இது போல UIDAI database-ற்கு கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு access இருப்பதாக தெரியவந்துள்ளது. UIDAI இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இப்போது ஆதாருடன் வங்கி கணக்குகள், சொத்து, வருமான வரி மற்றும் இன்னபிற விவரங்களையும் இணைத்தால் என்ன மாதிரியான திருட்டுகள் நடக்கும்? நாம் பாதுகாப்பாக உள்ளோமா? இண்டர்நெட் பாங்கிங் சௌகரியங்களுக்காக விருப்பப்பட்டு நான் ரிஸ்க் எடுத்தால் வேறு விஷயம்....ஆனால், என்னை ரிஸ்க் எடுக்க கட்டாயப்படுத்தினால்...? Data theft மூலம் நடக்கும் திருட்டிற்கு இன்ஷூரன்ஸ் உண்டா? அதற்கான பிரீமியத்தை அரசாங்கம் கட்டுமா? எத்தனை கேள்விகள், பதில்தான் கிடைக்காது...!

Wednesday 3 January 2018

Debit Card Transaction Charges


டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிவர்த்தனை கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி டெபிட் கார்டு, பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது.
இந்த திட்டம் 01.01.2018 முதல் அமலுக்கு வந்தது. இது 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். - செய்தி
டிஜிட்டல் பேமெண்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது ஏற்புடைய ஒன்றுதான். வங்கிகள் உள்கட்டமைப்புக்கு செலவழித்த தொகையை வேறு எப்படி வசூல் செய்வது...? அடுத்த இரண்டு வருடங்களுக்கு அரசு அந்த கட்டணத்தை வரிப்பணத்திலிருந்து எடுத்து தரப்போகிறது...
இதில் இருக்கும் பொருளாதார கொள்கை இடியாப்பத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கட்டணம் வசூலிக்காதே என்று அரசு வங்கிகளுக்கு சொல்ல முடியாது. காரணம், அதனால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும். அதே சமயம், அரசின் கொள்கையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
கட்டணம் அதிகம் வசூலிக்காமல் வங்கிகளை கட்டுப்படுத்துதே அரசின் செயலாக இருக்கவேண்டும். ஆனால், அது அரசாங்கம் வர்த்தகத்தில் தலையிடும் மாபாதக (!?) செயலாக முடிந்துவிடும். அதனால், மக்கள் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கொடுக்கப்போகிறது.
வரிப்பணத்தை மக்களுக்கு மானியமாக கொடுத்தால் அது பொருளாதார கொள்கைக்கு எதிரானது. ஆனால், அதே மக்கள் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கொடுத்தால் அது ஊக்கப்படுத்தும் நடவடிக்கை. வங்கி கட்டணத்தை குறைக்குமாறு அரசாங்கம் சொன்னால், அது வர்த்தகத்தில் தலையிடும் விஷயம்.
என்ன பொருளாதார கொள்கையோ...?