Friday 14 June 2019

முர்முரேஷன் (Murmuration)


பறவைகள் கூட்டம் கூட்டமாக, டிசைன் டிசைனாக பறப்பதை முர்முரேஷன் என்பார்கள். கூட்டம் என்றால் பெருங்கூட்டம்தான்… ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்று சேர்ந்து பறக்கும்.

இத்தனை பறவைகள் ஒன்று சேர்ந்து, வானத்திலே அழகாக கோலம் போடுவதை போன்று உருவாக்கும் டிசைன்கள் ஒரு நொடியில் மாறிவிடுவது கண்களுக்கு விருந்தாகும்.

பில்பர் என்னும் புகைப்படக்கலைஞர் ஒருவர், ஸ்பெய்ன் நாட்டில் இப்படிப்பட்ட முர்முரேஷன் படங்களை எடுத்தார். படம் எடுக்கும் போது எப்பேற்ப்பட்ட பொக்கிஷத்தைப் படம் பிடித்திருக்கிறோம் என்று அவருக்கே தெரியாது. காரணம், கூட்டமாக பறக்கும் பறவைகள் நொடிக்கொருதரம் வடிவங்களை மாற்றிக் கொள்ளும்.

பின்னர், வீட்டிற்கு வந்து படங்களை கம்யூட்டரில் அப்லோட் செய்து பார்த்து வியந்தார். இந்தப் படங்கள் அவருக்குப் புகைப்படப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்று தருகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
Image may contain: sky, mountain, cloud, nature and outdoorImage may contain: sky, water, outdoor and nature
Image may contain: sky, outdoor and nature

Thursday 13 June 2019

இரவு உயிரிகள் (Nocturnal)


மனிதர்களுடைய நடமாட்டத்திற்கு அஞ்சி, பிற உயிரினங்கள், குறிப்பாக பாலூட்டிகள், தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறதாம்.

6 கண்டங்களில் 62 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் காரணமாக, உயிரினங்கள் இரை தேடும் நேரத்தை மாற்றிக் கொள்வது, குறைந்த நேரமே இரை தேடுவது, வழக்கமாக தாங்கள் புழங்கும் இடத்தை மாற்றிக் கொள்வது என்று பலவிதங்களில் மாறி வருகின்றன.

சில உயிரினங்கள் மனிதர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக இரவு உயிரிகளாக (Nocturnal) மாறுகின்றனவாம்.

இதே போல வெயில் கொளுத்தினால் இந்தியாவில் மனிதர்களும் இரவு உயிரிகளாக மாற வேண்டியதுதான்.


Thursday 6 June 2019

இந்தியாவில் 44% பேருக்கு தாய்மொழி ஹிந்தியா?


“ஹிந்தியில் இருப்பது இரண்டே இலக்கியங்கள்தான் – ஒன்று, துளசி ராமாயணம். இன்னொன்று ரயில்வே கைடு” என்று அண்ணா கூறியதாக ஒரு ஜோக்கைப் படித்தேன். ஜோக்கிற்கு சிரிக்கும்போதே சந்தேகம் வந்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன்.

துளசியின் ராமாயணமான ராம்சரிதமானஸ் ‘அவதி’ என்னும் மொழியில் எழுதப்பட்டது. அவதி என்பது தெற்கு நேபாளம், அதற்கு கீழே இருக்கும் உ.பி பகுதிகளில் பேசப்படும் மொழி. அது ஒரு தனிமொழி என்று வாதிடுவோரும் உண்டு… ஹிந்தியின் ஒரு வட்டார வழக்குதான் என்று கூறுபவர்களும் உண்டு.

இந்திய சென்சஸ் படி அவதியைத் தாய்மொழியாகக் கொண்ட 38 லட்சம் பேரும் இந்தி பேசுபவர்கள்தான். இப்படி எத்தனை மொழிகள் ஹிந்தியின் வட்டார வழக்காகக் கணக்கிடப்படுகிறது என்று பார்த்தால், எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

ஹிந்திக்கு கீழே 55 வட்டாரவழக்குகள் இருக்கின்றன. 56வது Others என்று துக்கடா கேட்டகரி மொழிகளை மட்டுமே 1.67 கோடி பேர் பேசுகிறார்கள்.

