Monday 6 August 2018

Kiki – Cochin man – Jaipur Police


கொச்சியை சேர்ந்த ஜவஹருக்கு ஏகப்பட்ட போன் கால்கள்… பல வருடங்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட அவருக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்கள். அவர் பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட போன்கால்கள்.

காரணம், ஜெய்ப்பூர் போலீஸ் வெளியிட்ட ஒரு விளம்பரம்… கிகி சேலன்ஜ் செய்யும்போது உயிரிழந்த வாலிபர் என்று ஜவஹரின் படம் போட்டு விளம்பரம் வந்திருந்தது.

ஆனால், ஜவஹர்தான் உயிரோடு இருக்கிறாரே…! அதுதான் காமெடி…! ஜவஹரின் உறவுக்காரர் ஒருவர் விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுப்பவர். ஒரு நாள் கேஷுவலாக ஜவஹரை போட்டோ எடுத்தவர், அதை ஷட்டர்ஸ்டாக் என்னும் வலைத்தளத்திலே வெளியிட்டார். அந்த தளம் போட்டோக்களை விற்பனை செய்யும் ஒரு பிரபல தளம். ஜெய்ப்பூர் போலீஸ் மாடர்ன் லுக்கில் இருக்கும் ஜவஹரின் போட்டோவை எடுத்து அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டது.

ஜெய்ப்பூர் காவல்துறையை பொருத்தவரை அவர்கள் காசு கொடுத்துதான் போட்டோ வாங்கினார்கள்…. அதை விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வாதம். இது சரியான வாதமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன கிகி சேலன்ஜ்? Drake என்னும் பாடகர் ‘In my feelings‘ என்றொரு வீடியோ பாடலை வெளியிட்டார். Shiggy என்றொரு சோஷியல் மீடியா ஸ்டார் (18 லட்சம் followers) அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார்.  Shiggy- யின் வீடியோவினால் அந்த பாட்டு செம பிரபலம் ஆனது.
Shiggy and Drake

ஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் சும்மா இல்லாமல் ஒரு பாலத்தின் மேல் ஏறி அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அதையும் வீடியோ எடுத்து போட்டார். அதிலிருந்து ‘Kiki Challange’  அல்லது ’Shiggy Challenge’ ஆரம்பித்தது.

சும்மா அந்த பாட்டிற்கு நடனம் ஆடாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். ஓடுகிற காரில் இருந்து கீழே இறங்கி நடனம் ஆடவேண்டும்…. நடனம் ஆடி கொண்டே காரை தொடரவேண்டும். இதுதான் தற்போதைய சாலன்ஜ்.

இந்த கூத்திலே பலருக்கு அடிபடுகிறது… மோசமான விபத்துகள் நடக்கின்றன. Shiggy – யே ஒரு தொலைக்காட்சி பேட்டியிலே ஜாக்கிரதையாக நடனமாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நம்மூரிலும் கிகி சேலன்ஜ் கூத்து ஆரம்பித்தது. அதனால்தான், ஜெய்ப்பூர் போலீஸ் கிகி சேலன்ஜிற்கு எதிராக விளம்பரம் வெளியிட, கொச்சினில் இருக்கும் ஜவஹருக்கு போன்கால்கள் குவிந்தன.

இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாவின் பவர் என்ன என்பதை ஜவஹர் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஜவஹரோ, “பரவாயில்லையே, நான் இறந்தால் இத்தனை பேர் விசாரிக்கிறார்களே…?“ என்று நடந்ததை பாஸிட்டிவ்வாக எடுத்து கொண்டு போய்விட்டார்.

No comments:

Post a Comment