சரி எந்த வட்டார வழக்குகள்/ மொழிகள் நிறைய பேசப்படுகின்றன? போஜ்பூரி 5.05 கோடி, ராஜஸ்தானி 2.58 கோடி, சத்தீஸ்கர்ஹி 1.62 கோடி, மகதி 1.27 கோடி, ஹர்யான்வி 1 கோடி மக்களுக்குத் தாய்மொழி. இதில் எது வட்டார வழக்கு, எது தனி மொழி? தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டாலே அது ஹிந்திதான் என்று எடுத்துக் கொள்கிறார்கள் போல.
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சென்சஸ் சொல்லும் 52.83 கோடியில் வட்டார வழக்குகள் பேசுபவர்கள் 20.61 கோடி(39%). இப்போது மற்ற முக்கிய மொழிகளைப் பார்ப்போம். (அதாவது, 5 கோடி பேருக்கு மேல் பேசும் மொழிகள்)

பெங்காலி 9.72 கோடி (வட்டார மொழி பேசுவோர் 1.03%), மராத்தி 8.30 கோடி (0.24%), தெலுங்கு 8.11 கோடி (0.25%), தமிழ் 6.90 கோடி (0.14%), குஜராத்தி 5.55 கோடி (0.72%), உருது 5.07 கோடி(0.11%).ஆக, 

முக்கிய மொழிகளில் வட்டார மொழியினர் வெறும் கால் சதவிகிதம்தான். குஜராத்தியில் முக்கால் சதவிகிதம், அதிகபட்சம் பெங்காலியில் கூட ஒரு சதவிகிதம்தான். ஆனால், ஹிந்தியில் மட்டும் வட்டார மொழியினர் 39%. வாவ்..! (போஜ்பூரி பேசுபவர்கள் மட்டுமே 5.05 கோடி)

உண்மையிலேயே அவை தனி மொழிகளா, வட்டார மொழிகளா என்னும் விவாதத்தில் இறங்க எனக்குத் தகுதி கிடையாது. ஆனால், 39% என்பது பெரிய நம்பர்… சந்தேகத்தைத் தருகிறது.

ஹிந்தியின் ஆதிக்கத்தால் அவதி, போஜ்பூரி போன்ற மொழிகள் சொல்வளத்தை இழந்துவருகின்றன. வெளியிடங்களில் வேற்றுமொழி ஆதிக்கம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளிலும் நுழைந்து தாய்மொழியை அழித்துவிடுகிறது.

நேற்று ஒரு பதிவைப் பார்த்தேன். உ.பி மாநிலத்தில் ஹிந்தி பாடத்தில் 10 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்தனர் என்றால் நாம் சிரிக்கிறோம். ஆனால், இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தாய்மொழி இல்லை. அதனால்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று பதிவர் கருத்துக் கூறியிருந்தார். சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.

இப்படி வட்டாரமொழிகளை ஏன் ஹிந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்தியாவில் 44% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்வதற்கும், இந்தியாவில் 26% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கும், தாக்கத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்...!

ஆதாரம் – 2011 சென்சஸ் அறிக்கை (http://www.censusindia.gov.in/2011Cen…/C-16_25062018_NEW.pdf)

Saturday 25 May 2019

Manekken Pis


மானேகென் பிஸ் என்பது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இரண்டு அடி உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலை. மானேகன் பிஸ் என்றால் the litter pisser, அதாவது சிறுநீர் கழிக்கும் சிறுவன் என்று அர்த்தம்.

ஆமாம், சிறுநீர் கழிக்கும் சிறுவன் சிலைதான் பிரஸ்ஸல்ஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. பிரஸ்ஸல்ஸ் நகர மக்களின் நகைச்சுவை உணர்வுக்கு அடையாளமாக இந்தச் சிலை விளங்குகிறது. நகைச்சுவைக்கு மட்டுமல்ல, அவர்களின் தன்மான உணர்வுக்கும் இந்தச் சிலை அடையாளம் எனலாம்.

இந்தச் சிலையை எப்போது நிறுவினார்கள் என்று தெரியவில்லை. ஏன் நிறுவினார்கள் என்று பல கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்தக் கதை இதுதான். ஒரு முறை பிரஸ்ஸல்ஸ் நகரம் முற்றுகைக்கு உள்ளானது. எதிரிகள் கோட்டையை வெடி வைத்துத் தகர்க்க பார்த்திருக்கிறார்கள். எதிரிகள் இடையே உளவு பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், பற்றியெரிந்த திரி மீது சிறுநீர் கழித்து அதை அணைத்திருக்கிறான். பிரஸ்ஸல்ஸ் நகரையே காப்பாற்றிய இந்தத் தீரச்செயலைப் (!) பாராட்டி சிலை வைத்தார்களாம். (ஏதோ தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சீன் பார்த்த ஞாபகம் இருக்கிறது..!)

1451-ம் வருடத்தைய பிரஸ்ஸல்ஸ் நகர குடிநீர் சப்ளை கட்டுமானம் குறித்த ஆவணங்களிலேயே இந்தச் சிலையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. 1619-20ல் பழைய சிலை அகற்றப்பட்டுப் புதிதாக வெண்கல சிலையொன்று அமைக்கப்பட்டது. இப்போது இருக்கும் சிலை ஒரிஜினல் சிலை கிடையாது. ஒரிஜினலை மியூசியத்தில் வைத்துவிட்டு, அதே போல டூப்ளிகேட் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிலை பிரஸ்ஸல்ஸ் நகர அடையாளம் என்பதால் போர்களில் இதைத் சேதப்படுத்த முயன்றிருக்கின்றனர். திருடர்கள் இதைக் களவாட பார்த்திருக்கின்றனர். இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் சிறப்புப்படைப் பிரிவொன்று இந்தச் சிலையைத் திருட முயல, மக்கள் வீராவேசமாக கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். மக்கள் எதிர்பைக் கண்டு திகைத்த பிரான்ஸ் மன்னர் 15ம் லூயி, திருட்டு முயற்சியைக் கைவிட்டு, தங்க அங்கி ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இது போல பல்வேறு நாட்டினர் இந்தச் சிலைக்கு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். (போன மே மாதம் வரை இதுமாதிர 1000 உடைகள் சேர்ந்திருக்கின்றன)




விசேஷ நாட்களில் இந்தச் சிலைக்கு விதவிதமான ஆடை அலங்காரங்கள் செய்வர். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பீரை சிறுநீராக கழிப்பது போல செட்டப் செய்வார்கள். அந்தப் பீரை அனைவரும் குடித்து மகிழ்வார்கள்…!

அடுத்த சனிக்கிழமை, அதாவது, ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினமாம்…. அன்று இந்தச் சிறுவன் பாலைக் கழிக்கப் போகிறானாம். அதைப் பிடித்துக் குடித்துக் கொண்டாட போகிறார்கள்.

என்னது, ‘அவர்’ எப்போ பிரஸ்ஸல்ஸ் போவாரா? ஆளை விடுங்க…!

Friday 19 April 2019

சம்மதத்தோடு உறவு, கற்பழிப்பா?


போன வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு…

சத்தீஸ்கரில் ஒரு ஆள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தார். இரண்டு வீட்டின் சம்மதமும் அந்தத் திருமணத்திற்கு இருந்தது. பிற்பாடு என்ன காரணமோ, அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் ஆனது. இந்த விஷயம் முதல் பெண்ணிற்கு தெரியாது.

அப்புறம் ஆசாமி என்ன பண்ணினார் என்றால், முதல் பெண்ணின் சம்மதத்தோடு ஜாலியாக இருந்தார். வேலை முடிந்ததும் இந்தப் பெண்ணைக் கழட்டி விட்டுவிட்டு நிச்சயம் செய்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சந்தேகமே இல்லாத, பக்கா திட்டமிட்ட ஏமாற்று வேலை…!

போலீஸ் புகார், வழக்கு என்று கதை போனது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், அந்த நபர் மேல் கற்பழிப்புக் குற்றம் சுமத்தி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் சு.கோர்ட் கற்பழிப்புக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது, தண்டனையை மட்டும் 7 ஆண்டுகளாகக் குறைத்திருக்கிறது.

எனக்கு என்ன விசித்திரமாகப் படுகிறதென்றால், சில காலத்திற்கு முன்னால் லிவ்இன் உறவுகளை இதே சு.கோர்ட் அங்கீகரித்தது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, லிவ்இன் உறவில் இருந்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், சம்மதத்தோடு நடந்த உறவு கற்பழிப்பாக மாறிவிடுமா? என்ன லாஜிக்?

இதற்கு கோர்ட் அளித்திருக்கும் விளக்கம்தான் தலையைச் சுற்ற வைக்கிறது. "It tantamounts to a serious blow to the supreme honour of a woman and offends both her esteem and dignity."

பெண்ணின் கண்ணியமும், கௌரவமும் கற்பில் இருக்கிறது போன்ற சிந்தனைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு வைத்துக் கொள்ளப்போகிறோம்? கற்பு என்னும் நிலைப்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு கற்பழிப்புக் குற்றத்தைப் பார்ப்பதால்தான் marital rape வன்முறையாக இருந்தாலும் இந்திய சட்டப்படி அது தவறாகக் கருதப்படவில்லை. திருமணம் இல்லையென்றால் சம்மதத்தோடு நடக்கும் உறவும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.

With due respect to Supreme Court, சம்மதத்தோடு உறவு கொள்வதைக் கற்பழிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. லிவ்இன் தீர்ப்போடு இது முரண்படுவதாகக் கருதுகிறேன்.

Ref - https://www.ndtv.com/india-news/sex-on-false-promise-of-marriage-is-rape-supreme-court-2023409